சாதி மல்லிகை

சாதி மல்லிகை அல்லது ஜாதி மல்லிகை (Jasminum grandiflorum) தெற்காசியாவில் காணப்படும் செடி வகையாகும். ஸ்பானிஷ் ஜாஸ்மின், ராயல் ஜாஸ்மின், காடலோனியான் ஜாஸ்மின் என்றெல்லாம் ஆங்கிலத்திலும் சமேலி என்று இந்தியிலும் அழைக்கப்படுகிறது.[1] இந்தியாவில் இதன் இலைகள் ஆயுர்வேத மருத்துவத்திலும், இதன் மலர்கள் பெண்களின் சிகை அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில், இது சால்ட் ரேஞ் மற்றும் ராவல்பிண்டி மாவட்டத்திலுள்ள காடுகளில், கடல்மட்டத்திலிருந்து 500-1500 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. இது சில நேரங்களில், மல்லிகையின் (Jasminum officinale) ஒரு வகையாகவே கருதப்படுகிறது.[2]

சாதி மல்லிகை
Leaves of Jasminum grandiflorum
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Oleaceae
பேரினம்: Jasminum
இனம்: J. grandiflorum
இருசொற் பெயரீடு
Jasminum grandiflorum
L.

இது படர்ந்து 2–4 மீட்டர் உயரம் வளரக்கூடிய இலையுதிர் புதர்ச் செடியாகும். இதன் இலைகள், எதிர் இலையடுக்கத்துடன், 5–12 செ.மீ. நீளத்துடன், காது (அல்லது இறகு) வடிவமுள்ள 5–11 குற்றிலைகளுடன் காணப்படும். இதன் மலர்கள், திறந்த நுனிவளராப்பூந்துணர்களாக, 13–25 மீ.மீ. நீளம் கொண்ட தண்டுடன் இருக்கும். மேலும் வெண்ணிறம் கொண்ட அல்லிவட்டத்துடன் (இதழ்கள்) 13–22 மீ.மீ. நீளமுள்ள ஐந்து இதழ்களுடன் பூக்கின்றன.[3][4] இவற்றின் மணம் தனித்தன்மையுடனும், இனிமையாகவும் இருக்கும்.

இது மிதவெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலங்களைச் சார்ந்த பகுதிகளிலும் அழகுச் செடியாக வளர்க்கப்படுகின்றது. கரைத்துப்பிரித்தல் (கரைப்பான் வழிச் சாறு இறக்கல்) முறைப்படி, இவற்றின் சாறு எடுக்கப்பட்டு, ஜாஸ்மின் கான்கிரீட்டுகளாகவும், ஜாஸ்மின் ஒலியோரேசின்களாகவும் மாற்றப்படுகின்றன. இவை இரண்டும் வாசனைத்திரவியத் தொழிலில் உபயோகப்படுகின்றன.

பயிர்ப் பாதுகாப்பு முறைகள்

ஒருங்கிணைந்த சாதி மல்லிகை பயிர்ப் பாதுகாப்பு முறைகள்[5] கீழ்வருமாறு:

  • மொட்டுப்புழு தாக்கினால் மானோகுரோட்டோபாசு 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  • சிவப்பு சிலந்திப் பூச்சிகளை அழிக்க நனையும் கந்தகம் 50 சதத்தூளை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
  • வளர்ந்த இலை வண்டுகளை மழை வந்தபிறகு விளக்குப் பொறி வைத்து அழிக்கலாம்.
  • இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மான்கோசெப் மருந்தை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.