பாஸ்கா திரி

பாஸ்கா திரி என்பது கத்தோலிக்க திருச்சபையில் பாஸ்கா திருவிழிப்பின் போது பயன்படுத்தப்படும் பெரிய, வெள்ளை நிற மெழுகுவர்த்தியைக் குறிக்கும். இது ஒவ்வோரு ஆண்டும் உயிர்த்த ஞாயிறு அன்று ஆசீர்வதிக்கப்பட்டு, பாஸ்கா காலம் முழுமையும் பயன்படுத்தப்படும். சில இடங்களில் வருடம் முழுமையும் திருமுழுக்கின் போதோ, அல்லது நீத்தார் இறுதி திருப்பலியின் போதோ பயன்படுத்தப்படும்.

பாஸ்கா திரியின் உட்பொருள்

பாஸ்கா திரியில் உள்ள தீ, கிறிஸ்து உலகின் ஒளி என்பதையும், அவர் இறைமக்களின் மத்தியில் உள்ளார் என்பதனையும் குறிக்கின்றது. பாஸ்கா திரி சில இடங்களில் "பாஸ்கா வத்தி" எனவும், "ஈஸ்டர் வத்தி" எனவும் அழைக்கப்படுகின்றது. பாஸ்கா என்னும் சொல், "கடத்தல்" என்னும் பொருள் படும், Pesach என்னும் எபிரேய சொல்லிலிருந்து வந்ததாகும். உயரிய, பெரிய மெழுகுவர்த்தி, முக்காலத்தில் இஸ்ராயேல் மக்கள் பாலைநிலத்தைக் கடந்து செல்லும்போது இரவில் நெருப்புத்தூணாக கடவுள் அவர்களுக்கு வழிகாட்டினார் என்பதனைக் குறிக்கும். இந்த பாஸ்கா என்னும் கடத்தல் நிகழ்வை நினைவுகூரும் விதமாக இஸ்ரயேல் மக்கள் பாஸ்கா விழாவிலே, இரவு நேரங்களில் விளக்கை ஏற்றி, அதை மந்திரித்து, அதன் ஒளியில் திருப்பாடல்களை வாசித்து வந்தனர். இந்த ஒளிவிழாவை கிறிஸ்துவின் உயிர்ப்புடன் தொடர்புபடுத்தி கிறித்தவகள் கொண்டாடுகிறார்கள்.

பாஸ்கா திரியின் விளக்கம்

சில பாஸ்கா திரிகள் (ஹாலந்து).

ஒரு பங்கு கோவிலில் உள்ள மெழுகுவர்த்திகளில் பாஸ்கா திரியே பெரியதாக இருக்கும். நடைமுறையில் உள்ள பாஸ்கா திரிகள், பின் வருபனவற்றை தாங்கியிருக்கும்.

  • சிலுவை - சிலுவை மரத்தின் வழியாகத்தான் உயிர்ப்பின் மகிமை விளங்குகிறது என்பதைக் குறிக்கும்.
  • அகரமும் னகரமும் - கிறிஸ்து காலங்கள் யாவற்றையும் கடந்து நிற்கிறார் என்பதைக் குறிக்கும். பாஸ்கா திரியில் தமிழ் எழுத்துகளின் முதல் எழுத்தான 'அ'- என்ற எழுத்தையும் , கடைசி எழுத்தான 'ன'-என்ற எழுத்தையுமோ அல்லது அந்தந்த இடத்தின் மொழிகளுடைய முதல் மற்றும் கடை எழுத்துகளோ பொறிக்கப்படும். அல்லது கிரேக்க மொழியின் முதல் மற்றும் கடை எழுத்துகளான ஆல்ஃபா (Α) மற்றும் ஒமேகா (Ω) (Alpha and Omega) பொறிக்கப்படும்.
  • ஆண்டின் எண் - காலங்களும் யூகங்களும், மாட்சியும் ஆட்சியும் ஆண்டவருக்கே உரியன என்பதை குறிக்கும் விதமாக சிலுவையின் நான்கு கோணங்களில் நிகழும் ஆண்டின் எண்கள் இருக்கும்.
  • சாம்பிராணி மணிகள் - இயேசுவின் தன்னுடைய ஐந்து காயங்களால் கண்காணித்து பேணி காக்க வேண்டுமென்று ஐந்து சாம்பிராணி மணிகளை சிலுவையில் இருக்கும்.

திருவிழிப்பின் போது

இரவில் கொண்டாடப்படும் பாஸ்கா திருவிழிப்பு விழாவின் துவக்கப் பகுதி திருஒளி வழிபாடு ஆகும். இந்நிகழ்விலேயே பாஸ்கா திரி மந்தரிக்கப்படும். பெரிய வியாழன் அன்று அணைக்கப்பெற்ற கோவில் விளக்குகள் இவ்வழிபாட்டின் போது பாஸ்கா திரியிலிருந்து தான் மீண்டும் ஏற்றப்படும்.

மேற்சொன்ன பாஸ்கா திரியின் விளக்கங்களை குரு பாஸ்கா திரியின் மீது எழுதி அதனை பின்வருமாறு கூறி மந்தரிப்பார்: "கிறிஸ்து நேற்றும் இன்றும், முதலும் முடிவும், அகரமும் னகரமும்; காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன; மாட்சியும் ஆட்சியும் அவருக்கே என்றென்றும் எக்காலமுமே, ஆமென்"

பின்பு புது தீயை மந்தரித்து, அதிலிருந்து பாஸ்கா திரி ஏற்றப்படும். இதன் பின் பாஸ்கா திரி பவனியாக எடுத்துச்செல்லப்படும். பவனியின் போது, மூன்று முறை குருவானவர் "கிறிஸ்துவின் ஒளி இதோ" என்று பாடுவார். "இறைவா உமக்கு நன்றி" என்று பதில் பாடப்படும். இதன்பின் பாஸ்கா புகழுரை பாடப்படும்.

இறைமக்கள் அனைவரும் தத்தம் திரிகளைப் பாஸ்காத் திரியிலிருந்து தான் பற்றவைப்பர்,

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.