மோசசு நாகமுத்து

மோசசு வீரசாமி நாகமுத்து (Moses Veerasammy Nagamootoo, பிறப்பு: 30 நவம்பர் 1947) கயானா அரசியல்வாதியும் எழுத்தாளரும் ஆவார். இந்திய கொடிவழித் தமிழரான இவர்[1] கயானாவின் பிரதமராக 2015 மே 20 அன்று பதவியேற்றார்.[2]

மோசஸ் நாகமுத்து
Moses Nagamootoo
கயானா பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 மே 2015
குடியரசுத் தலைவர் டேவிட் கிரேஞ்சர்
முன்னவர் சாம் ஐன்ட்சு
தனிநபர் தகவல்
பிறப்பு 30 நவம்பர் 1947 (1947-11-30)
விம், கயானா
அரசியல் கட்சி தேசிய ஒற்றுமைக்கான கூட்டு - மாற்றத்திற்கான கூட்டமைப்பு

வாழ்க்கைச் சுருக்கம்

நாகமுத்து கயானாவின் பெர்பிசு மாவட்டத்தில் இந்தியக் கொடிவழித் தமிழ் குடும்பம் ஒன்றில் விம் என்ற ஊரில் பிறந்தார். ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய இவர் பின்னர் வழக்கறிஞர் ஆனார்.

அரசியலில்

1964 ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றக் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கினார். 1992 ஆம் ஆண்டில் அக்கட்சியின் சார்பில் கயானா நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தகவல்துறை அமைச்சராகவும், உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றினார். செட்டி ஜெகன், சாம் ஐன்ட்சு, ஜனெட் ஜெகன், பாரத் ஜாக்தியோ ஆகிய சனாதிபதிகளின் அமைச்சரவைகளில் உறுப்பினராக இருந்தார். 2000 ஆம் ஆண்டில் தனது அமைச்சர் பதவியைத் துறந்தார். 2008 ஆகத்து 2 இல் நடைபெற்ற மக்கள் முன்னேற்றக் கட்சியின் 29வது காங்கிரசு மாநாட்டில் ஐந்தாவது அதிகப்படியான வாக்குகள் (595) பெற்று கட்சியின் மத்திய குழுவுக்குத் தெரிவானார்.[3] 2011 ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றக் கட்சியில் இருந்து விலகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்திருந்தார்.

2011 ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் நாகமுத்து மக்கள் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 2011 அக்டோபர் 24 இல் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அவர் 2011 அக்டோபரில் "மாற்றத்திற்கான கூட்டமைப்பு" என்ற அரசியல் கட்சியில் இணைந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 மே மாதத்தில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, நாகமுத்து கயானாவின் பிரதமராகவும், முதலாவது பிரதி சனாதிபதியாகவும் 2015 மே 20 அன்று பதவியேற்றார்.[2][4]

எழுத்தாளராக

2001 ஆம் ஆண்டில் இவர் Hendree's Cure என்ற புதினத்தை எழுதி வெளியிட்டார். 1950களிலும், 1960களிலும் விம் கிராமத்தில் குடிபுகுந்த மதராசி மீனவர்களின் வாழ்க்கையை விளக்கும் புதினமாக இதனை எழுதினார்.

மேற்கோள்கள்

  1. குலசேகரம் சஞ்சயன் (15 சூன் 2015). "First Tamil Prime Minister". சிறப்பு ஒலிபரப்புச் சேவை. பார்த்த நாள் 15 சூன் 2015.
  2. "Sixteen ministers sworn in", Stabroek News, 21 மே 2015.
  3. Press release on Central Committee election, ஆகத்து 3, 2008.
  4. "David Arthur Granger sworn in as Guyana’s 8th Executive President". Guyana Chronicle (18 மே 2015). பார்த்த நாள் 18 மே 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.