பி. பியசேன
பொடியப்புஹாமி பியசேன (Podiappuhamy Piyasena, பிறப்பு: ஏப்ரல் 3 1961), இலங்கை அரசியல்வாதி. 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 ஏப்ரலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஆனாலும், பின்னர் இவர் 2010 செப்டம்பரில் ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு கட்சி மாறினார்[1].
பொடியப்புகாமி பியசேன Podiappuhamy Piyasena நாஉ | |
---|---|
அம்பாறை மாவட்டம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஏப்ரல் 3, 1961 இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழரசுக் கட்சி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
வாழ்க்கைக் குறிப்பு

C 28, மாதிவெல வீடமைப்புத்திட்டம், ஸ்ரீ ஜயவர்தனபுரையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த தெவிநுவர எனுமிடத்தை பிறப்பிடமாகக் கொண்ட பொடிஅப்பு 1948ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து அக்கரைப்பற்று பிரதேசத்தின் சின்னம்மாள் எனும் யுவதியை திருமணம் செய்துகொண்டு இப்பிரதேசத்திலே வாழ்ந்து வந்ததுடன் 7 பிள்ளைகளுக்கு தந்தையானார். ஸ்ரீலங்கா காவல்துறையில் சமயல் செய்பவராக தனது தொழிலை ஆரம்பித்த இவரது கடைசிப் பிள்ளைதான் அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட பியசேன.
அக்கரைப்பற்று சிங்கள வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பியசேன பின்பு அக்கரைப்பற்று ஆர். கே. மகாவித்தியாலயத்தில் தமிழ்மொழியில் தனது தாயின் விருப்பத்திற்கிணங்க கல்வி பயின்றார். தமிழரின் கலாசாரத்திற்கிணங்க வாழ வேண்டும் என்றால் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்று பியசேனவின் பெற்றோர் விரும்பியதனாலேயே இவர் தமிழ்மொழியில் கல்வி பயின்றார். 1984ஆம் ஆண்டில் அக்கரைப்பற்று நகரில் பியசேனவின் சகோதரரான சோமசிரி ஈரோஸ் அமைப்பினால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
பிரதேசசபைத் தலைவர்
2006 பிரதேசசபை தேர்தலின்போது சிக்கல்மிகு சூழ்நிலையொன்று பிரதேசத்தில் உருவாகியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பாக இவருக்குப் போட்டியிடும் வாய்ப்பு கிட்டியது. இத்தேர்தலில் 6800 வாக்குகளைப் பெற்ற பியசேன ஆலயடிவேம்பு பிரதேசசபைத் தலைவராக தெரிவாக்கப்பட்டார். இருப்பினும், அந்தப் பதவி ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது. சிங்களவர் ஒருவரான பியசேனவுக்கு தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டாமென்ற பல அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பியசேனவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. தலைவர் பதவியைத் துறந்தாலும் சாதாரண உறுப்பினராக இருந்து இவர் மக்களுக்கு சேவையாற்றினார்.
பொதுத் தேர்தலில் போட்டி
பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நியமனப் பத்திரம் கோரப்பட்ட நேரத்தில் பியசேனவின் பெயர் திகாமடுலை தேர்தல் மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், அச்சந்தர்ப்பத்தில் அவருக்குத் தேவைப்பட்டது பாராளுமன்றத்துக்குச் செல்வதற்காகவல்ல. மீண்டும் பிரதேசசபைத் தலைவராகுவதே. மார்ச் 1ம் திகதி பிரதேச சபைத் தலைமைப் பதவியைப் பெற்றுத் தருவதாக தமிழ் கூட்டணியின் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோதிலும்கூட அது அவருக்குக் கிடைக்கவில்லை. தேர்தலின்போது சுவரொட்டிகள், பெனர்கள், நோட்டிஸ்கள் போன்றவற்றை தனது சொந்த செலவில் அச்சிட்டுத் தருவதாகவும், தனக்கு பிரதேசசபைத் தலைமைப் பதவியைத் தரும்படியும் மீண்டும் மீண்டும் இவர் கோரியுள்ளார். அதற்கு கூட்டணியினர் எந்தவித உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. இந்நிலையில்தான் தனது கட்சிக்கு மாத்திரமல்ல, தனது விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக இவர் தீவிரமாக செயற்பட்டார். அச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பில் ரோமியோகுமாரி, கிருஸ்ணமூர்த்தி ஆகிய வேட்பாளர்கள் இருவரும் பியசேனவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறை காட்டியுள்ளனர்.
உசாத்துணை
- Arthur Wamanan (12 June 2011). "TNA defector will not join TMVP". The Nation. http://www.nation.lk/2011/06/12/news10.htm. பார்த்த நாள்: 12 June 2011.