பரிபாடல் பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை செய்த நூல்களில் ஒன்று பரிபாடல். இது பரிபாடல் பரிமேலழகர் உரை [1] எனப் போற்றப்படுகிறது.[2] இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு. இந்த உரையின் சிறப்பை அதன் சிறப்புப் பாயிரம் நன்கு விளக்குகிறது. கந்தி முதலான பலர் செய்திருந்த பாடப் பிழைகளை நீக்கிப் பரிமேலழகர் உரை செய்தார் எனவும், பரிமேலழகர் நிலம் அளந்த திருமால் தாள் தொழும் மரபினர் என்றும் இந்தச் சிறப்புப் பாயிரம் குறிப்பிடுகிறது.[3] இவரது திருக்குறள் உரையின் பாங்குகள் இந்த உரையிலும் காணப்படுகின்றன.

இந்த உரையின் சிறப்புகளில் சில

  • ஒவ்வொரு பாடலுக்கும் பாடலின் பொழிப்புரை போலத் தொகுப்புரை தரப்பட்டுள்ளது.
  • வானியல் [4] குறிப்புகள் சில இதில் தரப்பட்டடுள்ளன.[5]
மேலவாகிய நாள்-மீன்களைக் கீழவாகிய மதி புணரும்.
எரி - அங்கியைத் தெய்வமாக உடைய கார்த்திகை. அதனால் அதன் முக்காலை உடைய இடபம் உணர்த்தப்பட்டது.
சடை - சடையையுடைய ஈசனைத் தெய்வமாக உடைய திருவாதிரை. அதனால் அதனை உடைய மிதுனம் உணர்த்தப்பட்டது.
வேழம் - வேயத்துக்கு யோனியாகிய பரணி. அதனால் அதனை உடைய மேடம் உணர்த்தப்பட்டது.
3 வகை வீதிகள்
இடப வீதி - கன்னி, துலாம், மீனம், மேடம்
மிதுன வீதி - தேள், வில்லு, மகரம், கும்பம்
மேடவீதி - இடபம், மிதுனம், கற்கடகம், சிங்கம்
  • பாழ் என்பது ஒன்றுமில்லா வெறுமையைக் குறிக்கும் எண். இதனைச் சாங்கியரின் இறைக்கொள்கை என்கிறார்.[6]
  • பிற்குளத்து ஆதிரை - மார்கழி மாதம் திருவாதிரை நாளில் அந்தணர் நீராடி விழா எடுத்தலைத் தைநீராடல் எனக் குறிப்பிடுகிறார்.[7]

அடிக்குறிப்பு

  1. உ. வே. சாமியாதையர் எழுதிய பொருட்சுருக்கக் குறிப்புரை முதலியவற்றுடன் (நான்காம் பதிப்பு 1956). பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சுப்பிரமணிய தேசிகர் பொருளுதவி.
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 60.
  3.  கண்ணுதல் கடவுள் அண்ணல் அங் குறுமுனி
    முனைவேல் முருகன் என இவர் முதலிய
    திருந்து மொழிப் புலவர் அதுந்தமிழ் ஆய்ந்த
    சங்கம் என்னும் துங்க மலி கடலுள்
    அரிதின் எழுந்த பரிபாட்டு அமுதம்
    அரசு நிலை திரீஇய அளப்பு அருங் காலம்
    கோது இல் சொல் மகள் நோதகக் கிடத்தலின்
    பாடிய சான்றவர் பீடு நன்கு உணர
    மிகை படு பொருளை நகை படு புன் சொலின்
    தந்து இடை மடுத்த கந்தி தன் பிழைப்பும்
    எழுதினர் பிழைப்பும் எழுஉத்து உரு ஒக்கும்
    பகுதியின் வந்த பாடகப் பிழைப்பும்
    ஒருங்கு உடன் கிடந்த ஒவ்வாப் பாடம்
    திருந்திய காட்சியோர் செவி முதல் வெதுப்பலில்
    சிற்றறிவினர்க்கும் தெற்றெனத் தோன்றிய
    மதியின் தகைப்பு விதியுளி அகற்றி
    எல்லை இல் சிறப்பின் தொல்லோர் பாடிய
    அணி திகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்
    சுருங்கிய உரையில் விளங்கக் காட்டினன்
    நீள் நிலம் கடந்தோன் தாழ்தொழு மரபின்
    பரிமேலழகன் உரையின் உணர்ந்தே.

  4. astrology
  5. பரிபாடல் 11 உரை
  6. பரிபாடல் 3-70 உரை
  7. பரிபாடல் 11-75 உரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.