யோசப் பரராஜசிங்கம்

யோசப் பரராஜசிங்கம் (நவம்பர் 26, 1934 - டிசம்பர் 24, 2005) இலங்கை, மட்டக்களப்பு பகுதியை சார்ந்த முக்கிய தமிழ் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இவர் டிசம்பர் 24, 2005 அன்று படுகொலை செய்யப்பட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர். தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய அன்னாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் மாமனிதர் விருது வழங்கப்பட்டது. மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் பரராஜசிங்கம் சுடப்பட்டார். ஜோசப் பரராஜசிங்கத்துக்கு மரணிக்கும்போது வயது 71. மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் என நான்கு பிள்ளைகள் இவருக்கு; இவரது ஒருமகன் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார்.

யோசப் பரராஜசிங்கம்
நாஉ
மட்டக்களப்பு மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1990–2004
தேசியப் பட்டியல் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2005
பின்வந்தவர் சி. சந்திரகாந்தன், ததேகூ
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 26, 1934(1934-11-26)
இறப்பு திசம்பர் 25, 2005(2005-12-25) (அகவை 71)
புனித மேரி தேவாலயம், மட்டக்களப்பு, இலங்கை
அரசியல் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே.

1989இல் பல தமிழ் அமைப்புகள் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் தேர்தலில் போட்டியிட்ட சமயம் இவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றார். ஆயினும் அப்போது அவர் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இருந்தபோதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாம் தம்பிமுத்து, கொழும்பில் கனடியத் தூதரகத்துக்கு முன்பாக வைத்து தனது மனைவியார் கலா தம்பிமுத்து சகிதம் சுட்டுக்கொல்லப்படவே, அந்த இடத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஜோசப் நியமிக்கப்பட்டார்.

அதனை அடுத்த தேர்தல்களில் ஜோசப் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த போதிலும், வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் காரணமாக கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைய நேர்ந்தது. ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சி) சார்பில் தேசியப் பட்டியல் மூலமான உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.