மார்க்கண்டேய கட்சு
மார்க்கண்டேய கட்சு (Markandey Katju, பிறப்பு: செப்டம்பர் 20, 1946) இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவராக இருந்தவர். இதற்கு முன் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாகவும் உயர்நீதி மன்றங்களில் முதன்மை நீதிபதியாகவும் இருந்தார்.[2][3]
மார்க்கண்டேய கட்சு | |
---|---|
![]() | |
இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவர் | |
பதவியில் அக்டோபர் 5, 2011 – அக்டோபர் 5, 2014 | |
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் ஏப்ரல் 10, 2006 – செப்டம்பர் 19, 2011 | |
தலைமை நீதிபதி, தில்லி உயர் நீதிமன்றம் | |
பதவியில் அக்டோபர் 12, 2005 – ஏப்ரல் 10, 2006 | |
தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம் | |
பதவியில் நவம்பர் 28, 2004 – அக்டோபர் 10, 2005[1] | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 20 செப்டம்பர் 1946 |
பிறப்பும் படிப்பும்
மார்க்கண்டேய கட்சு லக்னோவில் காசுமீரப் பண்டிதர் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை எஸ். என். கட்சு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணி புரிந்தவர்[4]. இவருடைய தாத்தா டாக்டர் கைலாசு நாத் கட்சு சிறந்த வழக்கறிஞராகவும் இந்திய விடுதலை இயக்க வீரராகவும் இருந்தவர். பிற்காலத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சராகவும், மேற்கு வங்காள ஆளுநராகவும், பின்னர் ஒரிசா ஆளுநராகவும் இருந்தார்[5].
1967 இல் மார்கண்டேய கட்சு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். சமற்கிருதம், இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல், குமுகவியல், மற்றும் சட்டவியல் ஆகிய துறைகளில் நாட்டம் கொண்டிருந்தார்[6]. பின்னர் புது தில்லியில் உள்ள லால்பகதூர் சாத்திரி பல்கலைக் கழகம், அமித்தி பல்கலைக் கழகம் ஆகியவற்றில் முனைவர் பட்டங்கள் பெற்றார்.
தேசிய சட்டப் பல்கலைக் கழகம் புது தில்லி, ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், லக்னோ ஆகியவற்றில் கௌரவப் பேராசிரியராக இருந்தார்.
சட்டப் பணி
- 1970 முதல் 1991 வரை அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணி புரிந்தார்.
- 2004 ஆகசுடில் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் தற்காலிக முதன்மை நீதிபதியாக அமர்த்தப் பட்டார்.
- 2004 நவம்பரில் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை நீதிபதியாக ஆனார்.
- 2005 அக்டோபரில் தில்லி உயர்நீதி மன்றத்தில் முதன்மை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
- 2006 ஏப்பிரலில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று செப்டம்பர் 19, 2011 இல் ஒய்வு பெற்றார்.
”மிகக் கொடிய தீர்க்க முடியாத நோயினால் சாவின் விளிம்பில் நீண்ட காலம் துன்பப்படும் நோயாளிகளைக் கொன்று விட சட்டம் அனுமதிக்க வேண்டும். எனவே இந்தியக் குற்றவியல் சட்டம் 309 ஆம் பிரிவை நீக்க வழி வகைகளைக் காண வேண்டும்” என்று ஒரு வழக்கில் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
பல கோடி ரூபாய் ஊழல் வழக்கை விசாரிக்கும்போது "ஊழல் செய்யும் திருடர்களைத் தூக்கில் போடவேண்டும்; ஆனால் சட்டம் இடம் கொடுக்கவில்லை" என்று வாய் மொழியாக நீதிமன்றத்தில் மொழிந்தார்[7].
பத்திரிக்கை கவுன்சில் தலைவர்
உச்ச நீதி மன்ற நீதிபதி பதவிக்காலம் நிறைவுபெற்றதும் இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியின் காலம் அக்டோபர் 2011 முதல் அக்டோபர் 2014 வரை ஆகும்.
இப்பதவியை ஏற்றதும் சமூக மாற்றத்திற்கான நல்ல கருத்துகளைப் பரப்பத் தொடங்கினார். அவை பரவலாக மக்களால் விவாதிக்கப் பட்டன. காட்சி ஊடகங்களைப் பத்திரிக்கை கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று முழங்கினார். ஊடகங்கள் தவறு செய்தால் அவற்றைத் தண்டிக்கும் அதிகாரம் பத்திரிக்கைக் கவுன்சிலுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இவருடைய பிற கருத்துகள்
தொலைக் காட்சிகள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றன. கிரிக்கெட், திரைப்படம், அழகிகள் அணிவகுப்பு போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு 90 விழுக்காடு முக்கியத்துவம் தருகின்றன. மட்டைப் பந்தாட்டம் நம் இந்திய மக்களுக்கு ஒரு போதைப் பொருள் போல உள்ளது. முக்கியமான, மெய்யான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்றன. சோதிடம் சொல்வது, பேய்க் கதைகள் சொல்வது, அரைகுறை ஆடை அணிவகுப்பு இவற்றைப் பெரிதாகக் காட்டுகிறார்கள். அறிவியல் சிந்தனையை மக்களிடையே வளர்த்தெடுக்காமல் அறிவியலுக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி மக்களை விழிப்புணர்வற்றவர்களாக வைத்திருப்பதை ஊடகங்கள் விரும்புகின்றன.
இந்தியர்களில் 90 விழுக்காட்டு மக்கள் சாதி, மதம் ஆகிய குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் தேர்தலில் வாக்கு அளிக்கிறார்கள். எனவே அவர்கள் அறிவிலிகளாக உள்ளனர் என்று கூறினார். நாட்டில் உள்ள முசுலீம்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகக் காட்டும் அவல நிலை வருந்தத்தக்கது என்று கூறினார்[8].
உசாத்துணை
- "The Honourable Chief Justices". Madras High Court. பார்த்த நாள் 8 April 2013.
- "Press Council of India". Presscouncil.nic.in. பார்த்த நாள் 2013-03-03.
- "Hon'ble Mr. Justice Markandey Katju". பார்த்த நாள் 30 March 2013.
- "Former Judges of the High Court of Judicature at Allahabad and its Bench at Lucknow(1900-1990)". Allahabadhighcourt.in. பார்த்த நாள் 2013-03-03.
- "Dr. K.N. Katju". Indianpost.com. பார்த்த நாள் 2013-03-03.
- "Hon'ble Mr. Justice Markandey Katju". Supremecourtofindia.nic.in (1946-09-20). பார்த்த நாள் 2010-10-25.
- "Hang the corrupt, fumes Supreme Court". Times of India. 8 May 2007. http://articles.timesofindia.indiatimes.com/2007-03-08/india/27879702_1_fodder-scam-special-court-corrupt-persons.
- "The 90%". Indian Express. 9 April 2012. http://www.indianexpress.com/news/the-90-/934145/0.