பெண்ணியத் திறனாய்வு

பெண்ணியத் திறனாய்வு (Feminist criticism) என்பது, பெண்ணியக் கோட்பாடுகளின் அடிப்படையில் செய்யப்படும் திறனாய்வு ஆகும். மரபுவழியான ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுடைய உரிமைகள் பற்றிய உணர்வும், பெண் விடுதலை உணர்வும் மேலோங்கி வருகின்ற நிலையில், பெண்ணியமும் அதன் வழியாக பெண்ணியத் திறனாய்வும் உருவாகிறது. பெண்ணியத் திறனாய்வு, பெண்களின் ஆளுமை எவ்வாறு இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்பதாக அமைகின்றது.[1]

19 ஆம் நூற்றாண்டுப் பெண் எழுத்தாளர்களான சார்ச் எலியட் (George Eliot), மார்கரெட் ஃபுல்லர் (Margaret Fuller) போன்றோரின் ஆக்கங்கள் தொடக்கம், "மூன்றாம் அலை"ப் பெண்ணிய எழுத்தாளர்களின் பெண் ஆய்வு, பாலின ஆய்வு ஆகிய துறைகள் சார்ந்த கோட்பாட்டு ஆக்கங்கள் வரை பெண்ணியத் திறனாய்வின் வரலாறு பரந்ததும், பல்வேறுபட்டதும் ஆகும். 1970களுக்கு முன்னர், முதலாம், இரண்டாம் அலைப் பெண்ணியக் காலத்தில், பெண்ணியத் திறனாய்வு என்பது, பெண் எழுத்தாண்மை குறித்த அரசியல், இலக்கியங்களில் பெண்களின் நிலைமைகள் குறித்த பிரதிபலிப்புக்கள் போன்றவை தொடர்பானவையாகவே இருந்தது. இதில் இலக்கியங்களில் வரும் கற்பனைப் பெண் கதைமாந்தச் சித்தரிப்புக்களும் அடங்கியிருந்தன.

அதன் பின்னர் ஏற்பட்ட பாலினம் குறித்த புதிய சிக்கலான கருத்துருக்களின் வளர்ச்சியும், மூன்றாம் அலைப் பெண்ணியமும் பெண்ணியத் திறனாய்வு பல்வேறு வழிகளில் செல்ல வழிவகுத்தன.

குறிப்புக்கள்

  1. நடராசன், தி. சு., 2009. பக். 219.

உசாத்துணைகள்

  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.