பறங்கித்தெரு

யாழ்ப்பாணத்தில் பறங்கித்தெரு என்பது, யாழ்ப்பாண நகரத்தில் ஐரோப்பியர் வாழ்ந்த பகுதியைக் குறிப்பதற்கு உள்ளூர் மக்கள் வழங்கிய பெயர் ஆகும். இப்பகுதி தற்போதைய பிரதான வீதியையும் அதை அண்டிய பகுதிகளையும் குறிக்கும். போர்த்துக்கேயர் காலத்தில் உருவான இது ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆட்சிக்காலத்திலும் ஐரோப்பியர் குடியிருப்பாக இருந்துவந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலம் வரை யாழ்ப்பாண நகரம் இப்பகுதிக்குள்ளேயே அடங்கியதாக இருந்தது. இதனால், நகரம் என்பதைக் குறிக்கும் போர்த்துக்கேயச் சொல்லைத் தழுவி “சீதாரி“ என்னும் பெயராலும் மக்கள் இப்பகுதியை அழைத்தனர்.

அமைப்பு

பறங்கித்தெருப் பகுதியின் முக்கியமான வீதி பிரதான வீதி. பிரதான வீதிக்கு இணையாக கரையோரமாக பாங்சால் வீதியும், எதிர்ப் பக்கத்தில் சப்பல் வீதியும் உள்ளன. இவற்றுக்குச் செங்குத்தாக முற்கூறிய மூன்று வீதிகளையும் வெட்டிச்செல்லும் விதமாக மேற்கில் முன் வீதியும், அதற்குத் தெற்கே ஒன்றுக்கு அடுத்து மற்றொன்றாக முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் குறுக்குத் தெருக்களும் அமைந்து ஒரு வலைப்பின்னல் சாலையமைப்பை உருவாக்குகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.