துருவுபலகை

துருவுபலகை என்பது தமிழர் மரபுவழிச் சமையலறைகளிலும், வேறும் சில இந்தியச் சமையலறைகளிலும் பயன்படும் ஒரு கருவி ஆகும். இது மருவிய சொல்லான திருவலை என்னும் சொல்லாலும் அழைக்கப்படுவது உண்டு.

யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள துருவு பலகை ஒன்று

பயன்பாடும் அமைப்பும்

இதனைப் பயன்படுத்தித் தேங்காயைத் துருவித் தேங்காய்ப்பூ பெறுவர்.

துருவுபலகை, இருந்து துருவுவதற்கான செவ்வக வடிவ மரப்பலகையையும், விளிம்பில் பற்கள் போன்ற அமைப்புக்கொண்ட வட்டமான இரும்பாலான துருவும் கொண்டது. சில துருவுபலகைகளில், கிடையாக அமைந்த இருக்கும் பலகையும், அதன் ஒரு முனையில் இருந்து தொடங்கி மேல் நோக்கிச் சரிந்திருக்கும் மரத்தாலான கழுத்துப் போன்ற பகுதியும் ஒரே மரத்தினால் செய்யப்பட்டிருக்கும். சரிவான அக் கழுத்துப் பகுதியின் மேல் முனையில் துருவும் அலகு பொருத்தப்படும். சில துருவுபலகைகளில், இருக்கும் பலகை மட்டுமே மரத்தால் செய்யப்பட்டிருக்கும். துருவும் அலகை அதனோடு இணைந்த வளைவான இரும்புத் தண்டொன்றின் மூலம் மரப்பலகையுடன் பொருத்துயிருப்பர். நிலத்தில் இருந்து தேங்காய் துருவுவதற்கா வடிவமைக்கப்பட்டது இது. இதன் மூலம் துருவும்போது துருவும் அலகு நிலையாக இருக்க, துருவுபவர் தேங்காயை அசைத்துத் துருவ வேண்டும்.

தற்காலத்தில்

இலங்கையில் பயன்படுத்தப்படும் தேங்காய் துருவி

தற்காலத்தில் பல அலகுகளைக் கொண்ட சுழலக்கூடிய துருவும் அலகுகள் பயன்படுகின்றன. இதனோடு இணைக்கப்பட்ட கைபிடியைச் சுழற்றுவதன் மூலம் அலகைச் சுழற்றித் தேங்காய் துருவலாம். இவை உயரமான சமையலறை வேலைத்தளங்களின் விளிம்புடன் பொருத்தக்கூடிய வடிவமைப்புக் கொண்டவை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.