உளநோய் மருத்துவம்
உளநோய் மருத்துவம் (psychiatry) என்பது உளநோய்கள் எக்காரணங்களால் ஏற்பட்டவையாயினும், அவற்றைக் குணப்படுத்தும் மருத்துவப் பகுதியாகும். முற்காலத்தில் உளநோயாளிகள் அனைவரும் பேய், பிசாசுகளால் பிடிக்கப்பட்டவரே என்று கருதி, உளநோய்களை நீக்குவதற்கு நோயாளிகளை இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தி வந்தார்கள்.

காரணங்கள்
இக்காலத்தில் உளநோய்கள் மூன்று காரணங்களால் ஏற்படுவதாக அறிந்துளர், அவை உளவியல் காரணம், பௌதிக காரணம், உடற்காரணம் என்பனவாகும்.[1] பொதுவாக எந்த உளநோயும் இந்த மூன்று காரணங்களுள் ஏதேனும் ஒன்றினால் மட்டும் உண்டாவதில்லை. எடுத்துக்காட்டாக, வேலையின்மையால் ஊட்டக்குறை (பௌதிக காரணம்) ஏற்படலாம், அல்லது நோயாளியின் தன்னம்பிக்கையைச் (உளவியல் காரணம்) சிதைக்கலாம். ஊட்டக்குறைவு உடல்நலத்தை குறைத்து உளநலத்தைச் சிதைக்கலாம். இந்த மூன்று காரணங்களுள் ஏதேனும் ஒன்று முதன்மையாக இருக்கலாம். சில வேளைகளில் உளநோய் பௌதிக காரணங்களால் உண்டாயிருந்தபோதிலும் அந்த உளநோயின் குறைகளை விலக்குவதற்கு நோயாளியின் வாழ்க்கை வரலாற்றை அறிதல் தேவையாகும். பாம்பு என்பதைப் பாராமலோ, கேளாமலோ இருப்பவர் யாரும் பழுதையைப் பார்த்துப் பாம்பு என்று கூற முடியாது. நோயாளியின் வரலாற்றை அறிவதோடு அவருடைய பாரம்பரியத்தையும் அறிதல் தேவையாகும்.இவ்வாறு உளநோய்க் குறிகளை உண்டாக்குவதற்கு மேற்கூறிய மூன்றுவகைக் காரணங்கள் தேவையாயிருப்பதால் உளநோய் மருத்துவத்தைப் பொது மருத்துவத்தின் ஒரு பகுதியாகவே கருதவேண்டும். ஆதலால் உளநோய் மருத்துவர் பொது மருத்துவப் பயிற்சி பெற்றவராயிருத்தல் இன்றியமையாததாகும்.
உளநோய்களுக்கு மேற்கூறிய மூன்றுவகைக் காரணங்களும் தேவையேயாயினும், உளநோய்க் குறிகளைப் பெரும்பாலும், உண்டாக்குவன உள்ளக்கிளர்ச்சிக் (Emotions) குழப்பங்களேயாகும். உள்ளக்கிளர்ச்சிகளுள் மிகுந்த ஆற்றலுடையதும் பெரும்பான்மையான உளநோய்களை உண்டாக்குவதுமான உள்ளக்கிளர்ச்சி அச்சமேயாகும். ஆனால் நம்பிக்கை, கோபம், அருவருப்பு முதலிய உள்ளக்கிளர்ச்சிகளும், அவற்றை வெளிப்படுத்த முடியாதவாறு தடுக்கக்கூடிய தடைகள் ஏற்படுமானால் உளநோய்க் குறிகளை உண்டாக்கிவிடும். உளநோய்க்குரிய உளவியல் காரணங்கள் நோயாளிக்கு ஏற்பட்ட சந்தர்ப்ப முரணால் ஏற்படுவதைவிட நோயாளியின் ஆளுமையினாலும் (Personality), வரலாற்றினாலும் ஏற்படுகின்றன என்று அறியவேண்டும். ஒரேவித நிகழ்ச்சி ஒருவரிடம் உளச்சோர்வையும் மற்றொருவரிடம் எதிர்ப்புத் தன்மையையும் உண்டாக்குவதற்குக் காரணம் அவரவர் ஆளுமையிலும், வாழ்க்கை முறையிலும், வருங்கால நோக்கத்திலும் காணப்படும் வேற்றுமையேயாகும். ஆகவே நோயாளி புறத்தே அடையும் வாய்ப்புக் குறைவால் ஏற்படும் உள்ளக்கிளர்ச்சிகளைவிட அவருடைய உள்ளத்தே குறிக்கோள், நோக்கம், விருப்பம் முதலியவைபற்றி உண்டாகும் உள்ளக்கிளர்ச்சிகளே உளநோய்களை உண்டாக்கும் முக்கிய காரணங்களாகும்.
