சாவக மனிதன்
ஜாவா மனிதன் என்பது 1981 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின், கிழக்கு சாவகத்தில் உள்ள பெஙாவன் சோலோ (Bengawan Solo) ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவம் ஒன்றுக்குரிய மனித மூதாதை ஒருவனுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். ஓமோ எரெக்துசு (Homo erectus) என்னும் உயிரியற் பெயரால் அழைக்கப்படும் இம் மனித மூதாதை தொடர்பில் கிடைத்த மிகப் பழைய தடயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆதி மனிதன் 500,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கண்டு பிடித்த இயுஜீன் டுபொய்ஸ் (Eugène Dubois) என்பவர் இவ்வகை மனிதனுக்கு பித்தெகாந்திராப்பஸ் இரெக்ட்டஸ் (Pithecanthropus erectus) என்னும் அறிவியற் பெயரை வழங்கினார். இப்பெயர், நிமிர்ந்த மனிதக் குரங்கு மனிதன் என்னும் பொருள்படக்கூடிய கிரேக்க, இலத்தீன் மொழி வேர்ச் சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டது.

வரலாறும் முக்கியத்துவமும்
டுபொய்ஸின் கண்டுபிடிப்பு ஒரு முழுமையான மாதிரி அல்ல. இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும். இவை அனைத்துமே ஒரே இனத்துக்கு உரியவைதானா என்பதிற் சில ஐயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. இது போன்ற ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது மாதிரி நடுச்சாவகத்தில் உள்ள சஙீரான் என்னும் ஊரிற் கண்டுபிடிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இம் மாதிரியைத் தொடர்ந்து மேலும் பல இது போன்ற மாதிரிகள் இப்பகுதியிற் கண்டுபிடிக்கப்பட்டன.