தரவு (யாப்பிலக்கணம்)
செய்யுளியலில், தரவு என்பது, செய்யுள் வகைகளுள் ஒன்றான கலிப்பாவின் முதல் உறுப்பு ஆகும். இது செய்யுளுக்கு முகவுரை போன்றது. எடுத்துக்கொண்ட பொருளை அறிமுகப்படுத்தும் பாங்கில் அமைந்தது. இது குறைந்தது மூன்று அடிகளையும், கூடிய அளவாகப் பன்னிரண்டு அடிகளையும் கொண்டு அமைந்திருக்கும்.
கலிப்பாவின் வகைகளுக்கு ஒப்பத் தரவுகளின் எண்ணிக்கை மாறுபடுவது உண்டு. பெரும்பாலும் ஒரு தரவே வருமாயினும், சில கலிப்பாக்களில் இரண்டு தரவுகளும் காணப்படுவது உண்டு. தரவு இல்லாமலே வரும் கலிப்பாக்களும் உண்டு.
எடுத்துக்காட்டு
குமரகுருபரர் எழுதிய சிதம்பரச் செய்யுட்கோவை என்னும் நூலில் வரும் கலிப்பாப் பகுதியில் உள்ள மூன்றடித் தரவு பின்வருமாறு.
- கொன்செய்த கலையல்குற் கொலைசெய்தமதர் வேர்கண்
- மின்செய்த சிறுமருங்குற் பெருந்தேவி விழிகுளிர்ப்பப்
- பொன்செய்த மணிமன்றி னடஞ்செய்த புகழோய்கேள்
குமரகுருபரர் எழுதிய காசிக் கலம்பகம் என்னும் நூலில் வரும் மயங்கிசைக் கொச்சக் கலிப்பா வகைகையைச் சேர்ந்த செய்யுளில் வரும் இரட்டைத் தரவுகள் பின்வருமாறு.
- நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான
- கார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க
- இடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்
- சடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்
- கண்கதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்
- விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய். .......(1)
- நிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்
- கற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே
- பழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை
- வழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாட
- உரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளை
- வரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே. ...................(2)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.