குடைமங்கலம்

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் குடைமங்கலம் என்பது பாடாண் திணையில் வரும் துறையாகும். புறநானூற்றில் இத்துறைப் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது.

இலக்கண நூல் விளக்கம்

  • தொல்காப்பியம் இதனை ‘நடை மிகுந்து ஏத்திய குடைநிழல் மரபு’ என்று குறிப்பிடுகிறது. [1]
  • புறப்பொருள் வெண்பாமாலை பாடாண் படலத்தில் வரும் 48 துறைகளில் இது ஒன்று. நாற்றிசையும் புகழ் விளங்க அரசாளும் மன்னவனின் வெண்கொற்றக்குடையைப் போற்றுவது இத் துறை.[2]
  • புறநானூற்றுத் திணை, துறை பகுப்புக்களுக்கு மூலமான, மறைந்துபோன பன்னிரு படலம் நூலிலிருந்து இந்தப் பகுப்புப் பெயர் தரப்பட்டுள்ளது.

இலக்கியம்

உறையூர் மருத்துவன் தாமோதரனார் விறலியருடன் இரவில் சென்றுகொண்டிருந்தார். நிறைமதி ‘உவவு’ நாள். தலை உச்சிக்கு மேல் நிலாவைப் பார்த்தார். அது அந்நாட்டு அரசன் மக்கள் துன்பங்களைப் போக்கும் வெண்கொற்றக் குடை போல் இருப்பதாக எண்ணி செல்வோர் எல்லாரும் தொழுதார்களாம்.

கடல் உப்பு ஏற்றிய வண்டியை கல்மலைப் பாதையில் இழுத்துச் செல்லும் காளைமாடு போல அவர்களது அரசன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் குடிமக்களின் சுமையை இழுத்துச் சென்றானாம். புறநானூறு 60

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் புறத்திணையியல் 17
  2. நாற்றிசையும் புகழ் பெருக
    வீற்றிருந்தான் குடை புகழ்ந்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை 222

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.