சி. பாலசுப்பிரமணியன்
சி. பாலசுப்பிரமணியன் தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். தமிழக ஆளுநராக இருந்த கே. கே. ஷாவிற்கு தமிழ் கற்பித்தவர்.
பிறப்பு
சி.பாலசுப்பிரமணியன் செஞ்சி நகரில் 1935 மே 3ஆம் நாள்[1] சின்னசாமி[2] என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி
பள்ளி இறுதி வரை கண்டாச்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பயின்றார்.[1] சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழிலக்கியத்தில் கலை இளவர் (சிறப்பு) பட்டம் பெற்றார். அப்பொழுது பேராசிரியர்கள் மு. வரதராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகியோரிடம் பயின்றார். பின்னர் குறுந்தொகை - திறனாய்வு (A Critical Study of Kuruntokai) என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, 1963 ஆம் ஆண்டில், ஆய்வு நிறைஞர் (எம்.லிட்.) பட்டமும் சேரநாட்டு செந்தமிழ் இலக்கியங்கள் (A Study of the literature of the Cera Country) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து, 1970 ஆம் ஆண்டில் முனைவர் (பி. எச்டி) பட்டமும் பெற்றார்.
பணி
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பயிற்றுநராக 1957ஆம் ஆண்டில் தனது பணியைத் தொடங்கி, விரிவுரையாளராக உயர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நுழைந்து, பேருரையாளராக, பேராசிரியராக உயர்ந்தார். 1976 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை தமிழ்மொழித் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
துணைவேந்தர்
1989 திசம்பர் 4ஆம் நாள் முதல் 1992 திசம்பர் 3ஆம் நாள் வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
எழுதிய நூல்கள்
- அலை தந்த ஆறுதல்
- அறநெறி (திசம்பர் 1991)
- அறவோர் மு.வ.
- ஆண்டாள் (மார்ச் 1994)
- இலக்கிய அணிகள் (1972)(தமிழக அரசின் பரிசு பெற்றது)
- இலக்கிய ஏந்தல்கள்
- இலக்கியக் காட்சிகள்
- உருவும் திருவும்
- கட்டுரை வளம்
- கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
- காரும் தேரும் (1966)
- சங்க இலக்கியம் - சில பார்வைகள்
- சங்க கால மகளிர் (திசம்பர் 1983)
- சமயந்தோறும் நின்ற தையலாள் (திசம்பர் 1991)
- சான்றோர் தமிழ்
- சேர நாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள் (1987) (ராசா சர். அண்ணமலைச் செட்டியார் பரிசு பெற்றது)
- தமிழ் இலக்கிய வரலாறு (1959)
- தமிழ்நாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்
- திருப்பாவை விளக்கம் (நவம்பர் 1995)
- திருவெம்பாவை விளக்கம்
- தொல்காப்பியக் கட்டுரைகள்
- நல்லோர் நல்லுரை
- நெஞ்சின் நினைவுகள் (அக்டோபர் 1980)
- பட்டினப்பாலை வழங்கும் காட்சிகள்
- பாட்டும் தொகையும் - ஓர் அறிமுகம்
- பாரதியும் பாரதிதாசனும்
- பாவைப் பாட்டு
- புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
- பெருந்தகை மு.வ. (மார்ச் 1976)
- மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
- மலர் காட்டும் வாழ்க்கை
- முருகன் காட்சி
- மு.வ.வின் சிந்தனை வளம் (ஆகத்து 1994) - டாக்டர் மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு - 1994, சென்னைப் பல்கலைக் கழகம்
- வாழையடி வாழை
- வாழ்வியல் நெறிகள் (திசம்பர் 1990)
- Papers in Tamil Literature
- The status of women in Tamilnadu during the Sangam Age
- A Critical Study of Kuruntokai
- A Study of the literature of the Cera Country
பதிப்பித்த நூல்
பெற்ற விருதுகள்
- புலவரேறு - குன்றக்குடி ஆதினம் வழங்கியது
- செஞ்சொற் புலவர் - தமிழ்நாட்டு நல்வழி நிலையம்
- சங்கநூற் செல்வர் - தொண்டை மண்டல ஆதினம்
விமர்சனங்கள்
சி. பாலசுப்பிரமணியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றும் பொழுது புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் இடம்பெற்றிருந்த பாரதிதாசன் பாடல்களில் இயற்கை என்னும் 32 பக்கக் கட்டுரை, பேராசிரியர் பீர் முகமது நம்சுதீன் என்பவர் எழுதிய, அன்னம் பதிப்பகத்தின் வெளியீடான, பாரதிதாசன் பாடல்களில் இயற்கை என்னும் நூலில் இருந்து சொல்மாறாமல் சி. பாலசுப்பிரமணியனால் படியெடுக்கப்பட்டு இருக்கிறது என குற்றம்சாட்டப்பட்டது.
சான்றடைவு
- சி. பாலசுப்பிரமணியன், அறநெறி, நறுமலர் பதிப்பகம் சென்னை, மு.பதி. 1991, நூலட்டை
- பாலசுப்பிரமணியன் சி, பெருந்தகை மு.வ.; கழக வெளியீடு, சென்னை; மு.ப. ஏப் 1976; பக் உ