எம். ஒய். இக்பால்
எம். ஒய். இக்பால் (M. Y. Eqbal, பிறப்பு பெப்ரவரி 13, 1951) சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி.[1]
இளமையும் கல்வியும்
இக்பால் 1951ஆம் ஆண்டு பெப்ரவரி 13 அன்று பிறந்தவர். இராஞ்சிப் பல்கலைக்கழகத்திலிருந்து 1970இல் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்று 1974ஆம் ஆண்டில் சட்டப் படிப்பில் முதலாவதாகத் தேர்வுபெற்று தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்றவர்.
பணிவாழ்வு
1975ஆம் ஆண்டில் இராஞ்சியில் வழக்கறிஞராக பணி துவங்கி குடிமையியல் வழக்குகளில் ஈடுபட்டார். 1986ஆம் ஆண்டில் இராஞ்சியிலிருந்து செயல்பட்ட பட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்காடத் தொடங்கினார். 1990இல் இதே நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1993ஆம் ஆண்டில் உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞராக பதவி உயர்வு பெற்றார். இந்தக் காலகட்டத்தில் குடிமையியல், குற்றவியல் மற்றும் அரசியலைப்புச் சட்டங்களிலும் வருமான வரி வழக்குகளிலும் வழக்காடி வந்தார். பல வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், மின்சார வாரியம், வீட்டுவசதி வாரியம், பல்கலைக்கழகம் மற்றும் பிற அரசுத்துறை நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் நிறுவன வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1996ஆம் ஆண்டில் மே 9 அன்னு பட்னா உயர் நீதிமன்றத்தில் நிலையான நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நவம்பர் 14, 2000இல் சார்க்கண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சூன் 11, 2010 முதல் டிசம்பர் 2012 வரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
இவரது சகோதரர் இராஞ்சி கீழ் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றுகின்றார்.
மேற்கோள்கள்
- "Chief Justice". Madras High Court. பார்த்த நாள் 6 September 2011.