தம்முடைய உளத்தில் உண்டாகும் முரண்களின் தன்மையைப் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். அல்லது தவறாக எண்ணிக்கொள்வார்கள். ஒருவனுக்கு சீரணக் கோளாறு உண்டாயிற்று. அதற்குக் காரணம் அவன் கலியாணமான பெண் ஒருத்தியை விரும்பியதே என்பதை அவன் அறியவில்லை. மருந்து உட் கொண்டும் பயன் பெறவில்லை. இறுதியில் உண்மையான காரணத்தை அறிந்து அந்த விருப்பத்தை நீக்கினான் ; சீரணம் சரியாக நடைபெற்றது.பொதுவாக மனிதன் தன்னுடைய உடலைப்பற்றியும் தன்னுடைய உளத்தைப்பற்றியும் தானே ஆய்ந்தறியும் பண்புடையவனாயில்லை. இவ்வாறு தன்னைத்தான் அறியாதிருத்தல் சாதாரண மக்களிடந்தான் காணப்படும் என்பதில்லை. தன்னை அறிந்து கொண்டிருப்பதாகப் பெருமை பேசுவோரிடமும் காணப்படும்.
மேலும், தன்னைத்தானே ஆய்ந்து மதிப்பிடுதல் என்பது எளிதான செயலுமன்று. ஒருவன் அவ்வாறு தன்னையே ஆராய்ந்தாலும் அவனுடைய ஆசைகளும் நம்பிக்கைகளும் நோக்கங்களும் அவனுடைய முடிவுகளைப் பாதித்துவிடுகின்றன. அதிலும் அவன் காணும் முடிவுகள் கசப்பானவைகளாக இருந்தால் அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, ஒரு காரணமிருக்க மற்றொரு காரணத்தைக் கூறுவான், தலைவனை முன்கோபி என்று தொழிலாளிகள் கூறுவர். ஆனால் அவனோ கட்டுப்பாட்டை நிறுவுபவனாகவே தன்னை எண்ணிக்கொள்வான். இவ்வாறு தம் ஆய்வைத் தவறானதாகச் செய்யும் காரணங்களே நினைவு கூர்தல் என்ற செயலையும் சீர் கெடச் செய்கின்றன.
மனப்பதிவுகள்
முன்னால் நடந்த நிகழ்ச்சிகளுள் மிகக் கசப்பானவற்றை மறந்துவிடுவது வழக்கம். கணவன் மனைவியிடம் சண்டையிட்டதை நினைவு கூர்வான். ஆனால் தன் சொற்படி அவள் கேளாவிடில் தற்கொலை செய்துகொள்வதற்குத் தான் அச்சுறுத்தியதை அவன் நினைவு கூர்வதில்லை. அதாவது, அவ்விதமாகத் தவறான நிகழ்ச்சிகள் என்று எண்ணுபவற்றை அவன் தன்னுடைய நனவிலி உளத்துக்குள் தள்ளி அழுத்திவிடுகிறான்.ஆனால் இவ்வாறு நனவிலி உளத்துக்குள் அழுத்தப்படும் நிகழ்ச்சிகள் முழுவதும் மறைந்துபோய் விடுவதில்லை. வேண்டியபோது வெளிவரக்கூடியனவாக உள்ளன. அவை கசப்பாயிருப்பதால் நோயாளி அவற்றை நினைவுகூரமாட்டான், நினைவு கூர்ந்தாலும் அவற்றின் உண்மையான தொடர்பை அறியமாட்டான். சிலர் அந்நிகழ்ச்சிகளை நனவிலி உளத்துக்குத் தள்ளிவிடாமல் நனவுளத்திலேயே தனியாகப் பிரித்துவைத்திருப்பர்.
