சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி (Chavakachcheri Drieberg College) என்பது இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவின் தலைநகரமான சாவகச்சேரியில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.[2] தென்மராட்சியில் நிறுவப்பட்ட முதல் பாடசாலை இதுவே. இது ஆண், பெண் இரு பாலாரும் கல்வி பயிலும் கலவன் பாடசாலையாகும்.

Drieberg College
டிறிபேக் கல்லூரி
முகவரி
கண்டி வீதி
சாவகச்சேரி, வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°39′36″N 80°9′3.599″E
தகவல்
வகைபொது தேசியப் பாடசாலை
குறிக்கோள்Lamp of Life
நிறுவல்1875
நிறுவனர்ஜேம்ஸ் ஸ்டுவர்ட் டிறிபேக்
பள்ளி மாவட்டம்தென்மராட்சி கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு
பள்ளி இலக்கம்0212270737/0212270738
அதிபர்ந. ஜெயக்குமரன்
ஆசிரியர் குழு50
பால்கலவன்
மாணவர்கள்1000
மொழிதமிழ், ஆங்கிலம்
பரப்பு3 ஏக்கர்[1]

வரலாறு

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்காக இலங்கை வந்த அமெரிக்க மிசனைச் சேர்ந்தவர்கள் 1875 ஆம் ஆண்டில் "டிறிபேக் ஆங்கிலப் பாடசாலை" என்ற பெயரில் இப்பாடசாலையை நிறுவினர்.[3][1] அக்காலத்தில், தென்மராட்சி நீதிமன்றத்தில் பொலிஸ் நீதவானாகப் பணியாற்றிய ஜேம்ஸ் ஸ்டுவர்ட் டிறிபேக் என்பவர் இதற்குத் தேவையான நிதியின் பெரும் பகுதியை வழங்கினார். இதன் காரணமாகவே இப்பாடசாலைக்கு அவருடைய பெயர் இடப்பட்டது. இவருடைய பெயர் பாடசாலைக்கும் மட்டும் இன்றி ஒரு இல்லத்திற்கும் வழங்கப்பட்டது. இவரின் பின் வண டி. பி. ஹண்ட் அவர்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்புமே இக் கல்விப்பணி நிலை பெற துணை புரிந்தன.[3] 77 மாணவர்களுடனும் 2 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் முதலாவது தலைமையாசிரியராக ஆர். எஸ். முத்தையா என்பவர் பணியாற்றினார். ஆரம்பத்தில் 5-ஆம் வகுப்பு வரையுமே வகுப்புகள் இருந்தன.[3]

இப்பாடசாலையின் வளர்ச்சியில் அடுத்த கட்டம் 1913 ஆம் ஆண்டு ஆரம்பமாயிற்று. அப்பொழுது இக் கல்லூரியின் நிர்வாகத்தை வண. ஜே. கே. சின்னத்தம்பி பெறுப்பேற்றார். இப்போதும் சின்னத்தம்பி இல்லம் என்ற ஓர் இல்லம் பாடசாலையில் காணப்படுகிறது. இவருடைய முயற்சியினால் கல்லூரி வளர்ச்சியுற்று 1915 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை விடுப்பு சான்றிதழ் (English School Leaving Certificate - ESLC) வழங்கும் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. வண. சின்னத்தம்பி அவர்களும் நீதவான் டிறிபேர்க் குடும்பத்தினரும் இணைந்து நிதியைத் திரட்டி பல்வேறு கட்டடங்களையும் மைதானத்தையும் உருவாக்கினர்.

1920 ஆம் ஆண்டில் 300 மாணவர்களுடன் இப்பாடசாலை இயங்கியது. இவர்களில் 30 பேர் பெண்கள் ஆவர். 1923 இல் இப்பாடசாலை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1931 இல் இது கல்லூரி மட்டத்துக்கு தரமுயர்த்தப்பட்டது.[3]

