இசுடாம்போர்டு இராஃபிள்சு
சேர் தாமசு இசுடாம்போர்டு இராஃபிள்சு, எஃப்ஆர்எஸ் (Sir Thomas Stamford Raffles, 6 சூலை 1781 – 5 சூலை 1826) பிரித்தானிய அரசியலாளரும், பிரித்தானிய சாவகத்தின் துணைநிலை ஆளுநரும் (1811–1815) பிரித்தானிய பென்கூலனின் ஆளுநரும் (1817–1822), சிங்கப்பூரை நிறுவியவரும் ஆவார். தவிரவும் நெப்போலியப் போர்களின் அங்கமாக டச்சு, பிரான்சியப் படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான சாவகத்தை கைப்பற்றி பிரித்தானியப் பேரரசை விரிவாக்குவதில் பெருபங்காற்றியவரும் ஆவார். தொழில்முறை அல்லாத எழுத்தாளராக சாவகத்தின் வரலாறு (தி ஹிஸ்டரி ஆப் ஜாவா) என்ற நூலை எழுதியுள்ளார்.
சேர் தாமசு இசுடாம்போர்டு பிங்லி இராஃபிள்சு | |
---|---|
![]() | |
பிறப்பு | 6 July 1781[1] ஜமேக்காவின் கடலோரத்திற்கு வெளியே |
இறப்பு | 5 July 1826 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 44)
பணி | பிரித்தானிய குடியேற்றவாத அலுவலர் |
அறியப்படுவது | பிரித்தானிய சிங்கப்பூரை நிறுவியவர் |
சமயம் | ஆங்கிலிக்கம் |
வாழ்க்கைத் துணை | ஒலீவியா மாரியெம்னெ தெவெனிசு ம. 1805, மு. 1814 சோபியா ஹல் ம. 1817, மு. 1858 |
இளமைக்காலம்
இராபிள்சு ஜமேக்காவின் மோரான்ட் துறைமுகத்தில் கடலில் இருந்த ஆன் என்ற கப்பலில் கப்பல் தலைவர் பெஞ்சமின் இராபிள்சுக்கும் ஆன் ராபிள்சுக்கும் சூலை 6, 1781இல் பிறந்தார். பெஞ்சமின் இராபிள்சு யார்க்சையரைச் சேர்ந்தவர். அமெரிக்கப் புரட்சியின்போது மேற்கிந்தியத் தீவுகளில் வணிகம் மேற்கொள்ள முற்பட்ட பெஞ்சமினின் முயற்சி தோல்வியடைந்ததால் அக்குடும்பம் வறுமையில் வாடியது. இருப்பினும் குறைந்த வருமானத்திலும் இராபிள்சின் கல்வி தொடர்ந்தது. தங்குபள்ளி ஒன்றில் கல்வி கற்றார். 1795இல், 14 அகவையில், இடாம்போர்டு இலண்டனில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார். 1805இல் மலேசியாவில் தற்போது பினாங்கு என அறியப்படும் நாட்டிற்கு அனுப்பப் பட்டார். அக்காலத்தில் வேல்சு இளவரசர் தீவு என அழைக்கப்பட்ட அப்பகுதியில் தமது தென்கிழக்காசிய வாழ்க்கையைத் தொடங்கினார். பினாங்கின் ஆளுநர் பிலிப் துண்டாசின் கீழ் பணி புரிந்தார்.
1805இல் புதிய ஆளுநருக்கு துணைச் செயலராக நியமிக்கப்பட்டார். அவ்வாண்டு ஒலீவியா மாரியம்னெ தெவெனிசை திருமணம் புரிந்தார். சென்னையில் துணை அறுவைமருத்துவராக இருந்த பேன்கோர்ட்டை மணம் புரிந்திருந்த ஒலீவியா அவரது மறைவிற்குப் பிறகு இசுடாம்போர்டை மணம் புரிந்திருந்தார். அடுத்த இருபதாண்டுகளுக்கு உடனிருந்த தாமசு ஒத்தோ டிராவர்சின் அறிமுகமும் இச்சமயத்தில் அவருக்கு கிடைத்தது.
