டானியல் புவர்
டானியல் வாரன் புவர் (Daniel Warren Poor), சூன் 27, 1789 - பெப்ரவரி 3, 1855) ஒரு கிறித்தவ சமய மதகுரு ஆவார். இலங்கை மற்றும் இந்தியாவில் பல கல்விச்சாலைகளை நிறுவி, நிர்வாகம் செய்தார். இவரின் நினைவாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நூலகம் உள்ளது. மேலும், இவர் யாழ்ப்பாணக் கல்லூரியின் நிறுவனரும் ஆவார்.[1]
டானியல் புவர் | |
---|---|
பிறப்பு | 27 சூன் 1789 |
இறப்பு | 3 பெப்ரவரி 1855 (அகவை 65) |
வாழ்க்கைக் குறிப்பு
டானியல் புவர் அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் டென்வெர்சு என்னும் இடத்தில் 1789 யூன் 27 இல் பிறந்தார். ஆண்டோவர் பிலிப்சி அகாதமியில் 1805 இலும் பின்னர் டாட்மவுத் கல்லூரியில் 1811 இலும் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் ஆண்டோவர் இறையியல் மதப்பள்ளியில் இணைந்து 1814 இல் இறையியலில் பட்டம் பெற்றார். மாசச்சூசெட்சு நியூபரிபோர்ட்டில் 1815 இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.[2]
1815 அக்டோபர் 9 இல் சூசன் பல்ஃபிஞ்ச் என்பவரைத் திருமணம் புரிந்தார். இரு வாரங்களுக்குப் பின்னர் 1815 அக்டோபர் 15 இல் "ட்றியட்" என்ற கப்பலில் தனது மனைவியுடனும், மொழியியலாளர் வண. வில்லியம் பென்ட்லி என்பவருடனும் இலங்கை புறப்பட்டார். இவர்களுடன் ஜேம்சு ரிச்சார்ட்ஸ், மெஞ்சமின் மெயிக்சு ஆகிய மதகுருக்களும் அவர்களது மனைவிமாரும், எட்வர்ட் பாரென் என்ற இளம் மதகுருவும் இலங்கை சென்றனர். 1816 மார்ச் 22 இல் கொழும்பு வந்தடைந்த இவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் சென்றனர். புவரும், எட்வர்ட் பாரனும் 1816 அக்டோபர் 16 இல் தெல்லிப்பழையில் குடியேறினர்.[2]
மேற்கோள்கள்
- The Founder of Jaffna College is Rev. Dr. Daniel Poor.. 2013.
- எஸ். ஜெபநேசன். "இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும்". www.noolaham.org. பார்த்த நாள் 2-07-2017.