யாழ்ப்பாணக் கல்லூரியுடன் இணைப்பினை பெற்றுக்கொண்ட பின்னர், அக்கல்லூரியில் அதிபராகவிருந்த பேரறிஞர் ஜோன் பிக்னல் இப்பாடசாலை வளருவதற்கு பலவழிகளிலும் உந்து சக்தியாக விளங்கினார். இக் கால கட்டத்தில் டிறிபேர்க் கல்லூரியின் அதிபராக விளங்கியவர் ஈ. எஸ். ஏபிரகாம். இவர் 1931 ஆம் ஆண்டு மறைந்தார். இவருடைய பெயரில் ஒரு இல்லம் இயங்கிவருகிறது. இவரைத் தொடர்ந்து கே. எஸ். சரவணமுத்து டிறிபேர்க் கல்லூரிக்கு அதிபரானார். தென்மராட்சியில் ஆங்கிலக் கல்வியின் தேவை அதிகமாக உணரப்பட்டது. 1940 இல் யாழ்ப்பாணக் கல்லூரி இயக்குனர் சபையிடம் இருந்து எஸ்.எஸ்.சி வகுப்புக்களையும், இலண்டன் மெட்ரிக்குலேசன் வகுப்புக்களையும் நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டது. பெருந்தொகையான மாணவர்கள் ஆங்கிலக் கல்வி பெற்று அரசாங்கத்திலே சிறந்த உத்தியோகங்களைப் பெற்றனர். லண்டன் மற்றிக்குலேசன் பரீட்சைக்கு முதன்முதலாக 1941ஆம் ஆண்டு மாணவர்கள் தேற்றினர். அப்பொழுது கல்வித்துறையில் மேதைகளாக விளங்கிய யாழ்ப்பாண கல்லூரியின் துணை அதிபர் ஜே.வி.செல்லையா, உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் எல்.ஜி.புக்வோல்ட்டர் (L.G.Bookwalter) ஆகியோர் இக் கல்லூரியின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்திருந்தனர். 1941 ஆம் ஆண்டு நீதவான் டிறிபேர்க்கினுடைய மருமகள் அலன் டிறிபேர்க் இப்பாடசாலையில் தமது மாமனாரின் நினைவாக ஒரு நிலையமும் வாசிப்புக் கூடமும் அமைப்பதற்கு நன்கொடை ரூ.2000/= வழங்கினார்.

1950ஆம் ஆண்டு இந்த வளாகத்தில் இயங்கிய ஆரம்ப தமிழ்ப் பள்ளியும் டிறிபேர்க் ஆங்கில பாடசாலையும் ஒன்றாக இணைந்தன. இப் பாடசாலையில் முன்னர் இருந்த ஒல்லாந்த தேவாலயம் இடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதனுடைய கற்கள் புதிதாக அமைக்கப்பட்ட நவமணி படமாளிகையை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன. 1950 இல் கல்லூரி மண்டபம் திருத்தி அமைக்கப்பட்டது.

1875 இல் இருந்து அமெரிக்க மிசனால் நிர்வாகம் செய்யப்பட்டுவந்த இப்பாடசாலை 1962 இல் இலங்கைப் பாடசாலைகள் நாட்டுடைமை ஆனபோது இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1975 இல் இப்பாடசாலை தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.

சாவகச்சேரி நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த காரணத்தால், இப்பாடசாலை ஈழப்போர்க் காலப்பகுதியில் இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்கும், விமானத் தாக்குதல்களுக்கும் உள்ளானது. இதன் பல கட்டடங்கள் சேதமடைந்தன. 1995 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யாழ்ப்பாண இடம்பெயர்வின் போது, இப்பாடசாலை அகதி முகாமாக இயங்கியது. 2000களின் ஆரம்ப காலத்தில் ஈழப்போரின் உச்சக்கட்டத்தில் இப்பாடசாலை முற்றாக சேதமடைந்த நிலையில்,[1] கைவிடப்பட்டு, சில ஆண்டுகள் கோண்டாவிலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது. ஏப்ரல் 2002 இல் மீண்டும் சாவகச்சேரியில் இருந்து இயங்கி வருகிறது.

அதிபர்கள்

  • ஜேம்ஸ் ஸ்டுவர்ட் டிறிபேக்
  • டி. பி. ஹன்ட்
  • வண. சின்னத்தம்பி
  • ஈ. எஸ். ஏபிரகாம்
  • ஆர். எச். நிக்கொலசு
  • கே. எஸ். சரவணமுத்து
  • ஏ. கே. சபாபதிப்பிள்ளை
  • எம். சபாநாயகம்
  • ஏ. சுவாதிநாத சர்மா
  • கே. பாலச்சந்திரன்
  • கே. சிவபாதசுந்தரம்
  • எம். நரேந்திரராஜ்
  • கே. அருந்தவபாலன்
  • ந. ஜெயக்குமரன்

இங்கு படித்தவர்கள்

மேற்கோள்கள்

  1. "Postconflict School rehabilitation, Drieberg College Chavakachcheri, Thenmaradchi, Jaffna District - Humanitarian Aid construction group". www.shacc.ch. பார்த்த நாள் 16-08-2017.
  2. "கூகிள் வரைபடத்தில் அமைவிடம்". பார்த்த நாள் 14 ஆகத்து 2017.
  3. "Drieberg College Chavakachcheri has produced outstanding personalities". சண்டே டைம்ஸ் (11-10-2014). பார்த்த நாள் 17-08-2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.