காஞ்சித் திணை
காஞ்சித் திணை தொல்காப்பியர் நோக்கில் புறத்திணைப் பகுதியில் வரும் 7 திணைகளில் ஒன்று. இது அகத்திணையில் வரும் 7 திணைகளில் ஒன்றாகிய பெருந்திணையின் புறப்பகுதியாகும். (தொல்காப்பியம் 1023)
இது வாழ்க்கைப் பாங்கில் பல வகைகளில் சிறப்பு மிக்கது. உலகின் நிகழ்வுகள் நிலையில்லாதவை. இந்த நிலையில்லாத உலகில் நிலைபேறுடைய புகழை நாடிச் செயல்படும் நிகழ்ச்சிகளைக் கூறுவது காஞ்சித்திணை. (தொல்காப்பியம் 1024)
புறப்பொருள் வெண்பாமாலை என்னும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு நூல் இதனை வேறுவகையில் பாகுபடுத்திக் கூறியுள்ளது.
- போர் முறையில் காஞ்சித்திணை என்பது தன் நாட்டைத் தாக்கிய வேந்தனிடமிருந்து தன்னை விடுவித்துகொள்ளப் போராடுவது. (புறப்பொருள் வெண்பாமாலை 61)
- வாழ்க்கை முறையில் காஞ்சித்திணை என்பது மூதுரை, முதுமொழிக் காஞ்சி, வாழ்க்கை நிலையாமை, பொருண்மொழிக் காஞ்சி, புத்தேள்(தேவர்) உலகம், காடுவாழ்த்து - என்று ஆறு துறைகளைக் கொண்டது. (புறப்பொருள் வெண்பாமாலை 268)
நாட்டின் மேல் படையெடுத்து வரும் வஞ்சிமலர் சூடிய வீரர்களை காஞ்சித்திணை வீரர்கள் நாட்டு எல்லையில் தடுத்து நிறுத்துவர். இவ்வீரர்கள் காஞ்சிப் பூமாலையை’ சூடிச்செல்வர்.
- வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
- வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
- எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
- அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
- பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
- செரு வென்றது வாகையாம்
புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணையை விளக்கலாம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.