செம்பியன் செல்வன்
இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.(பி:ஜனவரி 1,1943 திருநெல்வேலி, யாழ்ப்பாணம் - இ:மே 20, 2005) பேராதனைப் பல்கலைக் கழக சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர்.
வரலாறு
ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனது ஆழமான பங்களிப்பினை ஆற்றிய முக்கிய படைப்பாளிகளிலொருவரான செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபாலன்) தனது அறுபத்திரண்டாவது வயதில் கொழும்பில் காலமானார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது ஆளுமையினைப் பதித்தவர் செம்பியன் செல்வன். தனது தனிப்பட்ட வாழ்வில் இவர் ஆசிரியராக, அதிபராகக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
எழுத்துப்பணி
விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தகங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய 'ஈழத்துச் சிறுகதை மணிகள்' என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரது 'சர்ப்பவியூகம்' சிறுகதைத்தொகுதி இலங்கை சாஹித்யவிருது பெற்றது. கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
திரைக்கதை
செங்கை ஆழியான் எழுதிய வாடைக் காற்று திரைப்படமான பொழுது, அதற்கான திரைக்கதை, வசனங்களை எழுதியவர்.
இவரது நூல்கள்
- சர்ப்பவியூகம் - சிறுகதைத்தொகுதி
- அமைதியின் இறகுகள் (சிறுகதைகள்)
- குறுங்கதைகள் நூறு (குறுங்கதைகள்)
- கானகத்தின் கானம் - நாவல்
- நெருப்பு மல்லிகை (நாவல்)
- விடியலைத் தேடும் வெண்புறாக்கள் (நாவல்)
- மூன்று முழு நிலவுகள் (நாடகம்)
- ஈழத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனம்)
- நாணலின் கீதை (தத்துவம்)