மலையகத் தமிழர்

மலையகத் தமிழர் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும். இருப்பினும் இந்த "மலையகத் தமிழர்" எனும் பதத்திற்குள் தமிழரல்லாத தெலுங்கர், மலையாளியினரும் அடங்குவர். மலையகப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டு தமிழரே பெரும்பான்மையாக இருப்பதனால் அவர்களுடன் ஒன்றி வாழ்ந்த தெலுங்கரும் மலையாளிகளும் தமிழ் பேசுவோராக மாறிவிட்டனர். ஆங்கிலேயர் இவர்களை ஒரு அடிமை போன்றநிலையில் வைத்திருந்ததனாலும், அதன்பின்னர் தொடரும் ஒடுக்குமுறைகளினாலும் இம்மக்களின் வாழ்வு இலங்கையின் ஏனைய சமுதாயத்தினருடன் ஒப்பிட முடியாத அளவில் பின் தள்ளப்பட்ட வகையிலேயே உள்ளது. இந்த பின்னடைவு, விதிவிலக்காக ஒருசிலரை தவிர, கிட்டத்தட்ட அனைவரும் இந்தியாவில் உள்ள தமது உறவுகளுடனான உறவு துண்டிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் தமக்கு சொந்தமாக இருந்த நிலம் மற்றும் சொத்துக்களும் இழந்தவர்களாகிப் போயினர்.

மலையகத் தமிழர்
மொத்த மக்கள்தொகை
840,000 இலும் அதிகம்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இலங்கை       842,323 (4.16%)
(2012)[1]
மொழி(கள்)
தமிழ், சிங்களம்
சமயங்கள்
இந்து, ரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், பப்டிஸ்ட், மெதடிசம்,
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர், இலங்கைத் தமிழர்
இலங்கையின் தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்யும் மலையகத் தமிழர்கள்

இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும், அப்பிரதேசங்கள் சார்ந்து ஏனைய தொழில் நிலைகளில் உள்ளோரும், அவர் தம் வம்சாவழியினரும் "மலையகத் தமிழர்" என்றே அழைக்கப்பட்டப் போதும். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதால் "இந்தியத் தமிழர்" என்றும் "இந்திய வம்சாவளித் தமிழர்" எனும் பகுப்புக்குள்ளும் உள்ளடங்குவர். இலங்கையின் புள்ளிவிபர அறிக்கைகளில், அடையாள அட்டை வழங்கல் முறையில், மற்றும் ஏனைய பதிவுகளில் இந்தியத் தமிழர் எனக் குறிப்பிடப்படுவதும் நடைமுறையில் உள்ளது என்றபோதும், போத்துக்கீசரின் வருகைக்கு முன்னர் இருந்தே இந்தியாவில் இருந்து இலங்கையில் வந்து குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழர்கள் "மலையகத் தமிழர்" எனும் பகுப்புக்குள் உள்ளடங்கமாட்டார்கள்.

வரலாறு

இலங்கையில் இந்தியத் தமிழரது சதவீதப் பரம்பல் மூலம்: 2001 அல்லது 1981 கணிப்பீடு .[2]

1844 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிலிருந்து இலங்கையின் கோப்பி தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக, லுதினன் கேர்னல் என்றி சீ. பேர்ட் என்பவர் 14 பேரைச் சேர்த்துக்கொண்டார். இதுவே இந்தியாவிலிருந்து உத்தியோகப்பட்டசமாக வேலையாட்கள் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பமாக இருந்தபோதும், 1840 களின் தொடக்கத்தில் கோப்பி தோட்டங்கள் நிறுவப்படும் போது தோட்டங்களுக்கு அருகில் இந்திய வேலையாட்கள் காணப்பட்டனர். மேலும் 1818 ஆண்டு உதவி மன்னார் அரச அதிபர் பெருமளவிலான இந்திய கூலியாட்கள் கொழும்பு நோக்கிச் செல்வதக் கண்டதாக குறித்துள்ளார். இதன் படி 1844 ஆண்டுக்கு முன்னரும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வேலைத் தேடி தமிழர்கள் வந்தனர் எனலாம்.[3]

இவர்கள் நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் அமைந்திருந்த பெருந்தோட்டங்களிற் குடியேற்றப்பட்டனர். பிரித்தானிய முதலாளிகளின் கீழ் சுமார் 150 ஆண்டுகள் வரை கடுமையான சூழ்நிலைகளின் கீழ் உழைத்து இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக தேயிலை, இறப்பர் முதலியவற்றை உருவாக்கிக் கொடுத்தது இவர்களேயாவர். எனினும் 1948ல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கத்தால் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக அவர்களது வாக்குரிமை அற்றுப்போனது.

பின்னர் இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது. மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். 1979 புதிய யாப்பின் மூலம் அனைத்து இந்தியத் தமிழருக்கும் குடியரிமை கிடைத்தபோதும் பல நடைமுறை சிக்கல்களால் இவர்கள் தொடர்ந்தும் பெரும்பாலோர் நாடற்றவர்களாகவே இருக்கவேண்டியேற்பட்டது.

புகழ்பெற்ற மலையகத் தமிழர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.