மிசேல் ஜொட்டோடியா

மிசேல் ஜொட்டோடியா (Michel Am-Nondokro Djotodia) மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசியல்வாதியும், இராணுவத் தலைவரும் ஆவார். இவர் 2013 மார்ச் 24 இல் பிரான்சுவா பொசிசேயின் ஆட்சியைக் கவிழ்த்து நாட்டின் அரசுத்தலைவரானார்.[1] இவர் 2012 ஆம் ஆண்டில் பிரான்சுவா பொசிசேவுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய செலேக்கா கிளர்ச்சிக் குழுவின் தலைவர் ஆவார். 2013 பெப்ரவரியில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களை அடுத்து இவர் தேசியப் பாதுகாப்புக்கான பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

மிசேல் ஜொட்டோடியா
Michel Djotodia
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் 5வது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
24 மார்ச் 2013
பிரதமர் நிக்கொலாசு தியங்காய்
முன்னவர் பிரான்சுவா பொசிசே
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பிரதிப் பிரதமர்
பதவியில்
3 பெப்ரவரி 2013  24 மார்ச் 2013
பிரதமர் நிக்கொலாசு தியங்காய்
தனிநபர் தகவல்
பிறப்பு மிசேல் ஆம்-நொண்டோக்ரோ ஜொட்டோடியா
1949?
வக்காகா, மத்திய ஆபிரிக்கக் குடியரசு
அரசியல் கட்சி ஒற்றுமைக்கான சனநாயக இயக்கங்களின் ஒன்றியம்

வாழ்க்கைச் சுருக்கம்

ஜொட்டோடியா வக்காகா என்ற நகரில் பிறந்தார். சோவியத் ஒன்றியத்தில் 10 ஆண்டுகள் தங்கியிருந்து உயர்கல்வி கற்றவர். அங்கேயே திருமணம் புரிந்தார். இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. பல மொழிகள் தெரிந்தவர்.[2] சூடானின் நியாலா நகரில் தூதுவராகப் பணியாற்றினார். ஒற்றுமைக்கான சனநாயக இயக்கங்களின் ஒன்றியம் என்ற கட்சியின் தலைவராக இருந்தார்.

2004-2007 போர்க்காலத்தில் ஜொட்டோடியா பெனின் நாட்டில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்தார். 2007 நவம்பரில் பெனின் நாட்டுப் படையினரால் கைது செய்யப்பட்டு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுடன் அமைதிப் பேச்சுக்களில் பங்குபற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னர் 2008 பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டார்.

டிசம்பர் 2012 ஆம் ஆண்டில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய செலேக்கா போராளிக் குழுவின் தலைவராக இருந்து செயல்பட்டார். சனவரி 2013 அமைதிப் பேச்சுக்களில், அரசுத்தலைவர் பொசிசே இவரைப் பிரதமராக நியமிப்பதாக ஒப்புக் கொண்டு போராளிகளை அரசில் இணைத்துக் கொள்ளவும் இணங்கினார். 2013 பெப்ரவரி 3 ஆம் நாள் தேசிய இணக்க அரசு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பிரதமராக நிக்கொலாசு தியகாய் நியமிக்கப்பட்டார். ஜொட்டோடியாவுக்கு பாதுகாப்புத் துறையில் முக்கிய பதவியான பாதுகாப்புக்கான பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது.[3]

பொசிசே தனது உறுதிமொழிகளைப் பேணத் தவறிவிட்டார் என்ற குற்றஞ்சாட்டி 2013 மார்ச் மாதத்தில் அமைதி உடன்பாட்டை ஜொட்டோடியா புறக்கணித்தார். செலெக்கா போராளிகள் மேலும் பல நகரங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.[4] சில நாட்கள் இடம்பெற்ற சண்டையை அடுத்து தலைநகர் பாங்கியை போராளிகள் கைப்பற்றினர். பொசிசே நாட்டை விட்டு வெளியேறினார். ஜொட்டோடியா தன்னை அரசுத்தலைவராக அறிவித்தார்.[5]

மேற்கோள்கள்

  1. "Centrafrique: Michel Djotodia déclare être le nouveau président de la république centrafricaine". Radio France International (2013-03-24). பார்த்த நாள் 2013-03-24.
  2. Michel Djotodia: Central African Republic rebel leader, பிபிசி, மார்ச் 26, 2013
  3. "Centrafrique : Le gouvernement d'union nationale est formé", Xinhua, 4 பெப்ரவரி 2013.
  4. Hippolyte Marboua and Krista Larson, "Central African Republic rebels threaten new fight", அசோசியேட்டட் பிரஸ், 18 மார்ச் 2013.
  5. "C.African Republic rebel chief to name power-sharing government", Reuters, 25 March 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.