தமிழருவி மணியன்
தமிழருவி மணியன் (ஆங்கிலம்:Tamilaruvi Manian ) தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். இவர் அருவியில் நீர் கொட்டுவதைப் போல், வார்த்தைத் தடுமாற்றம் இன்றி பேசுவார். இதனைக் கேட்ட முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர் இவரை தமிழருவி என்று பாராட்டினார். அன்று முதல் இவர் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார். மேடையில் பேசுவது போலவே தனது தனிப்பட்ட வாழ்வில் எளிமையோடு நடந்துகொள்பவர்.

கல்வி
தமிழருவி மணியன் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் கல்வியியல், சட்டம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
பணி
சென்னை சூளைப் பகுதியில் அமைந்துள்ள இந்து ஒற்றுமைக் குழு மேல்நிலைப் பள்ளியில் (Hindu Union Committee Higher Secondary School) வரலாற்று ஆசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். சிலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
அரசியல்
காமராசரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்ட இவர், அவரது தலைமையில் கீழ் இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு, சிண்டிகேட் காங்கிரசு எனப்பட்ட நிறுவன காங்கிரசு ஆகியவற்றில் இணைந்து தொண்டாற்றினார். காமராசரின் மறைவிற்குப் பின்னர் ஜனதா கட்சியில் இணைந்தார். இராமகிருட்டிண கேக்டே (Ramakrishna Hegde) ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தி என்னும் கட்சியைத் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். பின்னர் முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்துவின் ஆலோசனையை ஏற்று லோக்சக்தி கட்சியில் இருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 2008 ஆம் ஆண்டில் ஈழ இனப்பிரச்சனையில் அக்கட்சியின் நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடு கொண்டு அங்கிருந்து விலகினார். 2009 ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்.[1]
புதிய அரசியல் கட்சி
காந்திய மக்கள் கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை 10 பிப்ரவரி 2014 அன்று தொடங்கியுள்ளார்.[2]
படைப்புகள்
தமிழருவி மணியனின் எழுத்துகளும் சொற்பொழிவுகளும் பின்வரும் நூல்களாக வெளிவந்துள்ளன:
- அன்பிற் சிறந்த தவமில்லை
- அடிமனத்தின் சுவடுகள்
- காமராசரும் கவிராசரும்
- கம்பன் காட்டும் இந்திரசித்தன்
- ஞானபீடம்
- ஊருக்கு நல்லது சொல்வேன்
- எங்கே போகிறோம் நாம்
- கனவு மெய்ப்பட வேண்டும்
- மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
- தமிழருவி
- மறக்க முடியாத மனிதர்கள்
- வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
- நட்பை போற்றுவோம்
இவர் ஒற்றைச்சிறகு என்னும் ஒரே ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த அச்சிறுகதைக்கு 2012 ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிந்தனையின் விருதைப் பெற்றிருக்கிறது.[3]
சான்றடைவு
- தமிழருவி மணியன் பாலிமர் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி
- "காந்திய மக்கள் கட்சி".
- 2012 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்