இண்ட்ராப்

இந்து உரிமைகள் போராட்டக் குழு (Hindu Rights Action Force) அல்லது இண்ட்ராப் (HINDRAF, மலாய்: Barisan Bertindak Hak-Hak Hindu; சீனம்:兴权) மலேசியாவில் இயங்கி வரும் ஓர் இந்து உரிமைகள் போராட்டக் குழு ஆகும். இதன் மந்திரச் சுலோகம் "மக்கள் சக்தி". மலேசியாவின் முப்பது அரசு சார்பற்ற இந்து அமைப்புகளின் கூட்டணியாக இண்ட்ராப் விளங்குகிறது. மலேசிய இந்து மக்களின் உரிமைகள், கலாசார பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும் என்பது அதன் தலையாய கோட்பாடு ஆகும்[1].

இண்ட்ராப்
Hindu Rights Action Force
Barisan Bertindak Hak-Hak Hindu
HINDRAF
兴权
நிறுவனர்கள்மலேசிய இந்தியர்கள்
வகைமலேசிய இந்தியர்களின் உரிமைகள் போராட்டக் குழு
நிறுவப்பட்டது19 July 2009
தலைமையகம்கோலாலம்பூர்
மலேசியா
தோற்றம்கோலாலம்பூர்
வேலைசெய்வோர்ம.மனோகரன்
பொ.உதயகுமார்
கே.கெங்காதரன்
வேதமூர்த்தி
எஸ்.கணபதி ராவ்
சேவை புரியும் பகுதிமலேசியா மாநிலங்கள்
Focusமனித உரிமைகள்
மலேசிய இந்தியர்களின் தரத்தை உயர்த்துவது
வருமானம்மலேசிய இந்தியர்கள்
சொந்தக்காரர்மலேசிய இந்தியர்கள்
Mottoபோராட்டங்களின் வழி இந்திய சமுதாய மேம்பாடு
இணையத்தளம்இண்ட்ராப் இணையத்தளம்
கோலாலம்பூர் நகரில் ஹிந்த்ரஃபின் ஒரு போராட்டம்
A HINDRAF activist carries a poster of Queen Elizabeth II during the march to deliver their petition to the British High Commission.

கொள்கை

மலேசியாவில் வாழும் இந்து சமயத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான கொள்கையில் மலேசிய அரசு செயல்பட்டு வருகிறது என்பது இண்ட்ராப் குழுவின் குற்றச்சாட்டு. மலேசிய இந்தியர்களும் இந்து சமயமும் மலேசியாவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இண்ட்ராப் வலியுறுத்தி வருகிறது. அதன் காரணமாக தேசிய ரீதியில் இண்ட்ராப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.[2]

மலேசிய அரசால் இந்துக் கோயில் அழிப்பு நிறுத்தவேண்டும், ஐக்கிய இராச்சியமும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமும் மலேசியவை கண்டனம் செய்யவேண்டும் இண்ட்ராப்பின் முக்கிய நோக்கங்கள் ஆகும். வழக்கறிஞர்கள் ம. மனோகரன், பொ. உதயகுமார், பொ. வேதமூர்த்தி, கணபதி ராவ், கங்காதரன் ஆகியோர் இக்குழுவின் தலைவர்கள்.

மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டம்

இண்ட்ராப் போராட்டக் குழு ஒரு குண்டர் கும்பல்; அது சங்கங்களின் சட்டப்படி முறையாகப் பதிவு செய்யப்படவில்லை; ஐந்து வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி உருவாக்கிய ஓர் இயக்கம் என்று மலேசியத் தலைமை காவல் துறை இயக்குநர் 2007 டிசம்பர் 7ஆம் தேதி அறிவித்தார்.[3]. 2008 அக்டோபர் 15ஆம் தேதி, இண்ட்ராப் ஒரு சட்ட விரோத இயக்கம் என்று மலேசிய உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் சையட் ஹமீட் அல்பார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த இயக்கத்தில் பொதுமக்கள் உறுப்பியம் பெறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.[4]

பின்புலம்

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 8 விழுக்காட்டினர். ஏறக்குறைய 26 இலட்சம் பேர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இவர்களில் பெரும்பாலோர் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் பிரித்தானியர்களால் மலாயாவுக்கு கொண்டுவரப்பட்டனர். இன்றைய நாள் வரையிலும் மலேசிய இந்தியச் சமுதாயம் மற்ற சீன, மலாய்க்காரச் சமூங்களை விட மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது.

இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பான்மையோர் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் இந்த நாட்டிற்கு வந்த போது அவர்கள் வேலை செய்த தோட்டங்களில் இந்துக் கோயில்களைக் கட்டினர். இருப்பினும், பெரும்பாலான கோயில்கள் பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்யப்படாத கோயில்கள்

இதற்கிடையில், கடந்த முப்பது ஆண்டு காலத்தில் மலேசியாவில் பல்வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், தோட்டப்புறங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப் பட்டதும், அந்தத் தோட்டங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்படாமல் இருந்த கோயில்கள் இடிக்கப்பட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இது இந்திய சமூகத்தவரைப் பாதிக்கச் செய்தது. பல கோயில்கள் இடிக்கப்பட்டன.

