பூசைக் கிரியைகள்
இந்து சமய ஆலயங்களில் இறைவனுக்கு செய்யப்படும் உபசாரங்கள் பூசைக் கிரியைகள் ஆகும். இந்த உபசாரங்கள் ஆகம விதிப்படி செய்யப்படுகின்றன. இது பூஜை உபசாரம் என்றும் அறியப்பெறுகிறது. [1]
வகைகள்
இந்த பூசைக் கிரியைகள் பொதுவாக பஞ்சோபசாரம், தசோபசாரம், சோடசோபசாரம் என மூன்று வகைப்படும். [2] இவ்வாறு மூன்று வகையான உபசாரமுறைகள் அல்லாமல் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, பத்து, பன்னிரெண்டு, பதினாறு, முப்பத்து எட்டு, அறுபத்து நான்கு, எழுபத்து இரண்டு என எண்ணிக்கையில் அடிப்படையில் பல வகைகளாக உள்ளன.[3]
பஞ்சோபசாரம்
பஞ்சோபசாரம் என்பது ஐந்து வகையான உபசார முறைகளாகும். இவை பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை சார்ந்து அமைகின்றன. பார்த்தியோபசாரம், ஜலியோபசாரம், நைசசோபசாரம், வாய்வியோசாரம், வைகாயசோபசாரம் ஆகியவை பஞ்சோபசாரங்களாகும்.
தசோபசாரம்
தசோபசாரம் என்பது பத்து வகையான உபசார முறைகளை கொண்டதாகும். ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்திரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை, பாத்தியம் , ஆசமனியம், அருக்கியம், புட்பதானம் ஆகியவை தசோபசாரங்களாகும். [4]
துவாதச உபசாரங்கள்
துவாதச உபசாரங்கள் என்பவை இந்துக் கடவுள்களுக்கு செய்யப்படும் பன்னிரெண்டு வகையான உபசாரங்களைக் குறிப்பதாகும். இவை பதினாறு வகையான உபசாரமுறையான சோடச உபசாரத்திலிருந்து ஆஸனம் (இ௫க்கை) ஸ்வாகதம் (வரவேற்றல்) வஸ்த்ரம் (ஆடை) பூஷா (அணிகள்) ஆகியவை நீங்களாக உள்ள பன்னிரு உபசாரங்களாகும். [5] இவ்வுபசார முறையானது த்வாதச உபசாரா எனவும் அழைக்கப்படுகிறது.
சோடசோபசாரம்
சோடசோபசாரம் என்பது பதினாறு வகையான உபசார முறைகளை கொண்டதாகும். ஆவாகனம், ஆசனம், பாத்தியம், அர்க்கியம், ஆசமனம், மதுவர்க்கம், அபிடேகம், வத்திரம், யஞ்ஞோபவீதம், கந்தம், புட்பம், தூபம், தீபம், நைவேத்தியம், தாம்பூலம், நீராஞ்சனம் எனும் பதினாறு உபாசாரங்களை உள்ளடக்கியது சோடசோபசாரமாகும்.
முப்பத்து இரண்டு உபசாரங்கள்
ஆஸனம், ஸ்வாகதம், பாத்யம், ஆசமனீயம், புஷ்பம், கந்தம், தூபம், தீபம், அர்க்யம், ஆசமனீயம், ஸ்நானம், ப்லோதம், வஸ்த்ரம், உத்தரீயம், ஆபரணம், உபவீதம், பாத்யம், ஆசமனீயம், புஷ்பம்,கந்தம், தூபம், தீபம், ஆசமனீயம், ஹவிர்நிவேதனம், பானீயம், ஆசமனீயம், முகவாஸம்,பலி, ப்ரணாமம், தக்ஷிணை, புஷ்பம், அஞ்சலி என்பன முப்பத்து இரண்டுவகையான உபசார முறைகளாகும். [6]
சதுஷ்டி உபசாரங்கள்
சதுஷ்டி உபசாரங்கள் என்பது இந்துக் கடவுள்களுக்கு செய்யப்படும் அறுபத்து நான்கு உபசாரங்களை குறிப்பதாகும்.[7] இது சதுஷ்-சஷ்டி உபசார பூஜை எனவும் அழைக்கப்படுகிறது. இப்பூசை முறையானது சக்தி வழிபாட்டிற்கு மட்டும் உரியதாகும். [8]
மேற்கோள்களும் குறிப்புகளும்
- சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 80
- சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 81
- http://kalyaanam.co.in/stotra.html
- சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 82
- http://kalyaanam.co.in/stotra.html த்வாதச உபசாரா
- http://www.srivikanasa.com/QandAmore.asp?Qid=46 32 உபசாரங்கள் எனப்படுவன யாவை ?
- http://mytamilmagazine.net/Read_Magazine.php?magazine_id=57 அம்பிகையின் சக்ரபூசை சிறப்பு
- http://kalyaanam.co.in/stotra.html சது ஷஷ்டி உபசாரா