மலாய் மொழி அறிந்திருந்தமையாலும் பேச்சு வன்மையாலும் ஈர்க்கப்பட்ட இந்தியத் தலைமை ஆளுநர், மின்டோ பிரபு இவரை மலாக்காவிற்கு அனுப்பினார். 1811இல் நெப்போலியப் போர்களின்போது பிரான்சு ஆலந்து நாட்டை கைப்பற்றியபோது இராபிள்சு அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. டச்சு, பிரான்சியப் படைகளுக்கு எதிராக இந்தோனேசியாவின் சாவகத் தீவில் நடத்தப்பட்ட போரில் பங்கேற்றார். 45 நாட்கள் நடந்த போரில் சாவகத் தீவை கைப்பற்றியதை அடுத்து மின்டோ பிரபு இராபிள்சை துணைநிலை ஆளுநராக நியமித்தார். எஞ்சியிருந்த எதிர்ப்பாளர்களிடம் அமைதிப் பேச்சு நடத்தி உள்ளூர் அரசர்களை பிரித்தானிய ஆட்சியை ஏற்க வைத்தார். சாவகத்தின் இரண்டு முதன்மையான உள்ளூர் அரசுகளில் ஒன்றான யோக்யாகார்த்தாவின் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றினார்.[2] பிரித்தானிய தாக்குதலை அடுத்து மத்திய சாவகத்தில் அமைதி திரும்பினாலும் நிலையற்றத் தன்மைக்கும் ஐரோப்பியர்களுக்கு எதிரான வெறுப்பிற்கும் வித்திட்டது; இது 1820களில் சாவகப் போர் மூளக் காரணமாகவும் அமைந்தது.[3] சுமாத்திராவின் பெலாம்பங் பகுதியில் ஆண்டுவந்த உள்ளூர் சுல்தான் மகமது பகருதீனை வீழ்த்தி அருகிலிருந்த பங்காத் தீவையும் கைப்பற்றி அப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியை நிறுவினார்.

தாம் துணைநிலை ஆளுநராக இருந்த காலத்தில் ஆசியாவில் பிரித்தானியக் கொள்கைகளுக்கேற்ப அடிமை வணிகத்தைக் கட்டுப்படுத்தினார்; இருப்பினும் அடிமைகள் வணிகம் முற்றிலும் கட்டுப்படுத்தபடவில்லை; இராபிள்சின் மாளிகையிலேயே பல அடிமைகள் ஊழியம் செய்து வந்தனர்.[4] இராபிள்சின் வழிகாட்டுதலில் சாவகத்தின் பல தொன்மையான கட்டிடங்கள் முதனமுதலாக ஆவணப்படுத்தப்பட்டன. காலின் மெக்கன்சீ முதல் பிரம்பானான் கோயில் குறித்த ஆங்கில குறிப்புக்களைத் தொகுத்தார்; எச்.சி. கார்னிலியசு போரோபுதூர் சூழ்ந்திருந்த தாவரப்புதர்களை நீக்கினார்.[5] தவிரவும் டச்சுக்காரர்கள் கடைபிடித்த கொள்கைகளுக்கு மாறாக பணம்சார்ந்த குத்தகை நில மேலாண்மைக் கொள்கையை வகுத்தார்.
தீவின் கடுமையான வாழ்நிலைக் காரணங்களால் அவரது மனைவி ஒலீவியா நவம்பர் 26, 1814இல் மறைந்தார். இந்த மறைவினால் மிகவும் பாதிக்கப்பட்ட இராபிள்சு இங்கிலாந்து திரும்பினார். நெப்போலியப் போர்களின் இறுதியில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக சாவகம் நெதர்லாந்திற்கு மீட்கப்பட்டது.
மேற்சான்றுகள்
- "Sir Stamford Raffles's family". Singapore Government. பார்த்த நாள் 13 December 2014.
- Ricklefs, M. C. A History of Modern Indonesia Since C. 1200, 4th Edition, Palgrave Macmillan, 2008
- Carey, Peter, The Power of Prophecy: Prince Dipanagara and the End of an Old Order in Java, 1785-1855, 2008
- Hahn, Emily, Raffles of Singapore, 1946
- Miksic, John, Borobudur: Golden Tales of the Buddhas, 1990
வெளி இணைப்புகள்
- Biography at the Raffles Museum of Biodiversity Research
- Find-A-Grave profile for Sir Thomas Stamford Raffles
- The natural history of game birds by Sir William Jardine with a memoir on Sir Stamford Raffles
- The History of Java by Sir Stamford Raffles at the Internet Archive.
- Raffles and the Golden Opportunity, The Guardian, 5 December 2012