சிகரக் காட்டுவள சரணாலயம்

சிவனொளிபாத மலைச்சிகரச் சரணாலயம் (Peak Wilderness Sanctuary) இலங்கையில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இயற்கைக் காப்பு சரணாலயங்களுள் பரப்பளவில் மூன்றாவது பெரியதாகும்.[2]

சிவனொளிபாத மலைச்சிகரச் சரணாலயம்
Peak Wilderness Sanctuary
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
சிவனொளிபாத மலைச்சிகரச் சரணாலயத்தினுள் அமைந்துள்ள சிவனொளிபாத மலை
சிவனொளிபாத மலைச்சிகரச் சரணாலயம்
அமைவிடம்மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள், இலங்கை
கிட்டிய நகரம்இரத்தினபுரி
ஆள்கூறுகள்6°48′47″N 80°29′04″E
பரப்பளவு22,379.1 ஹெக்டேயர்
நிறுவப்பட்டது1940 ஒக்டோபர் 25
நிருவாக அமைப்புஇலங்கை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்
உலகப் பாரம்பரியக் களம்2010 (சரணாலயத்திற்கு உட்டிருக்கும் இலங்கையின் மத்திய மலைநாடு)[1]

இச்சரணாலயம் சிவனொளிபாத மலையைச் சுற்றி 224 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள இலங்கையின் அயனமண்டல மழைக்காடாகும். இக்காட்டுப் பகுதிக்கு உரித்தான காடுகளில் மிகப் பெரிய பகுதி பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் (1815-1948) வெட்டி அகற்றப்பட்டு பிரமாண்டமான தேயிலைப் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட தேயிலைப் பெருந்தோட்டங்கள் நுவரெலியா மாவட்டத்தில் இன்றும் நன்கு செயற்படுகின்றன. பிரித்தானிய ஆட்சியின் இறுதிப் பகுதியில் 1940 ஒக்டோபர் 25 அன்று எஞ்சியிருந்த பகுதி சிகரக் காட்டுவள சரணாலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.

புவியியல் விபரம்

சிவனொளிபாத மலைச்சிகரச் சரணாலயத்தின் உயர அமைவு கடல் மட்டத்திலிருந்து 1000 அடி முதல் 7360 அடி வரை வேறுபடுகிறது. எனவே, அது இலங்கைத் தீவில் காணப்படும் ஏனைய இயற்கை வளக் காப்பு அமைவிடங்களிலும் வித்தியாசமான புவியியல் அடிப்படையைக் கொண்டுள்ளது. சிகரக் காட்டுவள சரணாலயத்தினுள் அமைந்துள்ள உயர்ந்த மலைச் சிகரங்களுள் பென சமனல(6579 அடிft), தொடலுகல, தெதனகல போன்ற சிகரங்கள் அடங்குகின்றன. அவ்வாறே, களனி கங்கை, களு கங்கை, வளவை கங்கை மற்றும் மகாவலி கங்கையின் ஏராளமான கிளையாறுகள் இதனுள்ளேயே தோன்றுகின்றன என்பதுடன் அவ்வாறுகள் தொட்டலு நீர்வீழ்ச்சி, கெரண்டி நீர்வீழ்ச்சி, கலகம நீர்வீழ்ச்சி (655  அடி) மற்றும் மாபான்ன நீர்வீழ்ச்சி (330  அடி) பல்வேறு சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகள் தோன்றுவதற்குக் காரணமாகின்றன.

இந்த சிவனொளிபாத மலைச்சிகரச் சரணாலயத்தை அடைவதற்கு ஹட்டன், குருவிட்ட மற்றும் பலபத்தல ஆகிய ஊர்களினூடாக மூன்று வழிகள் காணப்படுகின்றன. அவற்றில் பலபத்தல ஊடான வழியே சிவனொளிபாத மலையை அடைவதற்கு பௌத்த புனித பயணிகளும் ஏனைய உல்லாசப் பிரயாணிகளும் பொதுவாகப் பயன்படுத்துவதாகும். குருவிட்ட, பலபத்தல ஆகிய ஊர்களினூடான வழிகள் சரியாக இச்சரணாலயத்தை ஊடறுத்துச் செல்கின்றன. இக்காட்டுப் பகுதி இலங்கை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இக்காட்டின் தூய்மையைப் பாதுகாப்பதற்காக, சிகரக் காட்டுவள சரணாலயத்தின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் எந்தவொரு பயணிகள் தங்குமிடமோ இளைப்பாறும் மடமோ அல்லது அவ்வாறான வெறெதுவுமோ அமைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. எனினும், இயற்கைச் சூழலைக் கண்டுகளிக்க விரும்பும் பயணிகள் இலங்கை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம் தேவையான அனுமதியைப் பெற்றக்கொண்ட பின் சரணாலயத்தினுட் சென்று வருவதற்கு முடியுமாக இருக்கிறது. மழைக் காலங்களில் இக்காட்டுப் பகுதியினுட் செல்வது மிக ஆபத்தானதாகும். ஏனெனில், திடீரென ஏற்படும் வெள்ளப் பெருக்கு, சரிவுகள் மற்றும் நச்சுப் பிராணிகள் என்பவற்றால் உயிராபத்து ஏற்பட வாய்ப்புண்டு.

அமைவிடம்

இது மத்திய மலைநாட்டில் சபரகமுவ மலைத்தொடர்களில் அமைந்துள்ளது.

எல்லைகள்

சிவனொளிபாத மலைச்சிகரச் சரணாலயத்தைச் சரியாக வரையறுக்கத் தக்க எல்லைகள் குறிக்கப்படவில்லை. பெரும்பாலான எல்லைகள் அரசாங்கத்தினதும் தனியாரினதும் விவசாயப் பெருந்தோட்டங்களினால் வரையறுக்கப்படுகின்றன. இதன் கிழக்கத்திய எல்லை பிதுருதலாகல மலைப் பகுதியினாலும் ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவினாலும் குறிக்கப்படுகின்றது.

மேலும் பார்க்க

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.