இயற்சொல்
மொழியியல் சொற்களைப் பெயர் என்றும் வினை என்றும் பாகுபடுத்திக்கொள்ளும். தமிழ்மொழியில் இவற்றுடன் இடைச்சொல், உரிச்சொல் என்னும் பாகுபாடுகளும் உண்டு.
செய்யுள் ஈட்டிக்கொள்ளும் சொற்கள் என்று தொல்காப்பியம் சொற்களை வேறு வகையிலும் பாகுபடுத்திப் பார்க்கிறது. அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன.
இந்தப் பாகுபாடு பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே உரியது.
வினைச்சொற்களுக்கு இந்தப் பாகுபாடு இல்லை. [1] [2]
தொகுப்பு விளக்கம்
- இயற்சொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் இயற்சொல்
- திரிசொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் சேரி வழக்கில் கொச்சைப்படுதல் உண்டு. அவற்றைச் செய்யுட்கு உரியனவாகத் திரித்துக்கொள்ளும் சொல் திரிசொல்.
- திசைச்சொல் - தமிழ்நாட்டின் அடையும் புடையும் கிடந்த திசைநாட்டார் வழங்கும் சொல் திசைச்சொல்.
- வடசொல் - வடமொழிகளில் வழங்கும் சொல் வடசொல்.
இயற்சொல் – தனி விளக்கம்
இயற்சொல் என்பது செந்தமிழ் நிலத்து வழக்கு. [3] இதனைச் செஞ்சொல் என்றும் கூறலாம். [4]
- செந்தமிழ் நிலம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. வையை யாற்றின் வடக்கு, மருத யாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு [5]
- வடவேங்கடம், தென்குமரி, குணகடல், குடகடல் எல்லைக்கு உட்பட்ட நாடு [6]
- முதல் கருத்தே பொருந்தும். இரண்டாவது கருத்து பொருந்தாது. காரணம், வையை யாற்றின் தெற்கில் கொற்கை, கருவூரின் மேற்கில் கொடுங்கோளூர், மருத யாற்றின் வடக்கில் காஞ்சிபுரம். இங்குப் பேசப்படுவது திசைச்சொல்லே[7]
இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு
நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு, பாளிதம், மலை.
கருவிநூல்
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
- தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
மேற்கோள்
- தொல்காப்பியம் எச்சவியல் நூற்பா 1 முதல் 7
- நன்னூல் நூற்பா 270 முதல் 274
- இசைச்சொல் தாமே, செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே – தொல்காப்பியம்
- தெய்வச்சிலையார்
- இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர்
- தெய்வச்சிலையார்
- சுப்பிரமணிய சாஸ்திரி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.