இங்கிலாந்தின் முதலாம் மேரி
முதலாம் மேரி (Mary I, 18 பெப்ரவரி 1516 – 17 நவம்பர் 1558) சூலை 1553 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்து அயர்லாந்து இராச்சியங்களின் அரசியாக இருந்தவர். இங்கிலாந்து அவரது தந்தை எட்டாம் என்றியின் காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையைத் தழுவியிருந்தது; இதனை மாற்றி இங்கிலாந்தை மீளவும் கத்தோலிக்க வழிகளுக்குத் திருப்ப அவர் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறார். இதற்காக அவர் நிறைவேற்றிய கொலைகளை அடுத்து அவரை சீ்ர்திருத்த வாத எதிரிகள் "பிளடி மேரி" (குருதிக்கறை மேரி) என அழைத்தனர்.
மேரி I | |
---|---|
அந்தோனிசு மோரின் ஓவியம், 1554 | |
ஆட்சிக்காலம் | சூலை 1553[1] – 17 நவம்பர் 1558 |
முடிசூடல் | 1 அக்டோபர் 1553 |
முன்னையவர் | ஜேன் (பிணக்கில்) அல்லது இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு |
பின்னையவர் | இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் |
இணை-அரியணை | பிலிப்பு |
பதவிக்காலம் | 16 சனவரி 1556 – 17 நவம்பர் 1558 |
வாழ்க்கைத் துணை | எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு (தி. 1554) |
குடும்பம் | துடோர் |
தந்தை | இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி |
தாய் | காத்தரீன் |
பிறப்பு | 18 பெப்ரவரி 1516 பிளசென்சியா அரண்மனை, கிரேனிச் |
இறப்பு | 17 நவம்பர் 1558 (அகவை 42) புனித ஜேம்சு அரண்மனை, இலண்டன் |
அடக்கம் | 14 திசம்பர் 1558 வெஸ்ட்மின்ஸ்டர் மடம், இலண்டன் |
கையொப்பம் | |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
எட்டாம் என்றியின் முதல் மனைவி காத்தரீனுக்குப் பிறந்தவர்களில் மேரி மட்டுமே எஞ்சிய ஒரே பெரியவளாகும் வரை உயிருடன் இருந்த மகவாகும். 1547இல் மேரியின் தம்பி (என்றியின் இரண்டாம் மனைவி ஜேன் செய்மோருக்குப் பிறந்தவர்) இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு ஒன்பது அகவையில் அரியணை ஏறினார். 1553இல் உயிர்க்கொல்லி நோயொன்றுக்கு எட்வர்டு வீழ்ந்தபோது தனக்கு அடுத்த வாரிசுப் பட்டியலிலிருந்து மேரியின் பெயரை நீக்க முயன்றார். தனது ஆட்சியில் தான் கொணர்ந்த சீர்திருத்த கிறித்தவத்திற்கு எதிராக மேரி செயல்படுவார் என எண்ணியே (அவரது எண்ணம் பின்னாளில் உறுதியானது) இத்தகைய முயற்சியை மேற்கொண்டார். அவரது மரணத்திற்குப் பின்னர் முன்னணி அரசியல்வாதிகள் சீமாட்டி ஜேன் கிரேயை அரசியாக்க முயன்றனர். மேரி கிழக்கு ஆங்கிலயாவில் ஓர் படையைத் திரட்டி ஜேனை பதிவியிலிருந்து தீக்கினார்; இறுதியில் ஜேனின் தலை துண்டிக்கப்பட்டது. ஜேன் மற்றும் மத்தில்டா ஆகியோரின் ஐயுறாவான பதவிக்காலத்தை தவிர்த்தால் மேரியே இங்கிலாந்தை ஆண்ட முதல் அரசியாவார். 1554இல் மேரி எசுப்பானியாவின் பிலிப்பை திருமணம் புரிந்து 1556இல் அவர் அரசராக பதவியேற்ற பின் ஆப்சுபர்கு எசுப்பானியாவின் உடனுறை துணை ஆனார்; இருப்பினும் மேரி எசுப்பானியா சென்றதில்லை.
மேரியின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் மேரியின் ஒறுத்தல்கள் என அழைக்கப்படும் சமய ஒறுத்தலில் 280க்கும் கூடுதலானவர்களுக்கு எரிக்கவைத்து மரணதண்டனை வழங்கினார். 1558இல் மேரியின் மரணத்திற்குப் பின்னர், என்றிக்கும் ஆன் பொலினுக்கும் பிறந்த அவரது சகோதரி மற்றும் அடுத்த வாரிசான இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத், அவரால் மீள்நிறுவப்பட்ட கத்தோலிக்கத்தை மாற்றி திரும்பவும் சீர்திருத்த சபையை நிறுவினார்.
குறிப்புகள்
- மேரியின் சோதரர் 6 சூலை அன்று இறந்தார்; இலண்டனில் சூலை 19 அன்று அவரது வாரிசாக மேரி அறிவிக்கப்பட்டார், இவரது ஆட்சிக்காலம் 24 சூலை எனக் கொள்ளப்படுகின்றது (Weir, p. 160).