புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் உள்ள உயர்தரப் பாடசாலைகள் ஐந்தில் ஒன்றாகும். ஆரம்பத்தில் சைவப்படசாலை, வேதப்பாடசாலை என இரண்டாக நிர்வகிக்கப்பட்ட இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டு கமலாம்பிகை மகா வித்தியாலயம் என அழைக்கப்படுகிறது. ஓர் இரண்டு மாடிக்கட்டிடம் உட்பட நன்கு கட்டிடத் தொகுதியை கொண்டது இந்தப் பாடசாலை.

வரலாறு

1935 செப்டம்பர் 16ஆம் திகதி ஐந்து மாணவர்களுடனும் இரண்டு ஆசிரியர்களோடும் யாழ்ப்பாணம் சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தற்போது கிழக்கே மத்தியில் அமைந்துள்ள ஒரே ஓரு கட்டிடத்துடன் தனது கல்விப் பணியை தொடங்கியது. இதன் அருகே தென் மேற்குப் பக்கமாக பெரிய ஆலமரத்தின் கிழக்கே ஐரோப்பிய ஆட்சியில் மிசனரிமார்களினால் புங்குடுதீவு அமெரிக்கன் மிசன் பாடசாலை இயங்கி வந்தது.1962 ஆம் ஆண்டு சூன் வரை யாழ் சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த இப்பாடசாலை அரசினர் பாடசாலை ஆக்கபட்டது. இதனைத் தொடர்ந்து 1962 செப்டம்பரில் அருகாமையில் இருந்த மிசன் பாடசாலையும் 1318ஆம் இலக்க சட்டத்தின் படி கையகப்படுத்தப்பட்டு ஒன்றாக்கப்பட்டன. அன்று முதல் இந்த பாடசாலையின் பெயர் யாழ்/புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது.

முதலில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த இப்பாடசாலை 1969 இல் ஆறாம் வகுப்பு வரையும் 1970இல் ஏழாம் வகுப்பு வரையும் 1973 இல் பத்தாம் வகுப்பு வரையும் தரம் உயர்த்தப்பட்டது. எண்பதுகளில் 260 மாணவர்கள் கல்வி கற்க 12 ஆசிரியர்களும் மூன்று தொண்டர் ஆசிரியர்களும் பணியாற்றினர்.

ஆரம்ப காலத்தில் இளையப்பா வாத்தியாரும் பின்னர் துரையப்பா வாத்தியாரும் அதிபர்களாக பெரும் பணியாற்றினர். தொடர்ந்து ச. சொக்கலிங்கம், த. பொன்னையா போன்றோரும் அதிபர்களாக பணி புரிந்தார்கள். ச.சொக்கலிங்கம் அவர்களின் காலத்தில் தெற்குப் பக்கமாக மத்தியில் உள்ள கட்டிடம் கட்டப்பட்டது. அதிபர் த.பொன்னையா காலத்தில் மூன்றாவது விஞ்ஞான ஆய்வு கூட கட்டிடம் அமைக்கப்பட்டது. இவருக்குப் பின்னர் உப அதிபராக இருந்த யோ. பூராசா அதிபராக பதவி ஏற்றார். இவரை பின் தொடர்ந்து சண்முகநாதன், மு.மகேந்திரன் ஆகியோர் அதிபராகினர். 1991இல் மக்கள் இடம்பெயர அதிபராக இருந்த மு. மகேந்திரன் யாழ்ப்பாணத்தில் ஆனைப்பந்தி உயர்கலைக் கல்லூரி என்ற தனியார் கல்வி நிலையத்தில் இந்த பாடசாலை மாணவர்களோடு சித்திவிநாயகர்,திருநாவுக்கரசு,குறிகட்டுவான் அ.மி.த.க.பாடசாலை மாணவர்களையும் ஒன்று சேர்த்து தற்காலிகமாக இயக்கினர். மீண்டும் 1996இல் அப்பாடசாலை உப அதிபராக இருந்த ஊரதீவின் பொதுச்சேவை முதன்மையாளரான ந. இராசதுரை இப்பாடசாலையை மறுசீரமைத்து தொடக்கி வைத்தார். பின்வந்த காலங்களில் இவரே அதிபராக பதவி ஏற்றார். இவரது ஓய்வுக்கு பின்னர் ந. நாகராசா அதிபராகி பணி புரிந்தார்.2011 இல் இந்த பாடசாலையின் பவளவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்த விழாவில் கமலமலர் என்னும் நூலும் வெளியிடப்பட்டது அண்மைக்காலத்தில் சுவிட்சர்லாந்து வாழ் பழைய மாணவர்களால் இந்த பாடசாலை அழகாக மீள் நிர்மாணம் செய்யபட்டு உள்ளது .முன்பக்க நுழைவாயில் வளைவு அமைத்தல்,பாடசாலை வர்ணம் தேடுதல்,தளபாடங்கள் அமைத்தல் போன்ற பணிகள் செவ்வனே நிறைவேற்றப் பட்டுள்ளன. வருடந்தோறும் விளையாட்டு போட்டிகளும்சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்றது.தற்போது சுமார் ௨௧௦ மாணவர்கள் இங்கு கல்வி கற்று வருகின்றனர் .ஊரதீவு ,வல்லன் பாடசாலைகள் இயன்காத நிலையில் இந்த பகுதி மாணவர்களும் இங்கேயே கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கது

வெளி இணைப்புகள்

  • முகப்பு புத்தகத்தில் : புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.