உள்ளக்கிளர்ச்சியால் ஏற்பட்ட கோளாறு எந்த வகையான காரணத்தால் ஏற்படினும், அதன் குறிகள் உளம் பற்றியனவாகவோ அல்லது உடல் பற்றியனவாகவோ அல்லது இரண்டும் பற்றியனவாகவோ இருக்கும். உள்ளக் கிளர்ச்சியால் ஏற்படும் கோளாறுகள் உடம்பைத் தாக்குகின்றன என்னும் கருத்து மிகமுக்கியமானதாகும். ஆனால் நோயாளிகள் பெரும்பாலும் தங்கள் உடல் நோய்களுக்கு உடல்பற்றிய காரணங்களே உள்ளன என்று நம்புகிறார்கள். அதற்குக் காரணம் உள்ளக்கிளர்ச்சிக்கும் உடல்நோய்க்குமுள்ள தொடர்பை அவர்கள் அறிந்துகொள்ளாமையேயாகும். பலர் அறிந்துகொள்ள விரும்புவதுமில்லை. அதற்குக் காரணம் அவர்கள் நோய்க்குள்ள பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்பாமையே ஆகும்.உள்ளக்கிளர்ச்சியால் உடம்பில் ஏற்படும் மாறுதல்கள் முக்கியமாயினும், உடம்பில் ஏற்படும் கோளாறே உள்ளக்கிளர்ச்சிக் கோளாற்றை உண்டாக்கிற்று என்று கூறுதலாகாது. இரண்டும் ஒரே வேளையில் உண்டாயின என்று மட்டுமே கூறலாம்.சில வேளைகளில் உடல் நலம் குன்றலாம். அதன் காரணமாக உளநோய் ஏற்படுவதற்கு ஏற்ற உடல் நிலை ஏற்படும். உடம்பில் உரம் இல்லாதவர்களைக் கவலைகள் எளிதில் பற்றித் துன்புறுத்தும் என்பதை எல்லோரும் அறிவர்.
உடலியங்கியல்
பத்தாம் நூற்றாண்டில் இசுலாமிய அறிஞரொருவர், நரம்பியல் காரணங்களால் மனநோய் ஏற்படுவதை எடுத்துக் கூறினார்.[2] அதற்கு முன் மனநோய் என்பது வெளி உலகக்காரணிகளால் ஏற்படுகிறது என நம்பப்பட்டது. நாளமிலாச் சுரப்பிகளில் உண்டாகும் நொதிகள் நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றன. உள்ளக் கிளர்ச்சிகள் நாளமிலாச் சுரப்பிகளின் வேலைகளைப் பாதிக்கக்கூடும். அதன் காரணமாக மூளை வேலை பாதிக்கப்படக்கூடும். ஆகவே எது முதற் காரணம் என்று கண்டுபிடிப்பது கடினமானதாகும். இச்சுரப்பிகள் ஒன்றோடொன்று இணைந்தவை யாதலால் எந்தச் சுரப்பி, குறிப்பிட்ட உளநோயை உண்டாக்கிற்று என்று கூறுவது எளிதன்று. ஹார்மோன்களைக் கொடுக்கும் சிகிச்சை முறை உளக்கோளாறுகளுள் பலவற்றைக் குணப்படுத்துவதில்லை.ஆயினும் நாளமிலாச் சுரப்பிகளைக் கவனிக்க வேண்டியது அவசியமே. கடுமையான உளநோய்கள் (Psychoses) பெரும்பாலும் இனப்பெருக்க ஆற்றல் தோன்றுகின்ற பருவமடையும் வயதிலும், இனப்பெருக்க ஆற்றல் மறையப்போகும் பருவமடையும் வயதிலுமே உண்டாகின்றன. இந்த இரண்டு பருவங்களிலும் நாளமிலாச் சுரப்பிகள் வேலை செய்வதில் பெரிய மாறுதல்கள் உண்டாவதும், மாதவிடாய் உண்டாகும் போது உள்ளக்கிளர்ச்சிக் குழப்பங்கள் உண்டாவதும் வழக்கம். சிலரிடை மிகுந்த கேடுடையனவாகக்கூட இருக்கும். ஆயினும் அதை வைத்து மாதவிடாய்க் கோளாறுகள் உளக்கோளாறுகளுக்குக் காரணம் என்று கூறுதலாகாது.
பைத்தியம் (Mania) பரம்பரையாக வந்த உள அமைதியின்மையுடன் மிகுந்த உளவேலை, நோய்கள் வாயிலாக உண்டாகும் நஞ்சுகள், குழந்தை பெறுதல் போன்றவை சேர்ந்து இதை உண்டாக்குகின்றன. பொதுவாக இது 20-30 வயதிலேயே உண்டாகிறது. ஆண்களைவிடப் பெண்களையே மிகுதியாகத் தாக்குகிறது. இதற்குக் காரணம் குழந்தைப்பேறே என்று தோன்றுகிறது.
மேற்கோள்கள்
- https://www.medicinenet.com/mental_health_psychology/article.htm
- Haque, Amber (December 2004). "Psychology from Islamic Perspective: Contributions of Early Muslim Scholars and Challenges to Contemporary Muslim Psychologists". Journal of Religion and Health 43 (4): 357–377 [362]. doi:10.1007/s10943-004-4302-z.
ஆதாரங்கள்
- தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் 02 தொகுதியில் இருக்கும், 382 பக்கத்தின் தரவுகளும், இக்கட்டுரையில் பயன்பட்டுள்ளன.