கன்னியின் காதலி
கன்னியின் காதலி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், கே. ஆர். ராம்சிங், அஞ்சலிதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாதுரி தேவி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகமான பன்னிரண்டாவது இரவு என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது இத்திரைப்படம். என். டி. சுந்தரத்தின் வசனத்திலும் வேதாந்தம் ராகவய்யாவின் நடனப்பயிற்சியிலும் உருவான இத்திரைப்படம் சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எல். வசந்தகுமாரி பின்னணி பாடினார்.[1]
கன்னியின் காதலி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. ராம்நாத் |
தயாரிப்பு | கே. ராம்நாத் சேகர் |
கதை | கதை ஷேக்ஸ்பியர் |
இசை | சி. ஆர். சுப்புராமன் எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | எஸ். ஏ. நடராஜன் கே. ஆர். ராம்சிங் கே. சாரங்கபாணி முஸ்தபா அஞ்சலிதேவி மாதுரி தேவி எம். எஸ். எஸ். பாக்கியம் லலிதா பத்மினி |
வெளியீடு | ஆகத்து 6, 1949 |
நீளம் | 15342 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஒரே சாயலுள்ள அண்ணன் ஆதித்தனும் தங்கை சந்திரிகாவும் விதிவசத்தால் பிரிக்கப்பட்டு வேறு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். (அண்ணனாகவும் தங்கையாகவும் மாதுரி தேவி நடிக்கிறார்). தனது பெண்மையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஆண்வேடம் தாங்கி கலைமணி என்ற பெயர் பூண்ட சந்திரிகா, வசந்தபுரி மன்னனின் (எஸ்.ஏ.நடராஜன்) ஆஸ்தான கவியாக அமர்ந்து அவனது காதலியான மேகலையிடம் (அஞ்சலிதேவி) காதல் தூது செல்கிறாள். கலைமணியை உண்மை வாலிபன் என எண்ணிய மேகலை தன் உள்ளத்தைப் பறி கொடுக்கிறாள். சமயத்தில் ஆதித்தனும் அங்கு வருகிறான். உடன்பிறந்தவர்களின் தோற்றப் பொருத்தத்தால் தோன்றிய குழப்பங்கள் தீர்ந்து மேகலையை ஆதித்தனும், வசந்த குமாரனைச் சந்திரிகாவும் மணக்கின்றனர். கதையும் சுபமாக முடிகிறது.
பாடல்
- கலங்காதிரு மனமே... (கண்ணதாசனின் முதல் பாடல்)
- காரணம் தெரியாமல்... (பாடல்: கண்ணதாசன்)
- புவி ராஜா (பாடல்: கண்ணதாசன்)
மேற்கோள்கள்
- ராண்டார் கை (10 சனவரி 2009). "Kanniyin Kaadhali 1949". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/kanniyin-kaadhali-1949/article655128.ece. பார்த்த நாள்: 26 அக்டோபர் 2016.