சல்மான் குர்சித்

சல்மான் குர்சித் ( சல்மான் குர்ஷித், Salman Khurshid, பிறப்பு:சனவரி 1, 1953) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. வழக்கறிஞரும் எழுத்தாளருமான குர்சித் ஃபாரூக்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து 2009ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குபவர். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் மே 2014 வரை பணியாற்றியவர். இதற்கு முன்னதாக இதே மக்களவைத்தொகுதியிலிருந்து பத்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போது சூன் 1991இல் வணிகத்துறை துணை அமைச்சராகவும் சன.1993-சூன் 1996 காலகட்டத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் பொறுப்பாற்றி உள்ளார். 1981ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பிரதமரின் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக தமது அரசியல் வாழ்வைத் துவங்கினார்.

சல்மான் குர்சித்
சல்மான் குர்ஷித்
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
28 அக்டோபர் 2012  26 மே 2014
முன்னவர் சோ. ம. கிருசுணா
பின்வந்தவர் சுஷ்மா சுவராஜ்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பதவியில்
28 மே 2011  28 அக்டோபர் 2012
முன்னவர் வீரப்ப மொய்லி
பின்வந்தவர் அஸ்வினி குமார்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1953 (1953-01-01)
அலிகார், உத்தரப் பிரதேசம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) லூயி குர்ஷித்
இருப்பிடம் கைம்கஞ்ச், பிதௌரா
படித்த கல்வி நிறுவனங்கள் தில்லிப் பல்கலைக்கழகம்
செயிண்ட். எட்மண்ட் ஹால், ஆக்சுஃபோர்டு
தொழில் வழக்கறிஞர்
சமயம் இசுலாம்

இளமையும் கல்வியும்

உத்தரப்பிரதேசத்தின் அலிகாரில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய குர்சித் ஆலம் கான் அவர்களின் மகனாகப் பிறந்தார். இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் சாகீர் உசேன் இவருக்கு அம்மாவழிப் பாட்டனாவார்.

தமது பள்ளிப் படிப்பை பீகாரின் பாட்னாவிலுள்ள புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில் துவங்கினார்.[1] பின்னர் தில்லி செயிண்ட் இசுடீவன் கல்லூரியில் ஆங்கில இளங்கலைப் பட்டமும் ஆக்சுஃபோர்டின் செயிண்ட் எட்மண்ட் ஹாலில் முதுகலை சட்டவியல் பட்டங்களையும் பெற்றார்.[2] ஆக்சுஃபோர்டின் டிரினிட்டி கல்லூரியில் சட்ட விரிவுரையாளராகவும் கற்பித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

2014ஆம் ஆண்டு உ.பியின் பருக்காபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.காவின் முகேஸ் ராஜ்புத்விடம் தோற்றார்[3].

அரசியல் சர்ச்சைகள்

2012 உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைகளின்போது அசம்கரில் உரையாற்றுகையில் தில்லியின் பாட்லா அவுஸ் காவல்துறை மோதலைக் குறித்த ஒளிப்படங்களைக் கண்டு காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி அழுததாக கூறி [4] சர்ச்சையை கிளப்பினார். இது ஓய்ந்தநிலையில் தமது கட்சி ஆட்சியை பிடித்தால், முஸ்லிம்களுக்கு 9 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாக இந்தியத் தேர்தல் ஆணையம் எச்சரித்தப் பின்னும் அவர் தொடர்ந்து பேசி வருவதாக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.[5][6]

மேற்கோள்கள்

  1. http://timesofindia.indiatimes.com/city/patna/Khurshid-nostalgic-over-Patna/articleshow/10433745.cms
  2. Biography Lok Sabha.
  3. http://indianexpress.com/article/india/india-others/top-30-losers-in-lok-sabha-polls
  4. சோனியா கண்ணீர் விட்டதாக குர்ஷித் சொன்னது பொய்!: திக்விஜய்சிங் ஒன்இந்தியா தமிழ், பெப்.10,2012
  5. சல்மான் குர்ஷித் விவகாரம்: கட்சியினருக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல் வெப்துனியா, பெப்.12,2012
  6. என்னைத் தூக்கிலிட்டாலும் கவலையில்லை- சல்மான் குர்ஷித் வெப்துனியா, பெப்.12,2012

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.