மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்

மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் (Mahatma Gandhi University) , இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக் கழகம் 1983 அக்டோபர் 3 (புரட்டாசி 16)-ல் நிறுவப்பட்டது. இந்தக் பல்கலைக்கழகத்தின் கீழ் கேரளத்தில் ஐந்து மாவட்டங்களிலாக 123 கலை அறிவியல் கல்லூரிகளும், 3 மருத்துவக் கல்லூரிகளும், 22 பொறியியல் கல்லூரிகளும், 3 ஆயுர்வேத கல்லூரிகளும், 2 ஹோமியோபதி கல்லூரிகளும் உள்ளன. பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமாக ஒரு பொறியியல் கல்லூரியும், பாராமெடிக்கல் பாடப்பிரிவுகளுக்கான கல்லூரிகளும், ஆசிரியர் பயிற்சி கல்வி கல்லூரிகளும் உள்ளன. பல்கலைக்கழக துறைசார் 11 கல்விக்கூடங்கள் வாயிலாகப் பலதர ஆய்வுகள் நடத்தப்பட்டு இதற்குள்ளாக ஆயிரத்திற்கு மேலான முனைவர் பட்டங்கள் நல்கியுள்ளது. கல்வி மையங்கள் வழியாக மேல்நிலைப் பள்ளி கல்வி தேர்ந்தவர்களுக்கான பல அறிவியல் பிரிவுகளை ஒன்றிணைத்து எம்.எஸ். பாடத்திட்டங்களை பயில்விக்கிறது. ஆங்கில மொழி பரிமாற்றம், சுற்றுச்சூழல் ஆய்வு, நானோ சயன்ஸ், பயோமெடிக்கல் ஆய்வு மற்றும் சமுக அறிவியல் பிரிவுகளில் வெளிப் பல்கலைக்கழக மையங்களும் செயல்படுகிறது. முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புக்கான நுழைவு ஒற்றைச் சாளர முறையில் நடத்தப்படுவது இப் பல்கலைக்கழகத்தின் சிறப்பாகும்.

மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
മഹാത്മാഗാന്ധി സര്‍വ്വകലാശാല
மகாத்மா காந்தி பல்கலைக்கழக சின்னம்

குறிக்கோள்:विद्यया अमृतमश्नुते (Sanskrit)
[Vidyay āmritamaṣṇute][1]
குறிக்கோள் ஆங்கிலத்தில்:Knowledge makes one immortal
நிறுவல்:1983
வகை:பொது பல்கலைக்கழகம்
வேந்தர்:கேரள மாநில ஆளுநர்
அமைவிடம்:கோட்டயம், கேரளம், இந்தியா
வளாகம்:பாதி நகர்ப்புறம்
இணையத்தளம்:www.mgu.ac.in

உருவாக்கம்

கேரள மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட "மஹாத்மா காந்தி பல்கலைக்கழக சட்டம், 1985" (சட்ட எண் 12,1985)-ன் வாயிலாக இப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

அதிகார வரம்பு

கோட்டயம், எறணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களும், பத்தனந்திட்டை மாவட்டத்தில் கோழன்சேறி, மல்லப்பள்ளி, திருவல்லா மற்றும் இராணி வட்டங்களும், ஆலப்புழை மாவட்டத்தில் குட்டநாடு வட்டமும் பல்கலைக்கழக அதிகார மண்டலங்கலாகும்.

கல்வி வளாகங்கள்

இப் பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகம் கோட்டயம் மாவட்டம் அதிரம்புழையிலும் துணைநிலை வளாகங்கள் கோட்டயத்தில் புல்லரிக்குன்னு, நாட்டாசேறி சூர்யகாலடி ஹில்ஸ், புதுப்பள்ளி, காந்தி நகர் எனும் இடங்களிலும், இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழை மற்றும் நெடும்கண்டம் பகுதியிலும் பத்தனம்திட்டை மாவட்டத்தில் சுட்டிப்பாறை பகுதியிலும் அமைந்துள்ளது.

இந்திய சட்ட சிந்தனை கல்விக்கூடம்

இந்திய சட்ட சிந்தனை கல்விக்கூடம் (School Of Indian Legal Thought) என்பது மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் சட்ட கல்விக்கான துறைசார் கல்விக்கூடமாகும். துறைசார் சட்ட கல்விக்கூடமாக, செயல்திறன் வாய்ந்த வழக்கறிஞர்களை உருவாக்குதல், சிறந்த சட்ட ஆசிரியர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தோற்றுவித்தல், சட்டத்துறையில் வளர்ந்து வரும் சட்டப்பிரிவுகளிலும் முக்கிய சட்டப்பிரிவுகளிலும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் இவற்றில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல், சட்டக்கல்வியின் பொதுவான போக்கில் சட்டவியலிலும் சட்டப்பிரிவுகளிலும் இந்திய சிந்தனைகளின் பங்களிப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்துதல் எனும் குறிக்கோள்களோடு 1989-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோட்டயம் நகரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் எம்.சி ரோடு சவிட்டுவரி சந்திப்பில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் நாட்டாசேரி சூர்ய காலடி ஹில்ஸ் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.