பாலைவனமாதல்

பாலைவனமாதல் (Desertification) என்பது, வறண்ட, ஓரளவு வறண்ட அல்லது ஈரப்பதம் குறைவாக உள்ள பகுதிகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைவதைக் குறிக்கும். மனிதச் செயற்பாடுகளே இதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாலைவனமாதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. இது வழமையாக மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படுவதைக் காட்டிலும் வேகமானதாகும்.

கடல் பின்வாங்கியதன் மூலம் தரை தட்டியுள்ள கப்பல் ஒன்று.
மௌரித்தானியாவின் தலைநகரான நுவாக்ச்சொட்டை நோக்கி மணற் குவியல்கள் முன்னேறுவதைக் காட்டும் செய்மதிப் படம்.

உயிரியற் பல்வகைமை (biodiversity) இழக்கப்படுதலும், உற்பத்தித் திறன் இழப்பும் பாலைவனமாதலின் முக்கிய தாக்கங்களில் ஒன்றாகும். மடகாஸ்கரில், அதன் மத்திய உயர்நிலப் பகுதிகளில், உள்ளூர் மக்களின் வெட்டி எரித்தல் முறைப் பயிர்ச்செய்கையின் காரணமாக நாட்டின் 10% அளவுக்கு ஈடான நிலம் பாலைவனமாதல் மூலம் இழக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான நிலை உள்ளது.

காரணிகள்

சில பகுதிகளில், பாலைவனங்கள் மலைகள் போன்ற இயற்கை அமைப்புக்களால் ஏனைய பகுதிகளிலிருந்து தெளிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வேறு சில பகுதிகளில், இவ்வாறான நில அமைப்புக்கள் இல்லாத போது, பாலைவனங்களுக்கும், வறட்சி குறைவான இடங்களுக்கும் இடையிலான பகுதிகள் படிப்படியான மாறுநிலைப் பகுதிகளாகவே உள்ளன. இதனால் பாலைவனத்தின் எல்லை தெளிவாக இருப்பதில்லை. இவ்வாறான மாறுநிலைப் பகுதிகளிலுள்ள உயிர்ச்சூழல் முறைமைகள் எளிதிற் குலைந்து விடக்கூடிய, உறுதிக் குறைவான சமநிலையில் உள்ளன.

இத்தகைய விளிம்புப் பகுதிகளில், மனிதச் செயற்பாடுகள் உயிர்ச் சூழல் முறைமையில் அது தாங்கக்கூடிய அளவுக்கு மேல் நெருக்கடியை உருவாக்கும்போது, நிலம் தரம் குறைகிறது.

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.