குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம் அல்லது மருத்துவர். எஸ். ரேவதி) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர் ஆவார். கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் ஒரு இந்தியப் பாடலாசிரியர், கவிஞர், சீர்திருத்தவாதி மற்றும் ஒரு மருத்துவர் ஆவார். இவர் மூன்று கவிதை நுால்களை வெளியிட்டுள்ளார்.

குட்டி ரேவதி

பிறப்பு ரேவதி சுயம்புலிங்கம்

சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
தொழில் எழுத்தாளர்
இலக்கிய வகை கட்டுரைகள், கவிதைகள்

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இவரே இந்த காலாண்டு இலக்கிய பத்திரிக்கையின் தொகுப்பாசிரியர் ஆவார். இதுவே தமிழகத்தின் முதல் பெண்ணிய செய்தி இதழாகும். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தான் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.

இவர் தனது சக மாணவர்களின் கவிதைத் தொகுப்புகள் தொடர்பான திறனாய்வு இலக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இவர் தனது சுய படைப்புகள் குறித்தும் பணிகளைத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு உலகின் மிகப் பழமையான மருத்துவ முறையாகவும், தமிழ்நாட்டைத் தாயகமாகவும் கொண்ட சித்த மருத்துவத்தைப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். அவர் சென்னையில் உள்ள மெட்ராசு வளர்ச்சிசார் கல்வி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) மருத்துவம் சார்ந்த மானிடவியலில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பை மேற்கொண்டார். இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார். சாகித்ய அகாதெமி அமைப்பினரால் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார். இவர் சமகாலத்திய தமிழ் கவிஞராக இருந்து கருத்து முரண்பாடுகளைக் கொண்ட, வாதத்துக்கிடமான பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.[1][2][3]

வெளியிட்ட நூல்கள்

கவிதை நூல்கள்

  • பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)
  • முலைகள் (2002)
  • தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)
  • உடலின் கதவு (2006)
  • யானுமிட்ட தீ (2010)
  • மாமத யானை (2011)
  • இடிந்த கரை (2012)
  • அகவன் மகள் (2013)
  • காலவேக மதயானை (2016)
  • அகமுகம் (2018)

சிறுகதை நூல்

நிறைய அறைகள் உள்ள வீடு , முதல் பதிப்பு (2013), பாதரசம் பதிப்பகம்

கட்டுரை நூல்

  • காலத்தைச் செரிக்கும் வித்தை(2009)

வெளி இணைப்புகள்

  1. "Kutti Revathi". Rotterdam: Poetry International. பார்த்த நாள் 20 June 2013.
  2. Elizabeth Dougan (April 2013). "Kutti Revathi: In the Eye of a Poetic Storm". Australia: Madurai Messenger. பார்த்த நாள் 20 June 2013.
  3. Nirmala Ravindran (24 September 2007). "Body of words". Australia: India Today. பார்த்த நாள் 20 June 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.