நிலம்

நிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும்.[1] வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. நிலத்துக்கும், நீருக்கும் இடையிலான பிரிப்பு மனிதனுடைய அடிப்படைக் கருத்துருக்களுள் ஒன்று. நிலம், நீர் என்பவற்றுக்கு இடையிலான எல்லை குறித்த பகுதியின் ஆட்சி அதிகாரங்களிலும், வேறு பல காரணிகளையும் பொறுத்து மாறுபடக்கூடும். கடல்சார் எல்லை, அரசியல் எல்லை வரையறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீர் எங்கே நிலத்தைச் சந்திக்கிறது என்பதைத் தெளிவாக வரையறுப்பதற்கு உதவக்கூடிய பல இயற்கையான எல்லைகள் உள்ளன. பாறை நில அமைப்புக்கொண்ட இடங்களில் எல்லை வரையறுப்பது, சதுப்பு நிலப் பகுதிகளில் எல்லை வரையறுப்பதை விட இலகு. ஏனெனில் சதுப்புப் பகுதிகளில் பல நேரங்களில் நிலம் எங்கே முடிகிறது, நீர் எங்கே தொடங்குகிறது என்பதைக் கூறுவது கடினமானது. வற்றுப்பெருக்கு, காலநிலை என்பவற்றைப் பொறுத்தும் இந்த எல்லை வேறுபடக்கூடும்.

பொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்பதுள் அடங்கும். நிலத்தை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.

பெயர்

"நிலம்" என்பது "நீர் போல் இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை" எனப் பொருள் கூறப்படுகிறது. நிலையாக நிற்பது என்னும் பொருளில் "நில்" என்னும் அடியில் இருந்து "நிலம்" என்னும் சொல் உருவானது.[2] இது ஒரு திராவிட மொழிச் சொல். பிற திராவிட மொழிகளில் இதற்கு நிலம் {மலையாளம்), நெல (கன்னடம், துளு, குடகு, படகர்), நேல (தெலுங்கு), நெல்ன் (துட) போன்ற சொற்கள் பயன்படுகின்றன.

நீட்சிப் பொருள் கொண்ட வேர்ச்சொல் நுல். இதிலிருந்து நிலம் என்னும் சொல் பின்வருமாறு பெறப்படும்: நுல் --> நெல் --> நெள் --> நெரு --> நெகிழ் {நெகிள்) --> நீள் --> நிள் --> நில் --> நிலம் [3]

பொருளியலில் நிலம்

நிலம் அல்லது இயற்கை வளம் - பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மண் மற்றும் கனிப்பொருள்கள் முதலிய இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள். நிலத்துக்கான கொடுப்பனவு வாடகை ஆகும்.

நிலத்தின் இயல்புகள்

  • இயற்கையின் கொடைகளாகும் அதாவது மனிதனால் உருவாக்க முடியாது.
  • உற்பத்திச் செலவற்றது.
  • செயலற்றவை அது மனிதமுயற்சி மற்றும் ஏனைய காரணிகளின் இணைப்பினாலே நிலம் செயலுள்ளதாகும்.
  • இடம்பெயரும் தன்மை அற்றது.
  • விரைவாகக் குறைந்துசெல் விளைவு விதி தொழிற்படும்.

நிலத்தின் முக்கியத்துவம்

  • உற்பத்தி மேற்கொள்ள நிலம் அவசியம்.
  • சகல மூலவளங்களும் நிலைத்திருக்க நிலம் அவசியம்.
  • மனிதமுயற்சி மற்றும் ஏனைய காரணிகளை உட்புகுத்துவதனால் நிலத்தின் பெறுமதி அதிகரிக்கும்.
  • நெகிழ்ச்சியற்ற நிரம்பலைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. Michael Allaby, Chris Park, A Dictionary of Environment and Conservation (2013), page 239, ISBN 0199641668.
  2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, படலம் 5, பாகம் 2, பக். 59.
  3. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, படலம் 5, பாகம் 2, பக். 60.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.