மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா

மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Mathikettan Shola National Park) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உடும்பன் சோலா தாலுகாவில் அமைந்துள்ளது. இந்த தேசியப்பூங்கா 12.82 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. [1]

மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா
அமைவிடம்கேரளா, இந்தியா
கிட்டிய நகரம்மூணார்
ஆள்கூறுகள்10°02′N 77°08′E
பரப்பளவு12.82 km2 (4.95 sq mi)
நிறுவப்பட்டது21 நவம்பர் 2003

பெயர்க்காரணம்

மதிகெட்டான் சோலை என்பது தமிழ்ச் சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு அறிவை இழந்தவன் என்று பொருள். இப்பூங்காவில் நுழையும் போது ஏற்பட்ட வழிக் குழப்பத்தினால் இப்பெயர் வந்திருக்கிறது. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணவும், வனவிலங்குகளைக் காக்கவும் இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[2]

வரலாறு

திருவிதாங்கூர் ஆட்சிக் காலத்தில் 1897 ஆம் ஆண்டில் இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தியதி இப்பூங்காவின் சுற்றுச் சூழல், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் பறவைகளைப் பேண வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

யானைகள்

இந்தப் பூங்காவிற்கு மூணார் பகுதியிலிருந்து யானைகள் வருகின்றன. போடிநாயக்கனூர், குமுளி ஆகிய இடத்திலுள்ள தனியார் ஆக்கிரமிப்புகளால் இவற்றின் வலசைப் (Elephant corridor) பாதைகள் பாதிக்கப்படுகின்றன.

சுற்றுலாத் தகவல்

இந்த தேசியப் பூங்காவிற்கு மூணார்-குமுளி நெடுஞ்சாலை வழியாக மூணாரிலிருந்து பூப்பாறை வழியாகவும் அல்லது இடுக்கி வழியாக கொத்தமங்கலம் பாதையிலும் செல்லலாம். இதன் அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஆகும். கோட்டயம் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.