நாவண்ணன்

நாவண்ணன் (சூசைநாயகம் இறப்பு: ஏப்ரல் 15, 2006) ஒரு சிறந்த கவிஞர், சிறந்த ஓவியர், சிறந்த சிற்பவல்லுனர், சிறந்த நாடக நெறியாள்கையாளர். போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஓவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டவர். நாட்டுப்பற்றாளர். இவர் தனது கலைப்படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்குமுறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டி விட்டவர். சிங்கள அரசு தமிழீழத்திலே நிகழ்த்திய கொடுமைகளையும், கொடூரங்களையும் அதனதன் தன்மைகளோடு காலவரிசைப்படி பதிவு செய்தவர். போராட்ட வாழ்வில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சனைகளையும், நெருக்கடிகளையும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்தவர். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதியநுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்கு ஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தவர்.

நாவண்ணன்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுகவிஞர், ஓவியர், ஈழத்து எழுத்தாளர், சிற்பி

எழுத்துலகம்

  • இவர் 1957 இல் இருந்து அவ்வப்போது நடந்த தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளின் சாட்சியங்களை 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பெயரில் நூலாக்கித் தொகுத்திருந்தார்.
  • சிங்களப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மன்னார் - வங்காலைப் பங்குத்தந்தை அருட்திரு. மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றி 'தீபங்கள் எரிகின்றன' என்ற பெயரில் எழுதினார்.
  • விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களின் வரலாற்றை 'கரும்புலி காவியம்' என்ற பெயரில் எழுதினார்.
  • 1999 இல் நடைபெற்ற மடுத்தேவாலயப் படுகொலை பற்றி ஒரு சிறந்த தொகுப்பை கையெழுத்துப்பிரதியாகச் செய்திருந்தார். அது அச்சில் வெளிவரவில்லை.
  • இவரது 'அக்கினிக் கரங்கள்' என்ற நூல் மார்ச் 1, 2006 அன்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது.

புலிகளின் குரல் வானொலியில்

புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்தார். தொண்ணூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடர் நிகழ்ச்சி ஒன்றை வானொலியில் வழங்கினார். ஏற்கெனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளையும் சேர்த்துத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக் குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தினார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை பல விடயங்களை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார்.

குடும்பவிபரம்

இவருக்கு ஒரு மகன் ஐந்து மகள்கள். இவரது மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்) போராட்டத்தில் இணைந்து மே 16, 1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் களமொன்றில் வீரச்சாவடைந்தார்.

விருதுகள்

இவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக 'மாமனிதர்' என்ற அதியுயர் தேசியவிருது இவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் இவருக்கு வழங்கப்பெற்றது.

தங்கப்பதக்கம்

புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக 1998 இலும், கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இன்னொரு தடவையுமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் இரு தங்கப்பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.[1]

பரிசுகள்

லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயமிடம் இருந்து பரிசு பெற்றார்.[2]

இவர் எழுதிய ஈழப்போராட்டப் பாடல்களில் சில

  • என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா
  • ஒட்டி ஓரா மீன்பிடிக்க கடலில் போகின்ற மச்சான்..
  • யாரென்று நினைத்தாய் எம்மை..
  • வீரக்குழந்தைகளே எங்கள் வெற்றித்திலகங்களே...

செஞ்சோலைப்பாடல்கள் சிலவும்[3]

வெளி வந்த நூல்கள்

  • தமிழன் சிந்திய இரத்தம்
  • புத்தளத்தில் இரத்தக் களம்
  • கதை கண்ணீர் கவிதை (1992, கவிதைத்தொகுப்பு)
  • தீபங்கள் எரிகின்றன
  • நினைவாலயம்
  • கரும்புலி காவியம் (கவிதைத்தொகுப்பு)
  • அக்கினிக் கரங்கள்
  • சுனாமிச் சுவடுகள்
  • எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன

வெளி இணைப்புகள்

உசாத்துணை

  1. புலிகளின் தலைமையால் மாமனிதராக மதிக்கப்பட்ட கலைஞர் நாவண்ணன்
  2. லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயம் அவரிகளிடம் பரிசு வாங்கும் கலைஞர் நாவண்ணன்
  3. செஞ்சோலை இறுவெட்டு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.