திபெத்திய வரலாறு

திபெத்திய வரலாறு (Tibetan history) பதியப்பட்ட காலத்திலிருந்து குறிப்பாக திபெத்திய பௌத்த வரலாறாக உள்ளது. திபெத்திய, மங்கோலியப் பண்பாடுகளில் பௌத்த மதத்தின் மையப்பங்கும் அனைத்து உள்நாட்டு வரலாற்றாளர்களும் பௌத்த சமயத்தினராக இருந்ததும் காரணமாகும்.

வரலாற்றுக்கால திபெத்
போடலா அரண்மனை

புவியியல் பின்னணி

திபெத்து தொன்மையான சீன இந்திய பண்பாடுகளின் கருப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. திபெத்திய பீடபூமிக்கு கிழக்கே தொடர்ந்த மலைத்தொடர்கள் சீனாவுடனான எல்லைகளை வரையறுக்கின்றன; இந்தியா மற்றும் நேபாளத்தின் உயர்ந்தெழும் இமயமலை திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான தடையாக இருக்கிறது. திபெத் "உலகின் கூரை" அல்லது "பனித்தூவிகளின் நாடு" என்றும் அழைக்கப்படுகின்றது.

மொழியியலாளர்கள் திபெத்திய மொழிகளையும் வழக்கு மொழிகளையும் திபெத்திய-பர்மிய மொழிகளைச் சேர்ந்தவையாக கருதுகின்றனர்; அவை சீனவழி மொழிகளான சீன-திபெத்திய மொழிகள் குடும்பத்தின் அங்கங்களாக இல்லை.

வரலாற்றுக்கு முந்தையக் காலம்

சில தொல்லியல் தரவுகளின்படி, அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் முதலில் குடியேற்றம் நிகழ்ந்தபோது பண்டைய மாந்தர்கள் திபெத்து வழியாக சென்றுள்ளனர். [1] ஓமோ சப்பியன்சுகள் முதலில் திபெத்திய பீடபூமியில் குறைந்தது இருபத்தியோராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழத் தொடங்கினர்.[2] இந்த மக்கள்தொகைக்கு மாற்றாக பெரும்பாலும் கிமு 3000 ஆண்டுகளில் வடச்சீன புதிய கற்கால குடியேறிகள் வந்தனர். இருப்பினும் "தற்கால திபெத்திய மக்கள்தொகையில் பழைய கற்கால மக்களின் மரபணுத் தொடர்ச்சி பகுதியும் உள்ளது".[2]

பெருங்கற்கால நினைவுச்சின்னங்களை திபெத்திய மேட்டுநிலமெங்கும் காண முடிகிறது. இவை தொல்குடிகள் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். வரலாறுக்கு முந்தைய இரும்புக் கால மலைக்கோட்டைகளும் இடுகாட்டு வளாகங்களும் அண்மையில் திபெத்திய மேட்டுநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இக்களங்களின் மிகவும் அணுக்கமில்லாத மீயுயர் அமைவிடங்களால் தொல்லியல் ஆய்வுகள் நடத்துவது கடினமாக உள்ளது.

துவக்க கால வரலாறு

சில திபெத்திய வரலாற்றுரைகள் தற்போதைய திபெத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அம்தோ விலிருந்து குடிபெயர்ந்தவர்களால் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் சாங் சுங் பண்பாடு உருவானதாக கூறுகின்றன.[3] சாங் சுங் பண்பாடே போன் சமயத்தின் முதல் துவக்கமாகும்.[4]

கி.மு முதலாம் நூற்றாண்டில் யார்லுங் பள்ளத்தாக்கில் இருந்த அண்மைய இராச்சியமும் அதன் அரசர் திரிகும் சென்ப்போவும் யார்லுங்கிலிருந்த போன் பௌத்தத் துறவிகளை வெளியேற்றி சாங் சுங் பண்பாட்டின் தாக்கத்தை அழிக்க முற்பட்டனர்.[5] ஆனால் திரிகும் சென்ப்போ கொல்லப்பட்டதால் சாங் சுங்கின் தாக்கம் தொடர்ந்தது. இது 7ஆம் நூற்றாண்டில் சோங்ட்சன் கம்போ இப்பகுதியை ஆக்கிரமிக்கும் வரைத் தொடர்ந்தது.

