மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை

மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (Manjolai labourers massacre) அல்லது தாமிரபரணி படுகொலை என்பது 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று ஊதிய உயர்வு கேட்டு திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல் துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிக்கும்.[1]

மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை
Manjolai Labourers Massacre
சம்பவம் நடந்த தாமிரபரணி ஆறு
அமைவிடம் இந்தியாவின் திருநெல்வேலி
இடம்திருநெல்வேலி, தமிழ் நாடு
ஆள்கூறுகள்8.601962°N 77.264131°E / 8.601962; 77.264131
நாள்சூலை 23, 1999
2:40pm (ஒ.ச.நே + 05:30)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
மாஞ்சோலை தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள்
தாக்குதல்
வகை
படுகொலை, ஆற்றுத் தண்ணீர்
ஆயுதம்தடியடி, கண்ணீர் புகை குண்டு
இறப்பு(கள்)பதினேழு
தாக்கியோர்தமிழ்நாடு காவல்துறை

பின்னணி விவரம்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தோயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இசுலாமிய அமைப்பினர் தலைமையில் பேரணியாக சூலை 23, 1999 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப் பேரணியாக வந்தனர்.[2] வழி நடத்தி வந்த அரசியற் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவற்துறை மறுத்தது. ஆகையால் காவல்துறைக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்படவே, காவல் துறை திடீரென தடியடி நடத்தியது. காவல்துறையின் தாக்குதலை எதிர்பாராத மக்கள் நிலை குலைந்து சிதறி ஓடினார்கள். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மறுபுறம் தாமிரபரணி ஆறு. தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சாதி மதத்தைச் சேர்ந்த பதினேழு பேர் மரணமடைந்தனர். மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தார்கள்.[3]

ஆவணப்படம்

ஒரு நதியின் மரணம் (Death of a River) என்னும் ஆவணப்படத்தை திருநெல்வேலி காஞ்சனை சினிமா இயக்கம் தயாரித்துள்ளது, ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர். சீனிவாசன் என்பவரால் இயக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டு வெளியானது.[4] மேலும் சம்பவம் நடந்த காலகட்டங்களில் நிலா தொலைக்காட்சி எடுத்த காணொளிக்காட்சிகள் மற்றும் அன்றே வெளிவந்த தினமணி, தினமலர், நக்கீரன் இதழ், தினபூமி, கதிரவன், மாலை முரசு, ஆகிய ஊடகங்களின் புகைப்படங்களைக் கொண்டு இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.[5] மேலும் இச்சம்பவத்தில் நேரடி தொடர்புடையவர்களின் நேர்காணலும் இதில் இடம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.