பிற்படுத்தப்பட்டோர்
பிற்படுத்தப்பட்டோர் , அநீதியான சமூக ஏற்றத் தாழ்வுகளினால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் வரலாற்று ரீதியாகப் பின்னடைந்த மக்கள் குழுக்களையே பிற்படுத்தப்பட்டோர் என்று அழைக்கிறோம். தலித் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை விட பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமை சிறிது மேம்பட்டதாக இருந்தது. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைப் போலவே பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சார்ந்தவர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களாவார்கள். எடுத்துக்காட்டாக, 19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொத்தடிமைப் பண்ணையாட்களாக உழன்ற பொழுது பிற்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள் குத்தகை விவசாயிகளாகப் பணி புரிந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே பிற்படுத்தப்பட்ட மக்களும் கோவிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டு சமூகப் புறக்கணிப்புகளால் துன்புற்றனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுடனும் மற்றப் பிராமணரல்லாத உயர்வகுப்பினருடனும் தங்களுடைய பொதுவானா பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நலன்களை முன்னிட்டு இணைந்த அரசியல் வரலாற்று நிகழ்வே திராவிட இயக்கத்தின் எழுச்சியாக அமைந்தது.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய, தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 26.5%ம், இசுலாலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3.5%ம், சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு 20%ம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.[1]
இந்திய அரசின் இடஒதுக்கீடு
இந்திய அரசு மற்றும் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவன வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.[2]