குறிப்பாக, சிலாங்கூர் பாடாங் ஜாவாவில் இருந்த மகா மாரியம்மன் கோயில் 2007 நவம்பர் மாதம் 15ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தக் கோயில் இடிபாடுதான் மலேசிய இந்தியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சியாகும். மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார முறையை மலேசிய அரசு உதாசீனம் செய்து வருகிறது என்று இண்ட்ராப் குற்றம் சாட்டியது. [5]

கம்போங் மேடான் துர்நிகழ்ச்சி

மலேசிய இந்தியர்களும் இந்து சமயத்தைப் பினபற்றுபவர்களும் ஒதுக்கி வைக்கப்படுவதாக இண்ட்ராப் மலேசிய ஊடகங்களில் பரப்புரைகள் செய்தது. அதற்கு கோலாலம்பூர், கம்போங் மேடான் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய 100 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டதை ஆதாரம் காட்டியது. அது ஒரு துர்நிகழ்ச்சியாகும். [6]

இண்ட்ராப் தனது பரப்புரைகளை மேடைப் பேச்சுகள், புத்தக வெளியீடுகள், துண்டு அறிக்கைகள் மூலமாக வெளியிட்டு வருகிறது. குறும் செய்தி வழியாகவும் செய்திகள் இந்தியர்களிடம் சென்று அடைகின்றன. ஆனால், குண்டர் கும்பல் அணுகு முறையில் மலேசிய அரசாங்கத்திற்கு நெருக்குதல் வழங்கி வருவதாக இண்ட்ராப் குழுவினரை அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது.

கோயில்கள் தகர்ப்பு

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் பல இந்துக் கோயில்களை இடித்துத் தள்ளியது.[7] 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கோலாலம்பூரில் புகழ்பெற்ற மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோயிலை, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் மண்தகரிகள் (bulldozers) இடித்து மண்மேடாக்கியது. [8]

சிலாங்கூர் ஷாஆலாம் நகரில் உள்ள 107ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓர் இந்துக் கோயிலை உடைப்பதில் இருந்து தவிர்ப்பதற்கு சுபாங் பயனீட்டாளர் சங்கத் தலைவர் அரும் முயற்சிகளை மேற்கொண்டார். மலேசியாவில் தீவிரம் அடைந்து வரும் இஸ்லாமியத்தைக் கண்டு, இங்குள்ள சிறுபான்மை சமயத்தைச் சார்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். [9]2006ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அதிகாரிகள் ஓர் அறுபது ஆண்டு கால இந்துக் கோயிலை இடித்துத் தள்ளினர். அந்தக் கோயிலை 1000 இந்துக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்து பரிந்துரைக் குழுமங்கள்

கோயில்கள் உடைப்பதை நிறுத்தும்படி மலேசியப் பிரதமருக்கு இண்ட்ராப் பல முறையீடுகளைச் செய்தது. இருப்பினும், சரியான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. [10] மலேசியாவில் உள்ள இந்துக் கோயில்கள் திட்டமிடப்பட்டு அப்புறப்படுத்தப் படுகின்றன என்று பல இந்து பரிந்துரைக் குழுமங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவற்றுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கும் ஒரே அதிகாரப்பூர்வ காரணம், கோயில்கள் சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்பட்டுள்ளன என்பதாகும். இருப்பினும் சில கோயில்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.[10]

இண்ட்ராப்பின் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு ஓர் இந்துக் கோயில் உடைக்கப்படுகின்றது. [11] பலவந்தமான முறையில் சமய மாற்றம் செய்யப்படுவதற்கு ஏதுவான வகையில், நாட்டில் சட்டங்கள் இயங்கி வருகின்றன எனும் கருத்துகள் பரவலாக நிலவி வருகின்றன. [12]

இண்ட்ராப் பேரணி

மலேசியாவில் இந்துக் கோயில்கள் இடித்து தகர்க்கப்படுவதை நிறுத்தவேண்டும்; இன, மொழி, சமய, கலாசார அடிப்படையில் மலேசியாவின் சிறுபான்மையினர் நசுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்; ஐக்கிய இராச்சியமும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இண்ட்ராபின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இண்ட்ராப் ஒரு மாபெரும் பேரணியைக் கோலாலம்பூரில் நடத்தியது. இந்த அமைதிப் பேரணியில் 150,000லிருந்து 200,000 மலேசிய இந்தியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பாய்ச்சினர். அதனால் பலர் காயம் அடைந்தனர். அந்தப் பேரணி மலேசிய அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆளும் கட்சி தேர்தலில் தோல்வி

2007ஆம் ஆண்டு அமைதிப் பேரணியின் தாக்கத்தின் காரணமாக, அதற்கு அடுத்த ஆண்டு 2008இல் மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் பாரிசான் நேசனல் அரசாங்கம் நான்கு மாநிலங்களைப் பறிகொடுத்தது. அந்த மாநிலங்களில் பினாங்கு மாநிலமும் ஒன்றாகும். பின்னர், இந்த மாநிலத்திற்கு ஒரு தமிழர் மாநிலத் துணையமைச்சராக நியமிக்கப்பட்டார். மலேசிய வரலாற்றில் ஒரு தமிழர் ஒரு மாநிலத்தின் துணை முதல்வரானது அதுவே முதல் முறையாகும்.

வழக்கறிஞர்கள் ம. மனோகரன், பொ. உதயகுமார், பொ. வேதமூர்த்தி, வி.எஸ். கணபதி ராவ், கங்காதரன் ஆகியோர் இண்ட்ராப் குழுவின் தலைவர்கள் ஆகும். 2007இல் கோலாலம்பூரில் ஓர் இந்துக் கோயில் உடைக்கப் படுவதற்கு எதிராக இவர்கள் போராட்டம் செய்த போது மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர். அரசப் பகை மூட்டுக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தைப்பிங் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டனர்.

மலேசிய இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் எழுச்சி பெற, மேன்மை பெற புறப்பட்டவர்கள்தான் இந்த உரிமை நடவடிக்கைப் படையினர்.

பாக்காத்தான் ஹரப்பான்

2018 ஆம் ஆண்டில் இந்து உரிமைகள் போராட்டக் குழு (Hindu Rights Action Force) அல்லது இண்ட்ராப் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரித்தது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.