சி. சிவமகராஜா

சின்னத்தம்பி சிவமகராஜா (Sinnathamby Sivamaharajah, இறப்பு: ஆகத்து 20, 2006) இலங்கை அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகவும், தமிழர் விடுதலைக் கூட்டணி, மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் வலிகாமம் வடக்கு பொது அமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.[2]

சின்னத்தம்பி சிவமகராஜா
Sinnathamby Sivamaharajah
பிறப்புயாழ்ப்பாணம், இலங்கை
இறப்புஆகத்து 20, 2006 (அகவை 68)
யாழ்ப்பாணம்
இனம்இலங்கைத் தமிழர்
பணிநமது ஈழநாடு ஆசிரியர், பணிப்பாளர்
சமயம்இந்து

சின்னத்தம்பி சிவமகராஜா யாழ்ப்பாணக் குடாநாட்டை மையமாகக் கொண்டு தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி 2002 ஆம் ஆண்டில் "நமது ஈழநாடு" பத்திரிகையை ஆரம்பித்தார். இலங்கை படைத்துறையினர் இப்பத்திரிகை நிலையத்தின் மீது 2005 டிசம்பரில் தாக்குதல் நடத்தினர்.[3][4] அக்காலகட்டத்தில் இலங்கையில் ஊடகவியலாளருக்கு எதிராக இடம்பெற்று வந்த அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்பட்டது.[5][6][7] விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி இவருக்கு எதிராக மரண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.[8]

படுகொலை

சிவமகராஜா 2006 ஆகத்து 20இல் அவரது வீட்டில் தெல்லிப்பளையில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது வீடு இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்தது.[9]

ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனம் இப்படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.[10][11] பன்னாட்டு ஊடகவியலாளர் மன்றம் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசைக் கேட்டிருந்தது.[12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.