கர்ம யோகம்
கர்ம யோகம் என்பது கர்மம்+யோகம் எனும் சொற்களின் சேர்கையே. உடல், மனம் மற்றும் வாக்கால் செய்யும் செயல்களே கர்மம் எனப்படும். யோகம் என்பதற்கு சாதனை என்று பொருள். ஒரு செயலை வெறும் செயலாக செய்யும் போது, அச்செயல் மனதில் விருப்பு-வெறுப்புகள் கொடுத்து துயரத்தில் பந்தப்படுத்தி, மனதை பளு ஆக்குகிறது. அதே செயலை கர்ம யோக சாதனையாக நினைத்து செய்யும் போது மனதில் ஏற்படும் விருப்பு-வெறுப்புகளை நீக்கி, மனதில் அமைதி உண்டாக்குகிறது.[1] [2] [3]
கர்மத்திற்கும், கர்ம யோகத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
- கர்மம் எதிர்மறை விளைவை உண்டாக்கும், ஆனால் கர்ம யோகம் செய்வதால் எதிர்மறை விளைவு உண்டாகாது.
- கர்மத்தை முழுமையாக செய்தால்தான் பலன் உண்டு. பாதியில் நின்ற கர்மங்களுக்கு பலன் இல்லை. மேலும் கர்மத்தில் முழுப்பலன் கிடைக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்க முடியாது, ஆனால் கர்ம யோகத்தால் செய்யப்படும் செயல்களுக்கு செய்த அளவுக்காவது பலன் உண்டு.
- செய்த கர்மங்களுக்கு பலன் உறுதியாக கிடைக்கும் என்று கர்ம காண்டத்தில் உறுதி அளிப்பதில்லை.
- கர்ம யோகம் செய்வதால் மனத்தூய்மை (சித்த சுத்தி) உண்டாகும். அந்த சித்த சுத்தி மோட்சம் கிடைக்க காரணமாகிறது.
கர்மிக்கும் (செயல் செய்பவன்), கர்ம யோகிக்கும் உள்ள வேறுபாடு
- கர்மி தன் செயலில் சஞ்சலபுத்தி உடையவனாக இருப்பான், ஆனால் கர்மயோகியின் சிந்தனை, பேச்சு மற்றும் செயல் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும். கர்மி பலனை எதிர்பார்த்து செயல் செய்வான். ஆனால் கர்ம யோகியோ பலனில் விருப்பமின்றி ஈஸ்வர அர்ப்பணமாக செயல் செய்வான். கர்ம யோகி தான் செய்த செயலின் பலனை ஈஸ்வர பிரசாதமாக எடுத்துக் கொள்வான்.
கர்ம யோகம் மூன்று தத்துவங்களின் விசாரணை
- நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்களைப் பற்றிய விசாரணை
- செயல் செய்யும் போது, எப்படிபட்ட பாவனையுடன் (Attitude) செயல் செய்பவனாக (கர்தா) இருக்க வேண்டும் என்ற விசாரணை.
- செயலின் (கர்மம்) பலனை அனுபவிக்கும் போது, அதனை எவ்வாறு அனுபவிப்பனாக (போக்தா) இருக்க வேண்டும் எனும் விசாரணை.
பகவத் கீதையில் கர்மயோகம் குறித்தான நான்கு கருத்துக்கள்
- செயல் செய்ய கர்தாவுக்கு (செயல் செய்பவன்) உரிமை உண்டு
- செயல் செய்து முடித்த பின்பு, செயலின் பலனில் செயல்செய்தவனுக்கு (கர்த்தாவுக்கு) உரிமை இல்லை.
- நம் செயலின் பயன், எதன் அடிப்படையில் எனில், செயலை எப்படிப்பட்ட நோக்கத்துடன் (சங்கல்பம்)/உள் உணர்வுடன் செய்தோம் என்பதை பொறுத்து பலன் கிடைக்கிறது.
- ஒருவன் செயல் (கர்மம்) செய்யாமல் இருக்கும் மனம், சோம்பல், சோர்வு மற்றும் தோல்வியினால் வரக்கூடாது, ஆனால் வைராக்கியத்தின் மூலம் மட்டுமே வரவேண்டும். அவன் தான் கர்ம யோகி.
ஆசிரம கர்மங்கள்
- பிரம்மச்சர்யஆசிரம கர்மங்கள் (கடமைகள்): வேத சாத்திரங்களை படித்தல், குரு சேவை மற்றும் இரந்துண்டு/ பிட்சை எடுத்து வாழ்தல்.
- இல்லற ஆசிரம கர்மங்கள் : பொருள் ஈட்டல், தானம் செய்தல் மற்றும் விருந்தோம்பல், யாகம் மற்றும் யக்ஞம் செய்தல்.
- வானப்பிரத்த ஆசிரம (காடுறை வாழ்வு) கர்மங்கள் : தன் மனைவியுடன் அல்லது தனியாக காடுறைந்து ஜெபம், தவம் இயற்றல் , தியானம் செய்தல் மற்றும் இரந்துண்டு வாழ்தல்.
- சந்நியாச ஆசிரம கர்மங்கள் : தியானம், ஜெபம், வேதாந்த சாத்திரங்கள் அறிதல், இரந்துண்டு வாழ்தல், மோட்சம் வேண்டி ஆத்ம தியானம் செய்தல்.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.