படுக்கைப் புண்

மிகவும் நலிந்த நிலையில் உள்ள நோயாளர்கள் படுக்கையில் தாமாகவே அசைந்து படுப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் உடலின் சில இடங்களில் தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வழுத்தம் அப்பகுதிகளில் உள்ள தோலின் இரத்த ஓட்டத்தை இல்லாமல் செய்கிறது. தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இரத்த ஓட்டம் தடைப்படுமானால் அப்பகுதிகளில் உள்ள தோல் பழுதடைந்து புண்கள் உருவாகின்றன. இவை படுக்கைப்புண்கள் எனப்படும். இவை தவிர உடலில் உணர்வு நரம்புகள் பாதிக்கபடும்போது தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படக்கூடிய இடங்களில், [உ-ம் பாதங்கள்,ஆசனப்பகுதி]உடலில் ஏற்படுத்தும் வலி காரணமாக உடல் தானாகவே அசைதலும் நிலைமாறுதலும் இல்லாமல் போகிறது. இதனாலும் அப்பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றன. இவை அழுத்தப் புண்கள்.

படுக்கைப் புண்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதோல் மருத்துவம்
ஐ.சி.டி.-10L89.
ஐ.சி.டி.-9707.0
நோய்களின் தரவுத்தளம்10606
ஈமெடிசின்med/2709
MeSHD003668


படுக்கைப் புண் ஆபத்து உள்ளவர்கள்

பின்வருவோருக்குப் படுக்கைப்புண் வரக்கூடிய ஆபத்து உள்ளது.

  1. உடற்பலவீனமுள்ள முதியவர்கள்
  2. நோய்களால் உடலசைவுகள் பாதிக்கப்பட்டோர் உ-ம் பாரிசவாத நோயாளிகள், விபத்துகள் காயங்களினால் பாதிக்கப்பட்டு கால், கை போன்றவற்றை அசைக்க முடியாதோர்,மயக்க நிலையில் உள்ள நோயாளர்கள்,முள்ளந்தண்டு வடம் பாதிக்கப் பட்டவர்கள்
  3. வலியினை உணர முடியாதோர் உ-ம் தொழுநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள்,
  4. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,மனவளர்ச்சி குன்றியோர்

ஏற்படக்கூடிய இடங்கள்

நாரிப் பகுதியின் கீழ்ப்புறம், இடுப்பின் பக்கவாட்டுப் பகுதி, பாதங்கள் போன்றவை மற்றும் தோலுக்கு அருகாமையில் எலும்புகள் காணப்படும் இடங்கள் மிகுதியாக அழுத்தத்திற்கு உள்ளாவதால் இவ்விடங்களில் படுக்கைப் புண்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

படுக்கைப் புண் பாதிப்பை அதிகரிக்கும் காரணிகள்

தொடர்ச்சியான அழுத்தம், உராய்வுகள், ஈரத்தன்மை போன்றவை படுக்கைப் புண்களின் தீவிரத்தை அதிகரிக்கும்.

அறிகுறிகள்

முதலில் தோலின் நிறம் சிவப்பாக மாறி பின்னர் கருப்பாக மாறும்.அதன் பின் தோலில் சிதைவுகள் தோன்றி புண்ணாக உருவாகும்.உரிய சிகிச்சை அளிக்க தவறின் அது மேலும் பெரிதாகி தசைகள், எலும்புகள் போன்றவற்றையும் பாதிக்கும்.இவ்விடங்களில் கிருமிகளின் தாக்கங்களின் போது காய்ச்சல் போன்ற பிற அறிகுறிகளும் உருவாகும்.

பராமரிப்பும் சிகிச்சையும்

படுக்கைப் புண்கள் சிகிச்சை அளிப்பதற்கு சிரமமானவையாகவும் நோயாளியின் உடல் நிலையை மோசமாக பாதிப்பனவாகவும் உள்ளன.எனவே இவை தோன்றாமல் தடுப்பதே சிறப்பானது.படுக்கைப் புண் ஆபத்துள்ள நோயாளர்களை பராமரிக்கும் போது பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும்.

