ஐக்கிய சபா கட்சி

ஐக்கிய சபா கட்சி (மலாய்: Parti Bersatu Sabah, ஆங்கிலம்:United Sabah Party, சீனம்: 沙巴联合党) என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் தோழமைக் கட்சிகளில் மிக முக்கியமானக் கட்சியாகக் கருதப்படுகின்றது.

ஐக்கிய சபா கட்சி
United Sabah Party
Parti Bersatu Sabah
沙巴联合党
தலைவர்ஜோசப் பைரின் கித்திங்கான்
Joseph Pairin Kitingan
தொடக்கம்5 மே 1985
தலைமையகம் கோத்தா கினபாலு, சபா
இளைஞர் அமைப்புPBS Youth Section
பிபிஎஸ் இளைஞர் அணி
கொள்கைமைய அதிகார ஒருமிப்புக்கொள்கை, தேசியவாதம்
தேசியக் கூட்டணிபாரிசான் நேசனல்
நிறங்கள்நீலம், சிகப்பு
இணையதளம்
http://www.pbs-sabah.org/

ஐக்கிய சபா கட்சியை பிபிஎஸ் என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள். 5 மே 1985இல் உருவாக்கப்பட்டது.[1] முன்பு சபாவின் ஆளும் கட்சியாக இருந்த பெர்ஜாயா கட்சியில் (ஆங்கிலம்:Berjaya Party) இருந்து பிரிந்து வந்த கட்சியாகும். இந்தக் கட்சியைத் தோற்றுவித்தவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ பாங்லிமா ஜோசப் பைரின் கித்திங்கான்.[2]

சபா மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்களான கடாசான் டூசுன் இன மக்களைப் பிரதிநிதிக்கும் முக்கியக் கட்சியாக இருந்தாலும். தன்னை ஒரு பல்லினச் சமுதாயக் கட்சியாகக் கூறி வருகிறது. சபா மாநிலத்தில் தன்னாட்சியை நிலைப்படுத்துவது; பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பது; ஜனநாயக கோட்பாடுகளையும், மனித உரிமைகளைப் பாதுகாப்பது; நீதித் தன்மைகளை மேம்படுத்துவது போன்றவை அதன் அரசியல் நோக்கங்களாக உள்ளன.

வரலாறு

நடப்புத் தலைவராக இருக்கும் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ஜோசப் பைரின் கித்திங்கான், 1985க்கு முன்னர் சபாவை ஆட்சி செய்த பெர்ஜாயா கட்சியில் ஓர் அமைச்சராக இருந்தார். அப்போது சபாவின் முதலமைச்சராக ஹாரிஸ் சாலே என்பவர் இருந்தார். அவருக்கும் ஜோசப் பைரின் கித்திங்கானுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அதனால் ஜோசப் பைரின் கித்திங்கான் அந்தக் கட்சியில் வெளியேறி ஐக்கிய சபா கட்சியைத் தோற்றுவித்தார்.

சபா கலவரம்

1985ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் ஐக்கிய சபா கட்சி வெற்றி பெற்று, மாநில அரசாங்கத்தை அமைத்தது. பின்னர், 1994 வரையில் ஆட்சியும் செய்தது. இந்தக் கட்டத்தில், 1986இல் ஒரு முறை சபாவில் சில இடங்களில் கலவரங்கள் நடைபெற்றன. தாவாவ், சாண்டாக்கன் போன்ற நகரங்களில் கலவரங்கள் நடைபெற்றாலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டது கோத்தா கினபாலு தலைநகரமாகும்.[3]

இதைச் சபா கலவரம் என்று சொல்வார்கள். இந்தக் கலவரத்தைப் பற்றி அமைதிக் கலவரம் (ஆங்கிலம்:The Silent Riot) எனும் பெயரில் ஓர் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாடிரா இலானா (ஆங்கிலம்:Nadira Ilana) எனும் சபா பெண்மணி தயாரித்துள்ளார்.[4]

அந்தக் கலவரங்களின் விளைவுகளினால், ஐக்கிய சபா கட்சி, பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இணைந்து, சபாவில் கூட்டு ஆட்சியை நடத்தியது.[5] 1990 ஜூலை மாதம் மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் நாள், பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து ஐக்கிய சபா கட்சி விலகிக் கொண்டது. அடுத்து, தேர்தலிலும் வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை மூன்றாவது முறையாக அமைத்தது. 1994இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.

மாநில அரசாங்கம் வீழ்ச்சி

இந்தக் கட்டத்தில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய சபா கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க் கட்சியான பாரிசான் நேசனல் கூட்டணியின் பக்கம் கட்சித் தாவல் செய்தனர். ஐக்கிய சபா கட்சியின் மாநில அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. பாரிசான் நேசனல் கூட்டணி மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றியது.

அதன் பின்னர், 2002இல் ஐக்கிய சபா கட்சி மறுபடியும் பாரிசான் நேசனல் கூட்டணியும் ஒன்றிணைந்து மாநில அரசாங்கத்தை அமைத்தது. அதிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் தோழமைக் கட்சிகளில் மிக முக்கியமானக் கட்சியாக இருந்து வருகிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.