நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்

நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இந்தப் புலவர் பெயர் நிகண்டன். கலைமானின் கொம்பு ஒன்றை இவர் தன் கையில் முக்கோலாகப் பயன்படுத்தியதால் கலைக்கோட்டுத் தண்டனார் என்னும் விளக்கம் இவர் பெயரோடு சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. இதனால் இவர் ஒரு முனிவர் என அறியமுடிகிறது. நற்றிணை 382 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் இவர் பெயரில் பதிவாகியுள்ளது.[1]

  • தண்டு = முனிவர் தவம் செய்யும்போது தன் வலக்கையைத் தாங்குமாறு வைத்துக்கொள்ள உதவும் முக்கோல்.

நற்றிணை 382 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் இவர் பெயரில் பதிவாகியுள்ளது.

பாடல் சொல்லும் செய்தி

ஒருவழித் தணத்தல்

மணத்தல் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் தணத்தல். தணத்தல் என்பது பிரிந்திருத்தலைக் குறிக்கும். தலைவன் தலைவியைச் சிறிது காலம் பிரிந்திருத்தலை ஒருவழித் தணத்தல் என்பர். பொருள்வயிற் பிரிந்தால் பாலைத்திணை. ஒருவயிற் தணத்தல் எல்லாத் திணையிலும் நிகழும்.

தலைவி தோழியிடம் சொல்கிறாள் - அவரின் தற்காலிகப் பிரிவை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவருக்குப் பழி வருமல்லவா?

உவமை - குடம்பை

  • குடம்பை = குருவிக் கூடு

பறவைகள் குடம்பையைப் பிரிந்து இரை தேடச் செல்லும். மீண்டும் தன் குடம்பைக்கே வந்துவிடும். அதுபோலத்தான் அவர் நம்மைப் பிரிந்திருக்கிறார்.விரைவில் திரும்புவார் என்று தலைவி தன் தலைவனைப்பற்றிக் குறிப்பிடுகிறாள்.

குடம்பை - திருக்குறள்

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்து அற்றே உடம்போடு உயிர் இடை நட்பு - திருக்குறள் 338 ,

இதில் வரும் குடம்பை என்னும் சொல்லுக்கு முட்டை என்றும், கூடு என்றும் பொருள் கூறுகின்றனர். நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் ஆட்சியோடு தொடர்பு படுத்திப் பார்த்து இந்தக் குறளுக்குப் பொருள் காண்பது நல்லது.

மேற்கோள்கள்

  1. நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.