நா. கண்ணன்

முனைவர் நா. கண்ணன் (நாராயணன் கண்ணன்) தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவர்கள்; நிறுவனர்களில் ஒருவர் ஆவார். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம (digital) வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவர்.

நா. கண்ணன்

நா.கண்ணன் தொழில்முறையில் ஒரு அறிவியல் விஞ்ஞானி. மதுரைப் பல்கலைக் கழகத்திலும், ஜப்பானிலுள்ள எகிமே பல்கலைக் கழகத்திலும் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் போன்ற துறைகளில் தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் முக்கிய இந்திய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். இவர் 10 வருடங்கள் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராக இருந்துவிட்டு தற்போது கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராக செயல்படுகிறார்.

தமிழ் மரபு அறக்கட்டளை

இவ்வமைப்பின் மூலமாக காலத்தால் அழிவுறும் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர். இது குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து தமிழ் மக்களிடையே எடுத்துச் செல்பவர். இதற்காக இருமுறை இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்து இந்திய மைய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்திய மா-கணினி மையம் (பெங்களூர்) எடுத்தாளும் இந்திய இலக்க நூலகம் மற்றும் மில்லியன் புத்தகத் திட்டத்தில் தொடர்ந்து இவ்வமைப்பின் மூலமாகப் பங்களித்து வருகிறார்.

தமிழ் வரலாறு, கலை, இலக்கிய ஆவணப்பதிவுகள் இந்திய மண் தாண்டி காலனியாதிக்க அரசுகளிடம் உள்ளது அறிந்து பிரித்தானிய நூலகத்திலுள்ள புத்தகங்களை இலக்கப்பதிவாக்கும் முயற்சியையும் அறிமுகப்படுத்தியவர். தமிழ் மரபு அறக்கட்டளையின் மூலமாக தமிழின் முதல் முஸ்லிம் பெண் நாவலாசிரியை சித்தி ஜுனைதா பேகத்தின் எழுத்தைத் தமிழக இலக்கிய உலகில் பிரபலப்படுத்தினார். அது போல் சிட்டி சுந்தரராஜன் அவர்களின் மூலமாக தமிழின் முதல் புதினம் (நாவல்) இலக்கப்பதிவாகிறது. தமிழில் உருவாகிய முதல் நுதலியப்பொறி (optical character recognition software) வாசித்த 1941ம் ஆண்டுப் புத்தகமும் தமிழ் மரபு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டதே. அதே போல் தமிழ்ப் பாரம்பரியம் சார்ந்த பல குறுந்தகடுகளை த.ம.அ வெளியிட்டுள்ளது.

ஏனைய பணிகள்

கணித்தமிழ் இயக்கத்தின் மூத்த அமைப்பாளர்களுள் ஒருவர். தமிழ் வரிவடிவ அமைப்பு முயற்சிகளில் மெக்கிண்டாஷ் இயங்கு தளத்தில் முயன்று பார்த்தவர். இதற்காக கலிபோர்னியப் பல்கலைக்கழகப் (பெர்கிலி) பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் நடாத்திய பட்டறையில் கலந்து கொண்டவர். இது உத்தமம் எனும் அமைப்பு தோன்றி முறையாக எழுத்துச் சீர்மையில் இறங்கும் முன்னமே நடந்தது. உத்தமம் அமைப்பின் தொன்மை உறுப்பினர். பல வருடங்கள் ஐரோப்பிய கிளையின் தலைவராக செயல்பட்டு இருக்கிறார்.

தமிழின் முதல் மடலாடற் குழுவான தமிழ்.வலை குழுமத்தில் தீவிரப் பங்கு கொண்டவர். அது பொழுது இவர் எழுதி பரபரப்பாக வாசிக்கப்பட்ட "பாசுர மடல்கள்" குறுந்தகடு வெளியீடாக தமிழ் இணைய மாநாட்டில் (கோலாலம்பூர்) வெளிவந்த போது இம்முயற்சிகளின் முன்னோடி எனும் தகுதியும் இவருக்குக் கிடைத்தது. இம்மடலாடற்குழு உருவாக்கிய மதுரைத்திட்டத்தில் ஐரோப்பிய ஒருங்கமைப்பாளராக இயங்கிவருகிறார்.

தமிழை மின்னுலகில் நிரந்தரப்படுத்தும் முயற்சி நிமித்தமாக காலச்சுவடு இதழ் நடாத்திய "தமிழினி 2000" எனும் கருத்தரங்கில் இணையமும் இலக்கியமும் எனும் அமர்வை உருவாக்கி, மின்னுலகம் என்பது தமிழின் ஆறாம்திணை எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.

இலக்கியப் பங்களிப்புக்கள்

தமிழ் இலக்கிய உலகில் புதுக்கவிதையால் உந்தப்பட்டு உள்ளே நுழைந்த நா.கண்ணன் 70களிலிருந்து கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் என பங்களித்து வருகிறார். இவரது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, இந்தியா டுடே, குங்குமம் மற்றும் புகலிடப் பத்திரிக்கைகளில் வெளிவந்து இருக்கின்றன.

தொடர்ந்து இவரது இலக்கியப் பங்களிப்பு மின்னுலகில் நடந்து வருகிறது. மின்னுலகின் பல்லூடகத்தன்மையைப் பயன்படுத்தி இவர் தனது படைப்புகளை ஒலிப்பதிவாக்கி வருகிறார், மாலன் அவர்கள் தொடங்கி நடத்திய திசைகள் மின்னிதழில் சில காலம் ஆசிரியர் குழுவிலும், இ-சங்கமம் இதழின் இணை ஆசிரியராகவும், சிஃபி டாட் காம் இதழில் பத்தியாளராகவும் உள்ளார்.

இவரது நூல்கள்

  • உதிர் இலை காலம் (சிறுகதைகள், தமிழ் செல்வி பதிப்பகம், 1998)
  • நிழல்வெளி மாந்தர் (சிறுகதைகள், மதி நிலையம்)
  • விலை போகும் நினைவுகள் (குறுநாவல் தொகுப்பு, மதி நிலையம்)

வெளி இணைப்புக்கள்

நிர்வகிக்கும் மடலாடற் குழுக்கள்

வலைப்பதிவுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.