  1. படுக்கையில் உள்ள நோயாளிகளின் உடலை குறைந்தது இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒருமுறையேனும் புரட்டி விடுதல் வேண்டும்.இதனால் ஒரே இடத்தில் தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படுதல் தவிர்க்கப்படும். இதன்போது ஏற்படும் உராய்வினை தவிர்ப்பதற்காக மிகவும் மிருதுவாக நோயாளியை அசைத்தல் மிகவும் அவசியமாகும்.
  2. நோயாளியின் உடலில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்காக நீர் அடைத்த மெத்தைகள், காற்றடைத்த மெத்தைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.அதற்கான வசதி குறைந்தோர் மிருதுவான துணிகள் தலையணைகள் போன்றவற்றை பயன்படுத்தி அழுத்தமேற்படும் இடங்களை பாதுகாகலாம். அத்தோடு நோயாளியின் உடலை புரட்டும் போது பலுவேறு நிலைகளில் நோயாளியின் உடலை பேணுவதற்கும் உபயோகிக்கலாம்.
  3. நோயாளியின் உடலை எப்போதும் சுத்தமாகவும் ஈரலிப்பின்றியும் வைத்திருத்தல் வேண்டும். சில நோயாளர்களுக்கு அவர்களறியாமலே மலம், சிறுநீர் போன்றவை படுக்கையிலேயே வெளியேறிவிடும். இதனால் நோயாளி சுத்தமற்ற ஈரலிப்பான சூழ்நிலையில் இருக்கவேண்டி உள்ளது.இது படுக்கைப் புண் இலகுவில் தோன்றி கிருமித்தொற்றுக்கும் உள்ளாவதற்கும் ஏதுவாகிறது. எனவே இவர்களுக்கு சிறுநீர் படுக்கையை நனையா வண்ணம் ஃபோலீஸ் கதீற்றர் அல்லது போல்ஸ் குளாய் போன்ற வற்றை உபயோகிக்கலாம். நோயாளி மலம் கழித்தவுடன் அவரையும் படுக்கையையும் சுத்தம் செய்து ஈரத்தையும் துடைத்து அகற்றுதல் அவசியமானதாகும்.
  4. ஏதாவது ஓர் இடத்தில் புண் தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டால் அவ்விடத்தில் அழுத்தம் ஏற்படாவண்ணம் பாதுகாத்தலும் அவ்விடத்தை சுத்தமாகவும் ஈரலிப்பின்றியும் வைத்திருத்தல் வேண்டும்.
  5. தேவையான உடற்பயிற்சி சிகிச்சை வழங்குவதன் மூலம் நோயாளியின் உடலசைவுகளை மேம்படுத்தல் வேண்டும்.
  6. அன்றாடம் நோயாளியை குளிக்க வைத்தலும் ஈரவுடலை முழுமையாக துவட்டி ஈரலிப்பை உறிஞ்சக்கூடிய பவுடர் போன்றவற்றை பூசுதல் நன்று.
  7. போசாக்குள்ள புரதசத்து நிறைந்த உணவுகள் நோயாளிக்கு வழங்கப்பட வேண்டும். இது புண்கள் விரைவாக மாறுவதற்கு உதவும்.

படுக்கைப் புண்ணை அக்கறைகள்

ஒவ்வொரு நாளும் நோயாளியை குளிக்க வைக்கும் போது கட்டிய மருந்துகளை அகற்றிய பின்னர் சவர்க்காரம், உப்பு நீர் போன்றவற்றால் நன்றாக கழுவுதல் வேண்டும். இதற்கு தோலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தலை தவிர்க்க வேண்டும்.ஈரம் துவட்டிய பின்னர் கிருமி நீக்கப்பட்ட சுத்தமான பருத்தி துணிகளினால் மூடி கட்டுப் போட வேண்டும் இதற்கு கட்டுத்துணிகள், பிளாஸ்ரர், இடுப்பு பகுதியாயின் துணிக்கு மேலே பம்பேர்ஸ் போன்றவற்றை உபயோகிக்கலாம். கிருமித் தொற்று அறிகுறிகளான காய்ச்சல் சீழ் வடிதல், துர் நாற்றம் போன்றவை இருந்தால் மருத்துவரின் உதவியை நாடுதல் வேண்டும்.

சுயநினைவுள்ள படுக்கைப் புண் நோயாளர்கள் உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாவர். எனவே அவர்களுக்கு உளவியல் ஆதரவும் ஆலோசனையும் வழங்கப்படல் வேண்டும்.

சந்தைகளில் கிடைக்கும் காற்று படுக்கையை பயன்படுத்துவதால் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

இந்த காற்று படுக்கை, காற்றடைக்க ஒரு மின்னில் இயங்கும் காற்று உந்தியுடன் செயல்படுகிறது. இந்த படுக்கை இரண்டு அடுக்கான காற்று அடைக்கப்படும் குமிழ்கள் கொண்டதாக இருக்கிறது. அதாவது, ஒரு வரிசை குமிழில் காற்று ஏற்றப்படும் போது, அடுத்த வரிசையின் காற்று வெளியேற்றப்படும். இந்த வரிசை மாறி மாறி அமைக்கப்பட்டுள்ளது.

குமிழ்கள் காற்று நீக்கப்பட்டு மீண்டும் அடைக்கப்படுவதால், உடலின் மீதான அழுத்தம் தொடர்ந்து அழுத்தம் ஏற்படாமல், குருதி ஓட்டத்திற்கு வகை செய்கிறது.

இந்த காற்று படுக்கை பயன்படுத்துவதுடன் கான்டிட் என்கிற மருந்து பொடியை உடலின் மீதும், புண் ஏற்பட்ட இடங்களிலும், படுக்கையிலும் தூவி வந்தால், படுக்கை புண் நீங்கிவிடும்.

கான்டிட் மருந்து பொடியை முத்துகு, மூட்டு, குண்டிப்பகுதி, இடுப்பு, பிடறி ஆகிய இடங்களில் தூவ வேண்டும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.