பூ. ம. செல்லத்துரை

பூபாலபிள்ளை மயன் செல்லத்துரை (5 சூன் 1936 - 11 பெப்ரவரி 2016) இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், தமிழ்த் தேசியவாதியும் ஆவார். வண்ணன், மயன், நளன், கண்ணா போன்ற புனைபெயர்களிலும் இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

பூ. ம. செல்லத்துரை
பிறப்புபூபாலப்பிள்ளை மயன் செல்லத்துரை
சூன் 5, 1936(1936-06-05)
பெரிய போரதீவு, மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை
இறப்புபெப்ரவரி 11, 2016(2016-02-11) (அகவை 79)
களுவாஞ்சிக்குடி, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுஎழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி
பெற்றோர்க. பூபாலப்பிள்ளை
மு. இராசம்மா

வாழ்க்கைச் சுருக்கம்

செல்லத்துரை கிழக்கிலங்கையில் பெரிய போரதீவில் க. பூபாலப்பிள்ளை, மு. இராசம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.[1] மட்டக்களப்பு அரசடி பாடசாலையிலும், பழுகாமம் மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.[1] 1960 களில் பெரிய போரதீவில் பகுத்தறிவு இயக்கத்தை தொடங்கினார். இவ்வியக்கம் பின்னர் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளையாக உருவெடுத்தது. அக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் செயலாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணியாற்றினார்.[1]

எழுத்தாளராக

செல்லத்துரை பல கவிதைகள், வரலாற்று, ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். தாயகம், நேர்வழி, சமநீதி, தேனாடு ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[1] 40 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.[2] 1995 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.[2]

எழுதிய நூல்கள்

  • தமிழனே கேள், 1958
  • தமிழரும் தாத்தாவும், 1962
  • இலங்கைத் தமிழ் வரலாறும் இன்றைய நிலையும், 1999
  • இலங்கையில் விஸ்வகர்மா, 2000
  • சிங்களவர் பூர்வீகம்
  • இலங்கையில் சமாதானத் தேடல்
  • இலங்கையின் இன நெருக்கடிக்குத் தீர்வென்ன?, 2006

விருதுகள்

  • சமூகசோதி பட்டம் (பெரியபோரதீவு இந்து இளைஞர் கலாமன்றம்)[1]
  • கலாவேந்தன் பட்டம் (தினக்குரல் ஆசிரியர்)
  • கலாபூசணம் (இலங்கை அரசு)

மறைவு

பூ. ம. செல்லத்துரை களுவாஞ்சிக்குடி அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், 2016 பெப்ரவரி 11 வியாழக்கிழமை காலமானார்.[3]

மேற்கோள்கள்

  1. வி. மைக்கல் கொலின். "இலங்கை தமிழர் வரலாறும் இன்றைய நிலையும்". பார்த்த நாள் 12 பெப்ரவரி 2016.
  2. "எழுத்தாளர்கள்: பூ. ம. செல்லத்துரை". tamilouthors.com. பார்த்த நாள் 12 பெப்ரவரி 2016.
  3. "கலாபூஷணம் பூ.ம.செல்லத்துரை காலமானார்". தமிழ்மிரர் (12 பெப்ரவரி 2016). பார்த்த நாள் 12 பெப்ரவரி 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.