கி.பி 108இல் நாடோடிகளாகவும் இரக்கமற்றவர்களாகவும் வாழ்ந்துவந்த திபெத்தியர்கள் சீன எல்லைகளைத் தாக்கினர்; இவற்றை சீனப் பேரரசர் லியாங் கின் கடுமையான சண்டைகளுக்குப் பிறகு வெற்றிகரமாகத் தடுத்தார். இதேபோன்ற தாக்குதல்களை கி.பி 168-169 காலத்திலும் சீனர்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டனர்.[6]

திபெத்தின் இக்கால கட்ட மன்னர்களைக் குறித்தக் குறிப்புகள் பலவும் செவிவழிச் செய்திகளாகவே உள்ளன. நியாத்ரி சென்ப்போ தான் யார்லுங் பேரரசை நிறுவிய முதல் மன்னராகக் கருதப்படுகிறார். தற்போதைய லாசாவிற்கு தென்கிழக்கே கிட்டத்தட்ட 55 மைல் தொலைவில் இதன் தலைநகர் அமைந்திருந்தது.[7] இவரது ஆட்சிக்காலம் குறித்த தெளிவு இல்லை; சிலர் கிமு 126 என்றும் வேறு சிலர் கி.மு 414 என்றும் பதிந்துள்ளனர்.[8]

திபெத்தியப் பேரரசு (618–842)

திபெத்தின் வரலாற்றுக் கோடு (627 - 2013)
தனது உச்சத்திலிருந்தபோது திபெத்தியப் பேரரசின் எல்லைகள், கி.பி 780 - 790s

யார்லுங் அரசர்கள் மெல்ல மெல்ல தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தி வந்தனர். ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும்பாலான திபெத்திய பழங்குடியினரும் யார்லுங் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர்.[9] இதன்மூலம் யார்லுங் இராச்சியம் திபெத்தியப் பேரரசாக உருவெடுத்தது.[9]

608-609இல் சீனாவிற்குத் தனது தூதர்களை அனுப்பி முறையான பன்னாட்டு அரசாக திபெத் அங்கீகாரம் பெற்றது. [10][11][12]

7ஆம் நூற்றாண்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டு வரை திபெத்தை பல அரசர்கள் ஆண்டனர். இவர்களது நீளமானப் பட்டியலை திபெத்திய வரலாறு பதிந்துள்ளது. இவர்களில் முதன்மையானவர்களாக சோங்ட்சென் காம்ப்போ, திரிசோங் டெட்சன், இரால்பகன் கருதப்படுகின்றனர். இவர்களில் சோங்ட்சென் காம்போ (c. 604 – 650) முதல் பேரரசராக கருதப்படுகிறார்; திபெத்தின் கட்டுப்பாட்டை லாசாவையும் யார்லுங் பள்ளத்தாக்கையும் கடந்து விரிவாக்கிய பெருமை கொண்டவர். இவரே பௌத்த சமயத்தை திபெத்திற்கு அறிமுகப்படுத்தியவராகக் கருதப்படுகிறார்.

ஒன்பதாம் நூற்றாண்டில் பேரரசின் ஆதிக்கம் தெற்கில் வங்காளம் வரையிலும் வடக்கே மங்கோலியா வரையிலும் பரவியிருந்தது.

மேற்கோள்கள்

  1. Laird 2006, பக். 114-117.
  2. Zhao, M; Kong, QP; Wang, HW; Peng, MS; Xie, XD; Wang, WZ; Jiayang, Duan JG; Cai, MC et al. (2009). "Mitochondrial genome evidence reveals successful Late Paleolithic settlement on the Tibetan Plateau". Proc Natl Acad Sci U S A 106: 21230–21235. doi:10.1073/pnas.0907844106. பப்மெட்:19955425.
  3. Norbu 1989, pp. 127–128
  4. Helmut Hoffman in McKay 2003 vol. 1, pp. 45–68
  5. Karmey 2001, p. 66ff
  6. Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. பக். 47–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8135-1304-9.
  7. Powers 2007, பக். 141.
  8. Norbu 1995, p. 220
  9. Powers 2007, பக். 142.
  10. Beckwith 1987, பக். 17.
  11. Forbes, Andrew ; Henley, David (2011). 'The First Tibetan Empire' in: China's Ancient Tea Horse Road. Chiang Mai: Cognoscenti Books. ASIN: B005DQV7Q2
  12. Beckwith, C. Uni. of Indiana Diss., 1977

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.