கார் நாற்பது
பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந் நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது.
எடுத்துக்காட்டு
கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின்போது மக்கள் ஏற்றி வைத்துள்ள விளக்குகளைப் போல, வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாகத் தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக மழை வந்துள்ளது என்னும் பொருளில் வரும் இந் நூற் பாடல் இது:
- நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
- தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
- புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
- தூதொடு வந்த மழை