ஒளிமின்னழுத்தியம்
ஒளிமின்னழுத்தியம் (Photovoltaics அல்லது PV) என்பது சூரியக் கதிரை நேரடியாக மின்சாரமாக மாற்றும் ஒளிமின்கலங்களைப் பற்றியும் அவற்றை இணைத்து மின்னாற்றலை வழங்கும் கலை, தொழில், ஆய்வைப் பற்றியும் குறிக்கும். கதிரவனில் இருந்து கதிரொளி நாளும் கிடைப்பதால், வற்றாத ஆற்றல்வாயாக இது கருதப்படுகின்றது. நகரும் பொருள்கள் ஏதும் இன்றியும், சூழலுக்குக் கேடுதரும் வெளிக்கழிவுகள் ஏதும் இல்லாமலும் நேரடியாக மின்னாற்றல் உருவாக்கப்படுவதால் இவை வரவேற்கப்படுகின்றன. மின்னாற்றலைத் தனியாக ஓரிடத்தில் உருவாக்கி மற்ற இடங்களுக்கு கம்பி வழியாக செலுத்தி வழங்க வேண்டிய தேவை இல்லாமல் எங்கு வேண்டுமோ அங்கு தனித்து இயங்கி மின்னாற்றல் பெறமுடியும் ஆகையால் இவற்றின் பயன்பாடு, படகுகளிலும், தீவுகளிலும் கூடக் காணக்கூடியது. மின் ஆற்றல் பற்றாக்குறை கூடுவதால், அண்மைக் காலமாக கதிரொளி மின்கலங்களின் உற்பத்தியும், கதிரொளி படல்களின் உற்பத்தியும் உயர்ந்துள்ளது[1][2][3].

ஒளிமின்னழுத்தியத் தயாரிப்பு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் இருமடங்காக உயர்வதினால், அதில் 2002 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 48 விழுக்காடாக உயருவதால், இதுவே உலகில் மிக விரைவாக உயர்ந்த மின்னாற்றல் தொழில்நுட்பமாக உருவாகி உள்ளது[4].
மேற்கண்ணோட்டம்
குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளி ஒரு குறைக்கடத்தியின் மீது விழுந்தால் அக்குறைக்கடத்தியில் உள்ள அணுக்களைப் பிணைத்திருக்கும் எதிர்மின்னிகள் விடுபட்டு மின்னோட்டம் அல்லது மின்னழுத்தம் ஏற்படும். நேர்வகை-எதிர்வகைக் குறைக்கடத்தி இணைப்பால் உருவான இருமுனையம் என்னும் ஈரி ஒன்றில் ஒளிக்கதிர் விழுந்தால், அக்கருவியில் மின்னழுத்தம் ஏற்படுகின்றது. ஒளியின் ஆற்றலால் அக் குறைக்கடத்தி ஈரியில் விடுபடும் எதிர்மின்னிகளும், நேர்மின்மம் உடைய புரைமின்னிகளும் (holes) அந்த ஈரியின் இணைப்பு முகத்தை ஒட்டி இருக்கும் பகுதியில் உள்ள மின்புலப் பகுதியை அடைந்து அங்கே பிரிக்கப்படுகின்றன. ஆகவே இருமுனைகளுக்கும் இடையே மின்னழுத்தம் ஏற்படுகின்றது. இவ்விளைவு ஒளிமின்னழுத்திய விளைவு( photovoltaic effect) எனப்படுகின்றது. ஒளியால் தூண்டப்பட்டு ஓர் ஈரியில் மின்னோட்டம் பாயும் கருவியை ஒளிமின் ஈரி அல்லது ஒளிமின் இருமுனையம் (photodiode) என்று அழைப்பர். ஆனால் இந்த ஒளிமின் ஈரிகளுக்குத் தனியாக வெளியிருந்து மின்னழுத்தம் தருவது வழக்கம். கதிரொளி மின்னழுத்தியக் கருவியில் தனியாக வெளியிருந்து மின்னழுத்தம் ஏதும் தரவேண்டியதில்லை. ஒளியின் தூண்டுதலாக் தோன்றும் மின்னழுத்தமே இக்கருவியை இயக்கி மின்னோட்டம் தருகின்றது. இதனால் சில நேரங்களில் கதிரொளி மின்கலத்தை புற மின்னழுத்தச் சாய்வுதராத ஒளிமின் ஈரி (இருமுனையம்) என்பர்.
தற்போதைய மேம்பாடு
ஒளிமின்படலங்களின் (solar panels) மிக முக்கிய இடுவு என்னவென்றால் முதலீட்டு தொகை ( பொருத்துதல் மற்றும் மூலப்பொருட்களுக்கான தொகை ).